Showing posts with label மும்பை. Show all posts
Showing posts with label மும்பை. Show all posts

ரட்சாபந்தன் கயிற்றில் ரட்சை உண்டா ?

நாளை வட இந்தியர்கள் இரட்சாபந்தன் பண்டிகை கொண்டாடுகிறார்கள். ஆவணிமாத முழுநிலவில் சகோதரிகள் தங்களைக் காப்பாற்றும் சகோதரர்களின் 'இரட்சைக்காக' காப்புக் கயிறு கட்டுவதே இப்பண்டிகையின் சிறப்பாகும். சகோதர்களும் சளைக்காமல் பதில் பரிசுகள் தருவதும் வழக்கமே. வணிகமயமான உலகில் இது போல ஒரு வாய்ப்பை நழுவ விடுவார்களா ? வண்ணமயமான காப்புக்கயிறுகள் பலவித உருவங்களுடன் ரூ.20 இலிருந்து ரூ.450 வரை விற்பனையாகின்றன. இவற்றின் பின் இருக்கும் அபாயத்தை பயனர்கள் முழுவதும் அறிவார்களா என
இந்த DNA செய்தி - Beware of these rakhis - Daily News & Analysis கேட்கிறது.

பரம்பரை இராக்கி சாதாரண கயிற்றில் மணி கோர்த்தது. ஆனால் தற்போதைய ராக்கியில் அழகான பொம்மை உருவங்கள், கார்ட்டூன் வடிவங்கள்,் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 'பிராண்ட்' பெற்ற பொம்மைகளே ஈயம் கலந்து நச்சுத்தன்மை பெற்றிருப்பதாக அறிக்கை வரும்போது வருமிடம் தெரியாத இவற்றின் தரம் பற்றி ஏதும் தெரியாது. முக்கியமாக குழந்தைகளைக் கவரும் வண்ணங்களில் வரும் இவற்றில் உள்ள ஈயம கலந்த வண்ணம்் அவர்கள் உட்கொள்வதானால் அவர்களது மூளை வளர்ச்சியை அது பாதிக்கும் என அது எச்சரிக்கிறது.

நமது தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் என்ன செய்கின்றன ? கோலாவின் நச்சுத்தனமையை வெளிக்கொணர்ந்த ஆய்வுநிலையங்கள் எங்கே போயின ?

இங்கு காதலிப்பது குற்றம்

அண்மையில் மும்பை காவல்துறை நன்னடத்தைக் காவலர்களாக வலம் வருகிறார்கள். சென்ற வாரம் பாந்திரா கடற்கரை, தானெ உப்வான் ஏரி மற்றும் புதுமும்பை பகுதிகளில் 'ரெய்ட்' நடத்தி இளஞ்சோடிகளை கைது செய்துள்ளனர். அவர்களின் குற்றம் அருகருகே அமர்ந்து இயற்கையை இரசித்ததுதான். ஆளுக்கு ரூ.1200/- அபராதமும் விதித்தனர். பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துமுகமாக கைகளைப் பிணைத்துக் கொண்டும் கட்டிஅணைத்தும் இருந்திருக்கிறார்கள். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என காதலர்களும் பெற்றோர்களும் எதிர்ப்புக் குரல் தெரிவித்திருக்கிறார்கள்.

மும்பை ஒரு தூங்காத நகரம். அமைதியாக தூங்கவும் இடம் இல்லாத நகரம். சிறிய அடுக்ககங்களில் தனிமையும் அமைதியும் கிடைக்காத சூழல். இந்நிலையில் மணமான ஜோடிகளே இயற்கையிடங்களை நாடும் தேவை எழுகின்ற நகரம். மேற்கத்திய நாகரீகத்தினை மால்களும் திரைப்படங்களும் பரப்புகின்ற தாக்கத்தினூடே இயற்கையான மும்பையின் பரந்த மனப்பான்மை மக்களிடையே காவலர்கள் தங்கள் எல்லைகளை மீறுகிறார்கள் என்ற எண்ணத்தை எழுப்பி வருகிறது. அடிக்கடி நிகழும் தீவிரவாத செயல்களைத் தடுத்து நிறுத்த முடியாத காவல்துறையினர் இளஞ்சோடிகளிடம் தங்கள் வீரத்தைக் காண்பிப்பதாக பத்திரிகைகளில் கடிதம் எழுதுகிறார்கள்.

இந்த விவாதத்தின் இருபக்கங்களிலும் உண்மையில்லாமல் இல்லை. காவலர்களுக்கென்று இல்லாவிடினும் செல்பேசி ஆபாசப்படங்கள் வலம்வரும் இந்நாட்களில் பொது இடங்களில் இளஞ்சோடிகள் மெய்மறந்திருப்பது அவர்களது தனிவாழ்விற்கு கேடானதே. கிழக்கும் மேற்கும் இல்லாத இரண்டுங்கெட்டான் கலாசாரத்தில் இது குழப்பத்தையே விளைவிக்கும். அதேசமயம் இரும்புமனம் படைத்த குற்றவாளிகளுடன் பழகிய காவலர்கள் கரும்புவில்லால் அடிபட்டவர்களை முரட்டுத்தனமாக நடத்துவதும் விரும்பத் தக்கதல்ல. சற்றே எல்லை மீறுபவர்களையும் எச்சரித்து கண்ணியமாக கலைத்திருக்கலாம்.

மும்பையை ஷாங்கை ஆக்குவதாக அரசியலார் முழங்குகிறார்கள்;அதற்குமுன் பாரிஸ் ஆகிவிடும் போலிருக்கிறது.

தொடர்புள்ள சுட்டி: மும்பை இணை காவல் ஆணையரின் நேர்முகம்

9% வளர்ச்சி, மின்வெட்டு கூடுகிறது !

இந்தியா ஒளிர்கிறது என்றார்கள், எங்கள் வீடுகளில் மட்டும் மின்விளக்கு ஒளிர்வதில்லை. தேசிய உற்பத்தி 9% மேல் என்று பெருமைபட்டார்கள். பார்ப்பதற்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கு 'சக்தி' இல்லை. அடிப்படைக் கட்டுமானம் இல்லாமலே இந்த வளர்ச்சி என்றால் முழு வசதிகளும் இருந்தால் எங்கே போயிருப்போமோ ? நான் குறிப்பிடுவது மகாராஷ்ட்டிரத்தில் இப்போது நிலவும் மின்சார பஞ்சத்தை. இந்தியா முழுமையுமே மின்பற்றாக்குறையில் தவித்தாலும் இங்கு நாளும் ஐந்து/ஆறு மணிநேர மின்வெட்டு மக்களைப் படுத்துகிறது. இதுதவிர தொழிலகங்களுக்கு வாரத்தில் இருநாட்கள் 100% மின்வெட்டு. இந்த அழகில் மும்பை மாநகருக்கு மட்டும் முழு விதிவிலக்கு.

'ஒரு காலத்தில்' மின்னுற்பத்தியில் உபரியாக இருந்த மாநிலம் தொடர்ந்த அரசியல் அக்கறையின்மையால் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. என்ரானின் தபோல் மின்னிலையம் வழங்கவிருந்த அளவை வைத்து வேறெதுவும் முயலாமல், இன்று என்ரானின் வீழ்ச்சியோடு மகாராஷ்ட்டிர மின் உற்பத்தியும் படுத்துவிட்டது. மீண்டும் தபோல் மின் நிலையத்தை உயிர்ப்பிக்க முயன்று பழுதுபட்ட இயந்திரங்களை 'ஒன்றிற்கொன்று மாற்றிக்கொண்டு' (cannibalise) சிறிது வெற்றி பெற்றிருக்கிறார்கள். அது யானைப் பசிக்கு சோளப் பொரியாக இருக்கிறது. உற்பத்தியைப் பெருக்க முடியாததால் மக்களை செலவழிப்பதை 20% வரை தாங்களாகவே குறைக்க வேண்டியிருக்கிறார்கள். அதற்கும் ஒரு முறையான பிரசாரமோ நடைமுறை விளக்கங்களோ கிடையாது.

'துடிப்பான குஜராத்' (Vibrant Gujarat) தொழில்முனைவோரை தன்பக்கம் இழுக்கும் வேளையில் இந்த மின்பஞ்சம் அதனை துரிதப் படுத்தும். இந்த நிலையில் 2012இல் இவ்வளவு முன்னேற்றம் வரப்போகிறது என்பதெல்லாம் வரும் ஜில்லா பரிசத் தேர்தல்களுக்கு உதவலாம், நடப்பிற்கு உதவாது. அண்மை மாநில ஆந்திரத்திலிருந்து கடன் வாங்கலாம் என்றால் அவர்களிடம் அனல்மின்நிலையங்களுக்கு எரிசக்தி யாக இயற்கை வாயு தட்டுப்பாடாம். அதனால் விலையுள்ள நாஃப்தா கொண்டு தயாரித்து வழங்க இம்மாநிலம் கேட்டுள்ளது, ஒரு யூனிட் ரூ9 ஆனாலும் பரவாயில்லை என்று.
அதனால் துண்டு விழும் தொகையை நாம்தான் வரியாகக் கொடுக்கவேண்டும். நம்மைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இந்த மின்பஞ்சத்திற்கு மாநில மின் துறை அமைச்சர் தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவராதலால் காங்கிரஸ் அந்தக் கட்சியைக் குறைகாண்பதிலும், மத்திய மின்துறை அமைச்சர் ஷிண்டே காங்கிரஸ்காரர் ஆதலால் இவர்கள் காங்கிரஸைக் குறை காண்பதிலும் அடித்துக்கொண்டிருக்க எதிர்கட்சிகள் சிவசேனையும் பாஜகவும் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.

மராத்திகள் மிகவும் பொறுமையானவர்கள்தான்.

பெருவிழாக் காலம்!

ஆட்டம் போடவோ கூட்டம் போடவோ பாட்டம் தீர்க்கவோ மும்பைக்கு வாருங்கள், இது பெரு விழாக் காலம்!! விடிய விடிய 'கர்பா', 'தாண்டியா ராஸ்' கும்மியாட்டம் போடும் குஜராத்தி மேளாக்கள், உருமி மேளத்துடன் ஆரத்தி சுற்றி கொண்டாடும் பெங்காலிகளின் துர்கா பந்தல்கள், படிகளில் கொலு வைத்து வீட்டிற்கு அழைக்கும் நம்மூர் பெண்கள் இவர்களுடன் தங்கள் புனித இரம்ஜான் விரதநாட்களைக் கொண்டாடும் முஸ்லீம்களின் இஃப்தார் விருந்துகள் என நகரமே கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கிறது. இப்போதுதான் நடந்து முடிந்த கணபதி உற்சவமும் மலையாளிகளின் ஓண கொண்டாட்டங்களும் அவற்றின் தாக்கத்தை இன்னும் விடவில்லை.

மூன்று மாதங்கள் முன்னால் இந்நகரிலா குண்டு வெடித்து 187 பேர் இறந்தனர் என வியக்க வைக்கிறது. பன்முக கலாசாரத்தின் வெளிப்பாடு இனிமையாக இருக்கிறது. "இந்த காக்ரா சோளி எப்படி இருக்கிறது" என்று கர்பாமேளாவிற்கு விரையும் செம்பூர் மாமியையும் அலுவலகம் முடிந்ததும் முகமது அலி ரோடிற்கு விரையும் மலையாள சேட்டனையும் துர்காபந்தலில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் சலீம்பாயையும் சாதாரணமாகப் பார்க்கலாம்.

தானேயின் துர்காபந்தலில் இந்த வருடம் உடற்குறையுற்றோருக்கு தனி முகாம்கள் நடத்தப் படுகின்றன. சமூகத்தின் நலிவடைந்தோருக்கு பண உதவியும் அளிக்கப் படுகின்றன. விழாக்களின் உற்சாகம் அனைவரையும் அடைய வேண்டும் என்பதே இவர்கள் கொள்கை. இங்கே ஐஐடி அருகே ஹிரநந்தானி பார்க்கில் கொல்கொத்தாவின் தக்ஷினேஸ்வர் காளி கோவிலை அப்படியே நகல் எடுத்துள்ளார்கள்.

மாலையின் இருள் கவியத்தொடங்கிய உடன் மும்பையின் பள்ளிவாசல்கள் உயிர்த்தெழும். இரம்ஜான் விரதம் இருக்க வேண்டிய மாதம் என்றாலும் மும்பைகாரர்களுக்கு அது இஃப்தார் விருந்துகளின் மாதமாகும். முஸ்லீம் சகோதரர்கள் தங்கள் இந்து சகோதர்களை அழைக்க இது ஒரு காரணமாகிறது. தாங்கள் விரதத்தை விருந்தினர்களுடன் முடித்துக் கொள்வது அல்லாவின் அருள் எனக் கருதுவதால் இது ஒரு socialising நிகழ்வாக மாறியுள்ளது.

குஜராத்திகளின் தாண்டியா மேளாக்களில் பல்குனி பதக் நடத்தும் நிகழ்ச்சி சிறப்பானது. இங்கு கும்மியாட்டம் போட ஒரு மாதம் முன்பே தனி வகுப்புகள் ஆரம்பித்து விடும். விடிய விடிய ஆட ஆசை இருந்தாலும் தற்கால காவல்விதிமுறைகள் நள்ளிரவிற்கு முன்பே அதிகாரபூர்வமாக (அனுமதியில்லாமல் காவலரின் தயவில் நீட்டித்துக் கொள்வது வேறு) முடித்துக் கொள்ள வைக்கின்றன.

அரபிக்கடலில் புயல் சின்னம் என்று விழாக்களை பூச்சாண்டி காட்டிய வானிலை கூட இப்போது அமைதியாக விழா மாந்தரைக் கண்டு மயங்கியிருக்கிறது. நவராத்திரி, தசரா, இரம்ஜான் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் விழாக்கால வாழ்த்துக்கள்!!

மும்பை வாழ்க!

அலுவலகப் பணிகளை செவ்வனே நிறைவேற்றி வீட்டின் பணிகளை எதிர்நோக்கி விரையும் செக்ரடரிகள்; பச்சிளம்பாலகனின் பிறந்தநாளைக் கொண்டாட மதியஉணவு இடைவேளையில் வாங்கிய பொம்மையுடன் மகிழ்ச்சியான இரவை எதிர்நோக்கும் குமாஸ்தாக்கள்; கல்லூரியின் தேர்வுப்பட்டியலில் பெயரைக் கண்ட மகிழ்ச்சியை பகிர விரையும் மாணவர்கள்; நாளும் சிறுசிறு பொருட்களை விற்று வயிறு வளர்க்கும் சிறார்கள் .. நேற்று மாலை 6:24லிருந்து 6:35க்குள் சிதறியது அவர்கள் உடல்களா, இல்லை கனவுகளா ? பெனாத்தலார் கேட்கிறார் இதுதான் வீரமா?

இல்லை, இன்று பின்னலைப் பின்னால் இழுத்து பக்கத்தில் இருப்பவனை அறையச் செய்யும் சூழ்ச்சியை இனம் கண்ட முகம் இல்லா நடுத்தட்டு மக்களின் உறுதியான எதிர்கொள்ளல் அன்றோ வீரம் ?சாரி சாரியாக காரிகையர் அதே மின்வண்டியில் பயணித்து வன்முறையால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என்று உலகுக்குக் காட்டுவதன்றோ வீரம் ? பிரிவினை தூண்டுபவரை புறம்தள்ளி துயரத்தில் பங்கேற்போம்,இணைந்திருந்து எதிரியை எதிர்கொள்வோம் எனும் சாமான்யனின் வீரத்தைப் போற்றுவோம். வாழ்க மும்பைகார்!!

நேற்று வன்முறையாளர்களின் வெறியாட்டதிற்கு பலியான அப்பாவி மக்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர்களின் உயிர்தியாகத்திற்கும் அடிபடவர்களின் துயரத்திற்கும் நாம் என்றும் தலைவணங்குகின்றோம். ஆனால் இது ஒற்றுமைக்கான நேரம், சகோதர சண்டைக்கல்ல. அரசு இனியாவது தன் கடமையை செவ்வனே செய்யுமா என மக்கள் கவனித்து வருகிறார்கள். உண்மையான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தக்க தண்டனை கொடுப்பதே உயிரிழந்தவர்களுக்கு அரசு செலுத்தும் அஞ்சலி; ஈடுபணம் கொடுப்பதோடல்ல.

மழை வருது, பயமா இருக்கு

மும்பை: நான்காவது நாளாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மும்பையின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கிறது. சென்ற ஜுலை 27ம் தேதி பிரளயத்தை நினைவுபடுத்தும் இப்பெருமழை மக்களை தங்கள் இல்லங்களில் சிறை வைத்துள்ளது. பள்ளிகள் மூடப் பட்டுள்ளன. எங்கள் அலுவலகங்கள் மாலை மூன்றுமணிக்கே மூடப்பட்டு விட்டன. நகரின் உயிர்நாடியான புறநகர் இரயில் போக்குவரத்து தண்டவாளங்களில் தண்ணீர் நிற்பதால் காலை 10:45 முதல் நிறுத்தப் பட்டுள்ளது. மேற்கு லைன் மட்டும் மெதுவாக இயங்குகிறது. நாற்பது நிமிட பயணங்கள் மூன்று மணிநேரம் எடுக்கின்றன. அகமதாபாத் போகும் மேற்கத்திய விரைவுப் பாதை தடைபட்டுள்ளது. கார்,மிலன், அந்தேரி சப்வேக்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.மாஹிம், பாந்த்ரா,தாதர் மற்றும் தஹிசர் பகுதிகளில் மழைநீர் தேக்கம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.(படம் நன்றி: DNA Mumbai)

விமானதளத்தின் ஓடுசாலைகளில் நீர்த்தேக்கம் இருப்பதால் விமான சேவைகள் தாமதமாகின்றன. ஓரிரு சேவைகள் முடக்கப் பட்டாலும் விமானங்களின் வருகையும் புறப்பாடும் பலமணிநேர தாமதமானாலும் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரிரு சேவைகள் மும்பையிலிருந்து மற்ற நகரங்களுக்கு divert செய்யப் பட்டுள்ளன. மின்வினியோகிக்கும் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் நீர்மட்டம் அதிகரிக்கும் இடங்களில் மின்வெட்டும் அமலாக்குகின்றனர். சென்றவருட அனுபவத்தில் அத்தகைய ட்ரான்ஸ்பார்மர்கள் உயர்த்த பட்டிருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக செல்பேசி நிறுவனங்களின் BTS நிலையங்களில் பாட்டரி திறன் பற்றாமல் அவை செயலிழக்கத் தொடங்குகின்றன.

மழைநீர் தேக்கத்தால் ஏற்படும் வாகன நெருக்கடியை தவிர்க்க மும்பை காவல் ஆணையர் மக்களை அத்தியாவசிய தேவைகளன்றி வெளியில் வாகனங்களை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற நகரங்களைப் போல புறசுற்றுச் சாலைகளோ மாற்று வழிகளோ இல்லாதநிலையில், இந்த தீவுநகரில் இருக்கும் ஓரிரண்டு சாலைகளும் அடைபட்டால் வெள்ளநிவாரணத்திற்கு உதவி விரைவது கூட தடை படும் என்பதால் சென்ற வருட அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடம் இது.

இன்னும் 76 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை அறிக்கை கூறுகிறது.