இங்கு காதலிப்பது குற்றம்

அண்மையில் மும்பை காவல்துறை நன்னடத்தைக் காவலர்களாக வலம் வருகிறார்கள். சென்ற வாரம் பாந்திரா கடற்கரை, தானெ உப்வான் ஏரி மற்றும் புதுமும்பை பகுதிகளில் 'ரெய்ட்' நடத்தி இளஞ்சோடிகளை கைது செய்துள்ளனர். அவர்களின் குற்றம் அருகருகே அமர்ந்து இயற்கையை இரசித்ததுதான். ஆளுக்கு ரூ.1200/- அபராதமும் விதித்தனர். பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துமுகமாக கைகளைப் பிணைத்துக் கொண்டும் கட்டிஅணைத்தும் இருந்திருக்கிறார்கள். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என காதலர்களும் பெற்றோர்களும் எதிர்ப்புக் குரல் தெரிவித்திருக்கிறார்கள்.

மும்பை ஒரு தூங்காத நகரம். அமைதியாக தூங்கவும் இடம் இல்லாத நகரம். சிறிய அடுக்ககங்களில் தனிமையும் அமைதியும் கிடைக்காத சூழல். இந்நிலையில் மணமான ஜோடிகளே இயற்கையிடங்களை நாடும் தேவை எழுகின்ற நகரம். மேற்கத்திய நாகரீகத்தினை மால்களும் திரைப்படங்களும் பரப்புகின்ற தாக்கத்தினூடே இயற்கையான மும்பையின் பரந்த மனப்பான்மை மக்களிடையே காவலர்கள் தங்கள் எல்லைகளை மீறுகிறார்கள் என்ற எண்ணத்தை எழுப்பி வருகிறது. அடிக்கடி நிகழும் தீவிரவாத செயல்களைத் தடுத்து நிறுத்த முடியாத காவல்துறையினர் இளஞ்சோடிகளிடம் தங்கள் வீரத்தைக் காண்பிப்பதாக பத்திரிகைகளில் கடிதம் எழுதுகிறார்கள்.

இந்த விவாதத்தின் இருபக்கங்களிலும் உண்மையில்லாமல் இல்லை. காவலர்களுக்கென்று இல்லாவிடினும் செல்பேசி ஆபாசப்படங்கள் வலம்வரும் இந்நாட்களில் பொது இடங்களில் இளஞ்சோடிகள் மெய்மறந்திருப்பது அவர்களது தனிவாழ்விற்கு கேடானதே. கிழக்கும் மேற்கும் இல்லாத இரண்டுங்கெட்டான் கலாசாரத்தில் இது குழப்பத்தையே விளைவிக்கும். அதேசமயம் இரும்புமனம் படைத்த குற்றவாளிகளுடன் பழகிய காவலர்கள் கரும்புவில்லால் அடிபட்டவர்களை முரட்டுத்தனமாக நடத்துவதும் விரும்பத் தக்கதல்ல. சற்றே எல்லை மீறுபவர்களையும் எச்சரித்து கண்ணியமாக கலைத்திருக்கலாம்.

மும்பையை ஷாங்கை ஆக்குவதாக அரசியலார் முழங்குகிறார்கள்;அதற்குமுன் பாரிஸ் ஆகிவிடும் போலிருக்கிறது.

தொடர்புள்ள சுட்டி: மும்பை இணை காவல் ஆணையரின் நேர்முகம்

3 மறுமொழிகள்:

மணியன் கூறுகிறார்

வாங்க புதியவன். மாறுகின்ற குமுகாயப் பண்புகளுக்கு ஈடு கொடுக்கவியலாத காவல்துறை....

Vicky கூறுகிறார்

// கிழக்கும் மேற்கும் இல்லாத இரண்டுங்கெட்டான் கலாசாரத்தில் இது குழப்பத்தையே விளைவிக்கும்

உண்மை

// இரும்புமனம் படைத்த குற்றவாளிகளுடன் பழகிய காவலர்கள் கரும்புவில்லால் அடிபட்டவர்களை

ரசித்தேன் :)

-- Vicky

மணியன் கூறுகிறார்

வருகைக்கு நன்றி விக்கி.