மதுரையில் லார்ரி பேஜ் !

சென்ற ஞாயிறன்று கூகிள் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான 33 வயது லார்ரி பேஜ் ( Larry Page) கோவில்நகரான மதுரைக்கு அங்குள்ள பிரபல கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். உலக அளவில் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் இந்த மருத்துவமனையைப் பற்றி மேலாண்மைவியல் குரு எனக் கருதப்படுகின்ற சி.கே.பிரகலாத்தின் கட்டுரையால் கவரப்பட்டு வந்த பேஜ் அங்குள்ள assemblyline approachஇனால் ஒவ்வொருவருடமும் 2.75 இலக்ஷம் கண் அறுவை சிகிட்சைகள் நடைபெறுவதை கேட்டு ஆச்சரியமடைந்தார். ரூ.700க்கு நடத்தப்படும் காடராக்ட் அறுவைகள் மிகக் குறைந்த செலவாகும். இத்தனை குறைந்த செலவில் சிகிட்சைகள் செய்தும் பொருளாதார அளவில் தன்னிறைவு பெற்றிருக்கும் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் அதிக மேலாண்மை பல்கலைகளில் பாடமாக படிக்கப் படுகின்றன.

பாண்டிச்சேரி அரவிந்தரின் நினைவில் 1976இல் டாக்டர். வெங்கடசாமியினால் மதுரையில் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்று தேனி, கோவை, திருநெல்வேலி மற்றும் பாண்டிச்சேரியில் கிளைகளை நிறுவி விழியற்றோருக்கு வழிகாட்டி வருகிறது.தவிர கண் சம்பந்தமான ஆராய்ச்சிகள், உலகளாவிய பயிற்சித்திட்டங்கள், கண்ணிற்கு வேண்டிய கண்ணாடிகள் தயாரித்தல் என இத்துறையில் முத்திரை பதித்து வருகிறது.

தனது தனி விமானத்தில் வந்த லாரி பேஜ் கூகிளின் சேவைகளை முழுவதும் அரவிந்தின் சமூகசேவைகளுக்கு அர்ப்பணித்தார். தனது பொறியாளர்கள் அரவிந்தின் வலைத்தளத்தை மேம்படுத்துவதிலும் உதவுவார்கள் என்றும் விளம்பரங்கள் இலவசமாக கூகிள்தளங்களில் வழங்கப் படும் என்றும் ஆதரவு தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸ் வந்ததிற்கு எதிர்மாறாக இருக்கிறது கூகிள் நிறுவனரின் தமிழக விஜயம் !
நன்றி: DNA Money


மூடுமந்திரம் ?

ஹாரி பாட்டர் இறந்து விடுவானா? இன்றைய இணையத்தின் தலையாய பிரச்சினை இதுதான். ஜே.கே ரோலிங் சிறுவர்களுக்கான தனது மந்திரஜாலக் கதைகளின் தொடரில் கடைசி புத்தகத்தை எழுதவிருக்கிறார். ஆங்கிலேயரான இவரது நாவல்கள் உலகெங்கும் 300 மிலியன் பிரதிகளுக்கு மேல் விற்றிருகின்றன. தனக்குப் பிறகு இந்த தொடரினை வேறு யாரும் தொடரக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த ஏழாவது பாகத்தில் இத்தொடர் நாவல்களின் நாயகனான ஹாரிபாட்டர் என்ற சிறுவனை இறக்கடிப்பாரோ என்ற ஐயத்தில் ஹாரியின் விசிறிகள் தூக்கத்தை இழந்து வருகிறார்கள். ரோலிங்கின் பயத்தில் அர்த்தமில்லாமல் இல்லை; நமது கல்கியின் பொன்னியின் செல்வனுக்கே அந்த கதாபாத்திரங்களை வைத்து அடுத்த நாவல்கள் வரவில்லையா? இயான் ஃப்ளெமிங் இறந்தபிறகும் ஜேம்ஸ்பாண்ட் கதைகள் வருகின்றனவே.

தனது ஆறாவது நாவலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை சாகடித்த ரோலிங் மீது வலையுலக மக்கள் நம்பிக்கை வைக்காமல் அவரது ஒவ்வொரு சொல்லையும் கவனித்து வருகிறார்கள். அவரும் தன் கடைசி நாவலில் இரண்டு முக்கிய பாத்திரங்கள் இறப்பதாகவும் ஒருவர் மரணத்தின் வாயிலிலிருந்து தப்பிப்பதாகவும் சொல்லி பதற்றமேற்படுத்துகிறார். அமெரிக்காவில் நடந்த சமீப புத்தகம் 'படிக்கும்' நிகழ்ச்சியில் பிரபல ஆங்கில எழுத்தாளர்கள் ஸ்டீபன் கிங் மற்றும் ஜான் இர்விங் பல்லாயிரக் கணக்கான உலக மக்கள் சார்பாக 'எங்கள் ஹாரியை சாகடிக்காதீர்கள்' என கோரிக்கை விட்டனர். வாசகர்கள் எழுத்தாளரின் முடிவை மாற்றுவது புதிதல்ல.கானன் டாயில் தனது ஷெர்லாக் ஹோம்ஸ்ஸை ரீகன்பாக் அருவியில் விழுந்ததாகக் கூறி முற்றுப்புள்ளி வைக்க எண்ணியதை வாசகர்கள் எதிர்த்து அடுத்த கதை எழுத வைத்து அவர் பிழைத்ததற்கு காரணம் கண்டுபிடிக்க வைத்தனர். இணையத்தின் முழுவீச்சையும் பயன்படுத்தி ரோலிங்கிடமிருந்து ஹாரியைக் காப்பாற்ற இரசிகர்கள் வியூகம் அமைத்து கொண்டுள்ளனர். அதிலும் வில்லன் வொல்டொமார்ட் இறக்காமல் ஹாரிக்கு முடிவெய்தினால் தர்மத்தை சூது வென்றதாகிவிடும் என்று 'சாட்டு'கின்றனர். சிலர் அவன் ஹெர்மியொனைத் திருமணம் செய்துகொண்டால் வாழ்வின் முடிவிற்கு சமானம் என்று நகையாடுகின்றனர்.

ஒரு புத்தகம் வெளிவராமலே இத்தனை ஆர்வத்தை கிளர முடிகிறதென்றால் ஹாரியின் தாக்கத்தை உணர முடிகிறது.

மாண்புக்கு ஒரு அறைகூவல்!

நமது முன்னாள் வெளியுறவு அமைச்சர் திரு. ஜஸ்வந்த் சிங் அவரது பாரதீய ஜனதா கட்சியிலேயே சிறிது வித்தியாசமானவர். மற்றவர்கள் இந்திய பாரம்பர்ய நடைஉடைகளில் வலம் வரும்போது மேற்கத்திய கலாசாரத்தை தழுவியவர். ஒரு ஆங்கில கனவான் போன்ற பிம்பத்தை உருவாக்கி கொண்டவர். அந்த பிம்பம் கடந்த ஒருவாரத்தில் உடைந்து கொண்டிருக்கிறது. நாட்டின் உயர்பதவிகளில் இருந்த ஒருவருக்குறிய மாட்சிமை மங்கி வருகிறது. இவர்'A Call to Honour' கூப்பிட தகுதி உள்ளவரா என கேள்விகள் எழுகின்றன.

நரசிம்மராவ் காலத்தில் இந்தியபிரதமரின் அலுவலகத்தில் இருந்த அமெரிக்க உளவாளியை தெரியும் என அவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது அதன் விற்பனையை அதிகரிக்க செய்த தரங்கெட்ட செயல் என்பது விளங்கி வருகிறது. ஆரம்பத்தில் ஆளைத் தெரியும் என்றவர் இன்று இது ஊடகங்களின் புனைவு என்பது வரை நாளும் வார்த்தை மாறுகிறார். பத்து வருடங்கள் அறிந்த உண்மையை, நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் உண்மையை, தான் அதிகாரத்தில் இருந்தபோது பிரதமர் அலுவலகத்தின் பெருமைக்கு சிறுமை நேருமே என வாளாயிருந்துவிட்டு தான் புத்தகம் எழுதும்போது ஆற அமர மீள்நினைவு செய்பவரை என்னவென்று சொல்ல? அதிலும் இவர் இந்திய இராணுவத்தின் பணியிலிருந்து ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தவர். என்னே நாட்டுப்பற்று!

அவரது காந்தஹார் அனுபவங்களை வேறு பெருமையடித்துக் கொள்கிறார். நமது மானத்தை விமானத்தில் ஏற்றி தீவிரவாதிகளை பாதுகாப்பாக கூட்டிச் சென்று தீவிரவாதத்திற்கு மண்டியிட்டதை வெட்கப்படாமல் சாம்பெய்ன் அருந்தி கொண்டாடினோம் என்று பெருமை. இதில் மகன் தன்னை பிணைக்கைதியாக வைத்து மற்றவர்களை மீட்க தயாராக இருந்ததாக ஒரு பில்டப் வேறு.

வெளித்தோற்றங்கள் எவ்வளவு தவறான மதிப்புகளை உருவாக்கிவிடுகின்றன ? உருவு கண்டு எள்ளாமை மட்டுமல்ல, மயங்காமையும் வேண்டும்.

இது பற்றிய விக்னேஷின் இடுகை இங்கே.