9% வளர்ச்சி, மின்வெட்டு கூடுகிறது !

இந்தியா ஒளிர்கிறது என்றார்கள், எங்கள் வீடுகளில் மட்டும் மின்விளக்கு ஒளிர்வதில்லை. தேசிய உற்பத்தி 9% மேல் என்று பெருமைபட்டார்கள். பார்ப்பதற்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கு 'சக்தி' இல்லை. அடிப்படைக் கட்டுமானம் இல்லாமலே இந்த வளர்ச்சி என்றால் முழு வசதிகளும் இருந்தால் எங்கே போயிருப்போமோ ? நான் குறிப்பிடுவது மகாராஷ்ட்டிரத்தில் இப்போது நிலவும் மின்சார பஞ்சத்தை. இந்தியா முழுமையுமே மின்பற்றாக்குறையில் தவித்தாலும் இங்கு நாளும் ஐந்து/ஆறு மணிநேர மின்வெட்டு மக்களைப் படுத்துகிறது. இதுதவிர தொழிலகங்களுக்கு வாரத்தில் இருநாட்கள் 100% மின்வெட்டு. இந்த அழகில் மும்பை மாநகருக்கு மட்டும் முழு விதிவிலக்கு.

'ஒரு காலத்தில்' மின்னுற்பத்தியில் உபரியாக இருந்த மாநிலம் தொடர்ந்த அரசியல் அக்கறையின்மையால் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. என்ரானின் தபோல் மின்னிலையம் வழங்கவிருந்த அளவை வைத்து வேறெதுவும் முயலாமல், இன்று என்ரானின் வீழ்ச்சியோடு மகாராஷ்ட்டிர மின் உற்பத்தியும் படுத்துவிட்டது. மீண்டும் தபோல் மின் நிலையத்தை உயிர்ப்பிக்க முயன்று பழுதுபட்ட இயந்திரங்களை 'ஒன்றிற்கொன்று மாற்றிக்கொண்டு' (cannibalise) சிறிது வெற்றி பெற்றிருக்கிறார்கள். அது யானைப் பசிக்கு சோளப் பொரியாக இருக்கிறது. உற்பத்தியைப் பெருக்க முடியாததால் மக்களை செலவழிப்பதை 20% வரை தாங்களாகவே குறைக்க வேண்டியிருக்கிறார்கள். அதற்கும் ஒரு முறையான பிரசாரமோ நடைமுறை விளக்கங்களோ கிடையாது.

'துடிப்பான குஜராத்' (Vibrant Gujarat) தொழில்முனைவோரை தன்பக்கம் இழுக்கும் வேளையில் இந்த மின்பஞ்சம் அதனை துரிதப் படுத்தும். இந்த நிலையில் 2012இல் இவ்வளவு முன்னேற்றம் வரப்போகிறது என்பதெல்லாம் வரும் ஜில்லா பரிசத் தேர்தல்களுக்கு உதவலாம், நடப்பிற்கு உதவாது. அண்மை மாநில ஆந்திரத்திலிருந்து கடன் வாங்கலாம் என்றால் அவர்களிடம் அனல்மின்நிலையங்களுக்கு எரிசக்தி யாக இயற்கை வாயு தட்டுப்பாடாம். அதனால் விலையுள்ள நாஃப்தா கொண்டு தயாரித்து வழங்க இம்மாநிலம் கேட்டுள்ளது, ஒரு யூனிட் ரூ9 ஆனாலும் பரவாயில்லை என்று.
அதனால் துண்டு விழும் தொகையை நாம்தான் வரியாகக் கொடுக்கவேண்டும். நம்மைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இந்த மின்பஞ்சத்திற்கு மாநில மின் துறை அமைச்சர் தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவராதலால் காங்கிரஸ் அந்தக் கட்சியைக் குறைகாண்பதிலும், மத்திய மின்துறை அமைச்சர் ஷிண்டே காங்கிரஸ்காரர் ஆதலால் இவர்கள் காங்கிரஸைக் குறை காண்பதிலும் அடித்துக்கொண்டிருக்க எதிர்கட்சிகள் சிவசேனையும் பாஜகவும் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.

மராத்திகள் மிகவும் பொறுமையானவர்கள்தான்.

பர்சானியா


குஜராத்தில் 2002இல் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள அமெரிக்கவாழ் இயக்குனர் ராகுல் தோலாக்கியாவின் ஆங்கிலப் படம் 'பர்சானியா' திரையிடுவது அங்கு இந்துத்வா கட்சிகளின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளது. ஒரு பார்சி குடும்பம் கலவரங்களின் போது மாட்டிக்கொண்டு தங்கள் குழந்தையை தவறவிடுவதும் அதன் தாக்கங்களையும் ஒரு கதையாக வடித்துள்ளனர். நிர்மலாவின் படவிமரிசனம் இங்கே.

நேற்று இந்தப் படத்தின் அவர்களுக்கான தனி திரையிடலை பார்க்க பல்லரங்கு அதிபர்கள் தவிர்த்துள்ளனர். மதக்கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ள இந்தப் படம் சிறுபான்மையரிடம் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு மீண்டும் வன்முறை வெடிக்கும் என்று குஜராத் பல்லரங்கு (Multiplex) அதிபர்கள் சங்கத் தலைவர் மனுபாய் படேல் தெரிவித்துள்ளார். பஜரங் தளத்தின் மிரட்டலுக்குப் பயந்தே அரங்கு நிர்வாகிகள் திரையிட மறுக்கிறார்கள்.போலீஸ் பாதுகாப்பு தியேட்டருக்குவெளியே தானே, உள்ளே கலவரம் நிகழ்ந்து தங்கள் உடமைகள் உடைப்பட்டால் யார் பாதுகாப்பு என்று அரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வந்து முகாமிட்டுள்ள இயக்குனர், சிறு தியேட்டர்களிலாவது திரையிட இயலுமா என முயன்று கொண்டிருக்கிறார்.சில மாதங்கள் முன் அமீர்கானின் பானா(Fanaa) படமும் அவரது நர்மதா அணை குடிபெயர் மக்களுக்கு ஆதரவளித்ததிற்காக 'பொதுமக்களால்' தடை செய்யப் பட்டது.

ஓவியர் ஹுசேனின் ஓவியங்களை ஓவியங்களாகக் காண இயலாமற்போனோம். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ் திரைப்படங்களும் சின்னத்திரை ஒளிபரப்புகளும் கர்நாடகாவில் 'மக்களால்' தடை செய்யப் பட்டுள்ளன. தமிழகத்தில் திரைப்படங்களின் பெயரிலிருந்து கருத்துவரை 'மக்களால்'வலியுறுத்தப் படுகின்றன.

இதெல்லாம் பார்க்கும் போது நமது அரசியல் சட்டத்தில் 'பேச்சு சுதந்திரம்' என்பது பேச்சளவிலேயே இருப்பது புலனாகிறது. மனவளர்ச்சியடையாத ஒரு சமுகாயத்தில் சட்டங்கள் மட்டுமே உயரிய விழுமங்களைக் கொண்டுள்ளன. தவறான பாதையில் செல்லும் தங்கள் சமுகாயத்தை சரியாக வழி நடத்த வாக்குவங்கி அரசியலில் ஒரு தலைவர்களும் இல்லாமற் போனதும் நமது துரதிருட்டம். மெதுவே காட்டு அரசாண்மைக்கு நகர்ந்து செல்கிறோமோ ?