ஓசியில் வாசி !

புத்தக கண்காட்சிக்கு போவது என்று வந்தால் முதல் விவாதமே வாங்கிபடித்த புத்தகங்களை என்ன செய்வது என்பதுதான். டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமானால் வீட்டில் நூலகம் ஏற்படுத்திதர இந்திய அரசு இருக்கிறது. சதுர அடிக்கு வாடகை கொடுக்கும் நமக்கு, அதிலும் அடிக்கடி பணியிட மாற்றம் நிகழும் குடும்பத்தினருக்கு, கட்டுப்படியாகுமா ?

இதற்கு ஒரு தீர்வாக வாடகை நூலகங்கள் (Lending Libraries) வரத்தொடங்கின. கதையின் கடைசிபக்கங்கள் காணாமல்போன பிரதிகளை ஒருவாரத்தில் படித்து திருப்பவேண்டிய வசதியின்மை; அதனால் ஒருவாரம் தொடர்ந்து படிக்க நேரம் ஒதுக்கமுடியும் காலங்களில் நாம் தேடும் புத்தகங்கள் கிடைக்காமல் ஏதாவது கிடைத்த புத்தகத்தைப் படிக்க வேண்டிய எரிச்சலும் நேரும்.

இங்கு மும்பை வந்தபிறகு எனக்கு படிக்கும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது :( ஆனால் எனது மக்களுக்கு ஆங்கில நவீனங்கள் படிக்க எழுந்த ஆர்வத்திற்கு தீனிபோட வாடகைநூலகங்களை தேடியபோது இங்கு வேறுவிதமான செயல்பாடு நடைமுறையில் இருப்பதை அறிந்தோம். ( இம்முறை சென்னையிலும் உள்ளதாக பின்னர் பெண் சொன்னாள்) அதன்படி பழையபுத்தகத்தை அரைவிலை கொடுத்து வாங்கிக் கொள்வது, எத்தனைநாள் வேண்டுமானாலும் படிக்கலாம், நாமே வைத்துக் கொள்ளவும் செய்யலாம். வேண்டாமென்றால் அந்தக் கடையிலேயே திரும்பக் கொடுத்து ரூ25/- கழித்து மிகுதியைப் பெற்றுக் கொள்ளலாம். இதன்படி ஒரு புத்தகம் படிக்க ஆகும் செலவு ரூ25/-. கடைக்காரருக்கும் முன்பணம் வாங்குவது, புத்தகம் திரும்ப வருமா என்ற கவலை ஆகியன இல்லை.

அப்படியும் வாங்கிய ஒருசில கதைப் புத்தகங்களை ஒருமுறைக்கு மேல் படிப்பதில்லையாதலால் அவற்றை பழையநாளிதழ்களை விலைக்கு விற்கும்போது போட்டுவிடவேண்டும் என்ற கட்டாயவிதி ஏற்படுத்திக் கொண்டிருந்தோம். நல்லநிலையில் உள்ள புத்தகங்கள் அடிமாட்டுவிலைக்கு எடுத்துக் கொள்வதைப்பற்றிக் கவலைப்படாவிட்டாலும் அவற்றின் கடைசி பயனர் யார் என்ற கவலை அடிவயிற்றில் எழுவது தவிர்க்கமுடியாதது. கல்லூரிவாழ்வில் சீனியரின் புத்தகங்கள் நமக்கு வருவதும் அடுத்தவருடம் நாம் அதனை கொடைசெய்வதும் நினைவில் வந்து இதுபோல உலகநடைமுறையிலும் நடந்தால் உண்மையான புத்தகப் பிரியருக்குப் போகுமே என எண்ணுவேன்.

இதுபோன்ற ஒரு எண்ணம் ஜான் பக்மன் (புக்மன் ?..John Buckman) என்ற இணையபயனாளருக்கு ஏற்பட்டதன் விளைவே அவர் இந்த தளத்தை உருவாக்கியது. நமக்கு வேண்டாத புத்தகங்களை, அதனை வேண்டுபவர்களுக்கு கொடுக்க உதவும் ஒரு பாலமாக இந்த தளம் விளங்குகிறது. இதற்கு பிரதியாக நமக்கு வேண்டும் புத்தகங்களைப் பெறலாம். முழுவதும் இலவசம், நாம் புத்தகங்களை அனுப்ப ஆகும் அஞ்சல் செலவு மட்டுமே. தளத்திற்கு புரவலராக அமேசான்.கொம் இருக்கிறது. புதுப் புத்தகங்கள் வாங்கவேண்டுமானால் அங்கு செல்லலாம். ஆகஸ்ட் 2006இல் துவங்கிய இந்ததளம் மிக குறுகிய காலத்தில் அனைவராலும் அறிந்த தளமாக மாறியுள்ளது. ஜான் பக்மனின் நேர்முகம் மற்றும் அவரது வலைப்பதிவு.

தற்போது ஆறு மொழிகளில் மட்டுமே (ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச்,இத்தாலி,போர்த்துகீசு) வழங்கப் படுகிறது. ஆங்கில இடைமுகத்தில் தமிழ் புத்தகங்களை வேண்டலாம். நம் பதிவர்கள் இதனை பாவித்தால் ஒருவருக்கொருவர் புத்தக பரிமாற்றம் செய்துகொள்வது எளிதாகும். அல்லது சிறந்த இணையநுட்பங்களை அறிந்த பதிவர்கள் இதுபோன்ற தளமொன்றை அமைக்கலாம்.....

மணிமலரின் இதழ்கள் -1

என்னுடைய எட்டு பதிவில் நானிட்டிருந்த மணிமலரின் முகப்புப் பக்கத்தைக் கண்டு பொன்ஸ்சும் அருட்பெருங்கோவும் அதில் வெளியான கதைகளையும் கேட்டிருந்தனர். ஆனால் என் பழைய இதழ்களை கண்டறிய முடியவில்லை. நாங்கள் கொண்டுவந்ததே இரண்டோ மூன்றோதான். அதிலும் ஒரு சில பக்கங்களே என்னிடம் மீதம் உள்ளன. இருப்பினும் வாசகர் விருப்பத்தை முழுமையாக்கும் வண்ணம் அவற்றின் scan படங்களை இங்கு இட்டுள்ளேன். அவற்றின் பதிப்பு அழுத்தமாக இல்லாத காரணத்தால் அவற்றை மீள் பதிவும் செய்கிறேன்.
இந்த இதழ் தயாரிப்பில் என்னுடன் என் நண்பன் அமர்நாத் என்கிற அமரனுக்கும் சம பங்கு உண்டு. இந்த இதழ் 25-07-1962இல் வெளியிட்டோம். அப்போது எனக்கு 10 வயது. அந்த பத்துவயது சிறுவன் ஒருநாள் தனது ஆக்கங்கள் உலகளாவிய பார்வை பெறும் என எள்ளளவும் எண்ணியிருக்க மாட்டான். இன்று அவன் வெட்கத்தினால் முகம் மூடிக்கொள்வதை நான் காணமுடிகிறது.

இன்று சில விடுகதைகளைத் தாங்கிய பக்கங்களை பதிப்பித்துள்ளேன். அவற்றின் விடைகள் இன்று எனக்கே நினைவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.


Posted by Picasa


விடுகதை
1.எங்கள் வீட்டு கிணற்றில் வெள்ளீத்தட்டு மிதக்குது ? அது என்ன?
2. எங்க தம்பி நல்லதம்பி. நான் ஏறாத மரத்தில் என் தம்பி ஏறுவான். அவன் யார் ?
3.பெட்டியை திறந்ததும் கிஷ்ணன்(sic) பிறந்தான், அவன் யார் ?
4.வண்ணான் வெளுக்காத வெள்ளை
மழை பெய்யாத தண்ணீர்
குயவன் செய்யாத பாண்டம்
இது என்ன ?
5. கண்டு காய் காய்க்கும்,
காணாமல் பூ பூக்கும், இது என்ன ?
6.ஐந்து விரல் அழுந்த
பத்துவிரல் பந்தாட
சூரியனுடன் சூதாட
என்னுடன் வாதாடும், இது என்ன ?
7.எங்கள் வீட்டு தோட்டத்தில்,
மஞ்சள் குருவி ஊஞ்சல் ஆடும்
இது என்ன ?
8. டாக்டர் வந்தார் ஊசி போட்டார்
காசு வாங்கவில்லை, இது என்ன ? .......மணியன்

இதில் மறைந்துள்ள பெயர்கள் யாவை ?
1.அப்பா ரதி என்னை அடித்துவிட்டாள்,
2.அப்பா தாம்பரம் போனார்.
3.அம்பர் மாலை அணிந்தார்
4.கொக்கு திரையில் தோன்றியது.
5.அம்மா மரம் சாய்ந்தது.
6.ராஜு ரம்பையை மணந்தான்.
7.அக்கா சினிமா சென்றாள்.
8. ராஜா ஜிலேபி உண்டான். ..............அமரன்

இதன் பின்னர் ஒரு விளம்பரம் வேறு. பணம் எல்லாம் கிடையாது. மற்ற பத்திரிகைகளை காப்பியடித்து... விளம்பரத்திற்கான உள்ளடக்கம் அவர்களின் துண்டு பிரசுரங்கள்.

என்னையும் மீறி இவற்றை வெளியிட்டிருக்கிறேன். அந்த பத்துவயது சிறுவர்களின் 'கடி'யை மன்னித்துவிடுங்கள்.