Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

இணையத்தில் கூட்டு படிப்பு தவறா ?

வீட்டுக் கணக்கு கொடுப்பது பெற்றோர்களுக்குத் தான் என்பது எழுதப்படாத விதி. கல்லூரிமாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சிவினாக்களுக்கு கூகிளை நாடுவதும் பட்ட இறுதி அறிக்கைகளை இணையத்திலிருந்து 'எடுத்தாள்வதும்' இயல்பாக இருக்கிறது.

இந்நிலையில் வீட்டுப்பயிற்சிகளுக்கு கொடுக்கப்பட்ட வினாக்களுக்கான தீர்வுகளை பதிவுசெய்யும் வேதியலுக்கான Facebook கூட்டுப்படிப்பு குழுமம் ஒன்றை நடத்த உதவியதற்காக கிரிஸ் அவெனிர் என்ற முதலாண்டு மாணவன் மீது கனடாவின் ரயர்சன் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.கல்லுரி ஒழுங்கீனத்திற்காக ஒரு எண்ணிக்கையும் பத்து மதிப்பெண்கள் பெறுமானமுள்ள வினாக்களுக்கு குறிப்புகள் 146 மாணவர்கள் பரிமாறிக்கொண்டதாக அவர்மீது 146 எண்ணிக்கைகளுமாக 147 குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. பொறியியல் துறையின் விசாரணையின் முடிவில் அவர் வெளியேற்றப்படவும் கூடும்.

இது மாணவர் குமுகாயத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு ஒருசில நண்பர்கள் கூட்டாக வினா தேடுவதை விட மாறானது என்று குழம்புகிறார்கள்.

இதுபற்றிய விவாதம் சிலாஷ்டாட் தளத்தில் சுவையாக நடைபெறுகிறது. உங்கள் கருத்தென்ன ?

ஓசியில் வாசி !

புத்தக கண்காட்சிக்கு போவது என்று வந்தால் முதல் விவாதமே வாங்கிபடித்த புத்தகங்களை என்ன செய்வது என்பதுதான். டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமானால் வீட்டில் நூலகம் ஏற்படுத்திதர இந்திய அரசு இருக்கிறது. சதுர அடிக்கு வாடகை கொடுக்கும் நமக்கு, அதிலும் அடிக்கடி பணியிட மாற்றம் நிகழும் குடும்பத்தினருக்கு, கட்டுப்படியாகுமா ?

இதற்கு ஒரு தீர்வாக வாடகை நூலகங்கள் (Lending Libraries) வரத்தொடங்கின. கதையின் கடைசிபக்கங்கள் காணாமல்போன பிரதிகளை ஒருவாரத்தில் படித்து திருப்பவேண்டிய வசதியின்மை; அதனால் ஒருவாரம் தொடர்ந்து படிக்க நேரம் ஒதுக்கமுடியும் காலங்களில் நாம் தேடும் புத்தகங்கள் கிடைக்காமல் ஏதாவது கிடைத்த புத்தகத்தைப் படிக்க வேண்டிய எரிச்சலும் நேரும்.

இங்கு மும்பை வந்தபிறகு எனக்கு படிக்கும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது :( ஆனால் எனது மக்களுக்கு ஆங்கில நவீனங்கள் படிக்க எழுந்த ஆர்வத்திற்கு தீனிபோட வாடகைநூலகங்களை தேடியபோது இங்கு வேறுவிதமான செயல்பாடு நடைமுறையில் இருப்பதை அறிந்தோம். ( இம்முறை சென்னையிலும் உள்ளதாக பின்னர் பெண் சொன்னாள்) அதன்படி பழையபுத்தகத்தை அரைவிலை கொடுத்து வாங்கிக் கொள்வது, எத்தனைநாள் வேண்டுமானாலும் படிக்கலாம், நாமே வைத்துக் கொள்ளவும் செய்யலாம். வேண்டாமென்றால் அந்தக் கடையிலேயே திரும்பக் கொடுத்து ரூ25/- கழித்து மிகுதியைப் பெற்றுக் கொள்ளலாம். இதன்படி ஒரு புத்தகம் படிக்க ஆகும் செலவு ரூ25/-. கடைக்காரருக்கும் முன்பணம் வாங்குவது, புத்தகம் திரும்ப வருமா என்ற கவலை ஆகியன இல்லை.

அப்படியும் வாங்கிய ஒருசில கதைப் புத்தகங்களை ஒருமுறைக்கு மேல் படிப்பதில்லையாதலால் அவற்றை பழையநாளிதழ்களை விலைக்கு விற்கும்போது போட்டுவிடவேண்டும் என்ற கட்டாயவிதி ஏற்படுத்திக் கொண்டிருந்தோம். நல்லநிலையில் உள்ள புத்தகங்கள் அடிமாட்டுவிலைக்கு எடுத்துக் கொள்வதைப்பற்றிக் கவலைப்படாவிட்டாலும் அவற்றின் கடைசி பயனர் யார் என்ற கவலை அடிவயிற்றில் எழுவது தவிர்க்கமுடியாதது. கல்லூரிவாழ்வில் சீனியரின் புத்தகங்கள் நமக்கு வருவதும் அடுத்தவருடம் நாம் அதனை கொடைசெய்வதும் நினைவில் வந்து இதுபோல உலகநடைமுறையிலும் நடந்தால் உண்மையான புத்தகப் பிரியருக்குப் போகுமே என எண்ணுவேன்.

இதுபோன்ற ஒரு எண்ணம் ஜான் பக்மன் (புக்மன் ?..John Buckman) என்ற இணையபயனாளருக்கு ஏற்பட்டதன் விளைவே அவர் இந்த தளத்தை உருவாக்கியது. நமக்கு வேண்டாத புத்தகங்களை, அதனை வேண்டுபவர்களுக்கு கொடுக்க உதவும் ஒரு பாலமாக இந்த தளம் விளங்குகிறது. இதற்கு பிரதியாக நமக்கு வேண்டும் புத்தகங்களைப் பெறலாம். முழுவதும் இலவசம், நாம் புத்தகங்களை அனுப்ப ஆகும் அஞ்சல் செலவு மட்டுமே. தளத்திற்கு புரவலராக அமேசான்.கொம் இருக்கிறது. புதுப் புத்தகங்கள் வாங்கவேண்டுமானால் அங்கு செல்லலாம். ஆகஸ்ட் 2006இல் துவங்கிய இந்ததளம் மிக குறுகிய காலத்தில் அனைவராலும் அறிந்த தளமாக மாறியுள்ளது. ஜான் பக்மனின் நேர்முகம் மற்றும் அவரது வலைப்பதிவு.

தற்போது ஆறு மொழிகளில் மட்டுமே (ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச்,இத்தாலி,போர்த்துகீசு) வழங்கப் படுகிறது. ஆங்கில இடைமுகத்தில் தமிழ் புத்தகங்களை வேண்டலாம். நம் பதிவர்கள் இதனை பாவித்தால் ஒருவருக்கொருவர் புத்தக பரிமாற்றம் செய்துகொள்வது எளிதாகும். அல்லது சிறந்த இணையநுட்பங்களை அறிந்த பதிவர்கள் இதுபோன்ற தளமொன்றை அமைக்கலாம்.....

உலக தொலைதொடர்புநாள் - மே 17

மே 17 - தொலைதொடர்பு பொறியாளர்களுக்கு இது ஒரு முக்கிய நாளாகும். இன்றைய தினம் பன்னாட்டு தொலைதொடர்பு சங்கம் ( International Telecom Union - ITU) அமைக்கப் பட உறுப்பினர் நாடுகள் கையொப்பமிட்ட நாளாகும். இதனை தகவல்நுட்ப சமூக நாளாகவும் கொண்டாடுகிறோம்.

இந்த நாளையொட்டி ITUவின் தலைமை செயலர் ஹமாடுன் டூர் வெளியிட்டுள்ள உரையில் இந்த வருடதினத்தை இளைஞர்களுக்கானதாக பரிந்துரைக்கிறார். வளர்ந்துவரும் தகவல்நுட்ப சமூகத்தில் பெரும்பங்கு வகிப்பதும் அவர்கள்தான், அதிக பயன்பெறுவோரும் அவர்கள்தான். ஆதலினால் உலகின் எல்லா இளைஞர்களுக்கும் சரிசமனாக இந்த வாய்ப்பு கிட்டவைப்பதே தொலைதொடர்பு மற்றும் தகவல்நுட்ப அமைப்புக்களின் தலையாய கடமையாகும். ஒவ்வொருநாட்டின் சிறுவர்களும், முக்கியமாக வசதியற்றவர்களும் விளிம்புநிலையில் இருப்பவர்களும் புதிய தகவல் சமூகத்தில் பங்கு பெறவைப்பது நமது கடமையாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைசெயலர் பான் கி மூனின் செய்தி இது
இந்நாளை ஒட்டி தொலைதொடர்பு மற்றும் தகவல் நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலியவர்களை விருதுவழங்கி கௌரவிப்பது வழக்கம்.

இந்த வருடம் மூன்று பேர்கள் விருது பெறுகிறார்கள்்:
1. டொமினிகன் குடியரசின் அதிபரின் மனைவி மார்கரிட்டா செடெனொ டெ பெர்னாண்டஸ்: சட்ட நிபுணரான இவர் டிஜிட்டல் சொலிடாரிடி பண்ட் (DSF) என்ற அமைப்பில் பங்கு கொண்டு தமது நாட்டின் தகவல்நுட்ப வேற்றுமையைக் களைந்தமைக்காக இந்த விருது வழங்கப் படுகிறது. மிக வறிய இடங்களில் 135 குடியமைப்பு நுட்ப மையங்களை ( Community Technology Centers) நிறுவி ஒவ்வொரு மையமும் அதனை சார்ந்த மக்களுக்கு கணினி அறிவை புகட்டி அவர்களது சமூக,நாகரீக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த மையங்கள் மூலம் பெண்டிரும் சிறுமிகளும் புது நுட்பங்களை கற்று சமூகத்தில் ஒன்றிடவும் பாலிய சமநிலை எய்தவும் அரசு திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.


2. மாஸ்கோ நுண்ணலை ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி முனைவர் மார்க் கிரிவோசீவ்: தொலைக்காட்சி சேவைகளில் நுட்ப மேம்பாட்டிற்காக இவருக்கு விருது வழங்கப் படுகிறது.தொலைக்காட்சி நுட்பமுறைகளின் ஒருங்கிணைப்பிற்கும் புதிய நெறிமுறைகள் உருவாவதற்கும் ITU குழுமங்களில் பங்காற்றி HDTV, digital broadcast standards ஆகியவற்றின் மூலம் கணினி வேற்றுமையை (Digital Divide) நீக்கி வாய்ப்புக்களை உருவாக்க உறுதுணை புரிந்தார்.

3.மொசில்லா கார்ப்பொரேஷன்: உலகின் இணைய தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்குவித்து பங்காற்றியமைக்காக மொசில்லா நிறுவனத்தின் தலைவரும் CEOவுமான மிட்ச்செல் பேகர் மூலமாக அந்நிறுவனத்திற்கு வழங்கப் படுகிறது.மொசில்லா என்பது வழமையான மென்பொருள் நிறுவனம் அல்ல; அது ஒரு உலகளாவிய திறமூல குழுமம்.இதன் மென்பொருட்கள் திறமூலமாகவும் விலையின்றி கிடைப்பதானாலும் தனக்கென வணிகமுத்திரை (trademark) வைத்துக் கொண்டு தன் தரம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. முக்கிய மென்பொருட்கள்: மொசில்லா, பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட். கணினி வேற்றுமையை அகற்ற மொசில்லாவின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது.

தொலைதொடர்பு மற்றும் தகவல் நுட்ப துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இளைஞர்களை இணைத்திட புதிய நுட்பங்களை அவர்களுக்கு எடுத்துச் செல்வோம்.

வரிசையில் எப்படி முந்துவது ?

தரவரிசைப் படுத்துவது என்றுமே பிணக்குகளை ஏற்படுத்துவதுதான். அது அதிகம் பார்வையிடப்பட்ட பக்கங்களாகட்டும் அல்லது சிறந்த பதிவர் வரிசையாகட்டும். இருப்பினும் கூகிளின் தரவரிசை நீதிமன்றத்தை நாடும் நிலைவரை சென்றுள்ளது. இன்றைய Slashdotஇல்் இது தான் சூடான விவாதத்திற்கான அவல்.

டீன் ஹன்ட் என்ற பதிவரை ஒரு இணையவழி வணிகத்தள உரிமையாளர், அவரது பதிவு குறிப்பிட்ட வணிகம் குறித்த கூகிள் தேடலில் எவ்வாறு தம் நிறுவன இணையதளத்தை விட பதிவரின் இடுகை அதிக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது என மின்னஞ்சலில் வினவியுள்ளார்்.

ஒருபதிவர் எந்த வகையில் கூகிளின் தரவரிசையை கட்டுப்படுத்தமுடியும் என தெரியவில்லை. அதிக தொடர்பு (லின்க்) கொடுத்து பதிவும் அதிகமாக தொடர்பு கொடுக்கப்பட்டிருந்தால் இது சாத்தியம் என /. மன்றத்தில் சொல்கிறார்கள்.

இது பற்றி உங்கள் கருத்து என்ன?