Showing posts with label திறமூல மென்பொருள். Show all posts
Showing posts with label திறமூல மென்பொருள். Show all posts

உலக தொலைதொடர்புநாள் - மே 17

மே 17 - தொலைதொடர்பு பொறியாளர்களுக்கு இது ஒரு முக்கிய நாளாகும். இன்றைய தினம் பன்னாட்டு தொலைதொடர்பு சங்கம் ( International Telecom Union - ITU) அமைக்கப் பட உறுப்பினர் நாடுகள் கையொப்பமிட்ட நாளாகும். இதனை தகவல்நுட்ப சமூக நாளாகவும் கொண்டாடுகிறோம்.

இந்த நாளையொட்டி ITUவின் தலைமை செயலர் ஹமாடுன் டூர் வெளியிட்டுள்ள உரையில் இந்த வருடதினத்தை இளைஞர்களுக்கானதாக பரிந்துரைக்கிறார். வளர்ந்துவரும் தகவல்நுட்ப சமூகத்தில் பெரும்பங்கு வகிப்பதும் அவர்கள்தான், அதிக பயன்பெறுவோரும் அவர்கள்தான். ஆதலினால் உலகின் எல்லா இளைஞர்களுக்கும் சரிசமனாக இந்த வாய்ப்பு கிட்டவைப்பதே தொலைதொடர்பு மற்றும் தகவல்நுட்ப அமைப்புக்களின் தலையாய கடமையாகும். ஒவ்வொருநாட்டின் சிறுவர்களும், முக்கியமாக வசதியற்றவர்களும் விளிம்புநிலையில் இருப்பவர்களும் புதிய தகவல் சமூகத்தில் பங்கு பெறவைப்பது நமது கடமையாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைசெயலர் பான் கி மூனின் செய்தி இது
இந்நாளை ஒட்டி தொலைதொடர்பு மற்றும் தகவல் நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலியவர்களை விருதுவழங்கி கௌரவிப்பது வழக்கம்.

இந்த வருடம் மூன்று பேர்கள் விருது பெறுகிறார்கள்்:
1. டொமினிகன் குடியரசின் அதிபரின் மனைவி மார்கரிட்டா செடெனொ டெ பெர்னாண்டஸ்: சட்ட நிபுணரான இவர் டிஜிட்டல் சொலிடாரிடி பண்ட் (DSF) என்ற அமைப்பில் பங்கு கொண்டு தமது நாட்டின் தகவல்நுட்ப வேற்றுமையைக் களைந்தமைக்காக இந்த விருது வழங்கப் படுகிறது. மிக வறிய இடங்களில் 135 குடியமைப்பு நுட்ப மையங்களை ( Community Technology Centers) நிறுவி ஒவ்வொரு மையமும் அதனை சார்ந்த மக்களுக்கு கணினி அறிவை புகட்டி அவர்களது சமூக,நாகரீக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த மையங்கள் மூலம் பெண்டிரும் சிறுமிகளும் புது நுட்பங்களை கற்று சமூகத்தில் ஒன்றிடவும் பாலிய சமநிலை எய்தவும் அரசு திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.


2. மாஸ்கோ நுண்ணலை ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி முனைவர் மார்க் கிரிவோசீவ்: தொலைக்காட்சி சேவைகளில் நுட்ப மேம்பாட்டிற்காக இவருக்கு விருது வழங்கப் படுகிறது.தொலைக்காட்சி நுட்பமுறைகளின் ஒருங்கிணைப்பிற்கும் புதிய நெறிமுறைகள் உருவாவதற்கும் ITU குழுமங்களில் பங்காற்றி HDTV, digital broadcast standards ஆகியவற்றின் மூலம் கணினி வேற்றுமையை (Digital Divide) நீக்கி வாய்ப்புக்களை உருவாக்க உறுதுணை புரிந்தார்.

3.மொசில்லா கார்ப்பொரேஷன்: உலகின் இணைய தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்குவித்து பங்காற்றியமைக்காக மொசில்லா நிறுவனத்தின் தலைவரும் CEOவுமான மிட்ச்செல் பேகர் மூலமாக அந்நிறுவனத்திற்கு வழங்கப் படுகிறது.மொசில்லா என்பது வழமையான மென்பொருள் நிறுவனம் அல்ல; அது ஒரு உலகளாவிய திறமூல குழுமம்.இதன் மென்பொருட்கள் திறமூலமாகவும் விலையின்றி கிடைப்பதானாலும் தனக்கென வணிகமுத்திரை (trademark) வைத்துக் கொண்டு தன் தரம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. முக்கிய மென்பொருட்கள்: மொசில்லா, பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட். கணினி வேற்றுமையை அகற்ற மொசில்லாவின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது.

தொலைதொடர்பு மற்றும் தகவல் நுட்ப துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இளைஞர்களை இணைத்திட புதிய நுட்பங்களை அவர்களுக்கு எடுத்துச் செல்வோம்.

பில் கேட்ஸுக்கு டாட்டா ?


தமிழ்நாட்டிற்கு மிகுந்த கோலாகலத்துடன் வந்து முதல்வரை சந்தித்து பல்லாயிரம் கோடி முதலீடு செய்வதாக கூறியிருந்த பில் கேட்ஸின் மைக்ரோசஃப்ட் இயங்குதளத்திற்கு மாற்றாக தமிழக அரசு திறமூல இயங்குதளமான லினக்ஸ் வகை வினியோகங்களை தங்கள் மின் அரசாண்மை ( e-governance) முயற்சிகளுக்கு பயன்படுத்தப்போவதாக குருபிரசாத் பதிவில் கூறியுள்ளார். தனது பத்திரிகை பேட்டியில் எல்காட் நிறுவன தலைவர் திரு. உமாசங்கர் மைக்ரோசஃப்ட் நிறுவன அதிகாரிகளை தான் எவ்வாறு எதிர்கொண்டார் என விவரித்துள்ளார். ஆயினும் பள்ளிகளுக்கு Suse Linux என்று சொல்லும்போது அரசு திறமூல மென்பொருட்களை(OSS) ஆதரிக்கிறது; ஆனால் இலவச திறமூல மென்பொருட்களை (FOSS)இல்லை என்னும்போது Novel நிறுவனத்தின் மீது ஐயம் எழுகிறது. இருப்பினும் முதன்முயற்சியில், பயிற்சி இல்லாதநிலையில், ஒரு நிறுவன ஆதரவு வேண்டும் என்பதால் இம்முடிவு எடுக்கப் பட்டிருக்கலாம். கேரள அரசைப் பின்பற்றி எடுத்துள்ள இம்முடிவு தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும் தமிழ் கணிமை வளர்ச்சிக்கும் பெருதும் அடி கோலும்.

பில் கேட்ஸ் அறிவித்த வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு என்ன நேரப்போகிறது என்றும் ஆவலும் கவலையும் ஏற்படுகிறது. திறமூல மென்பொருள் வல்லமை தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வேலைகளை உருவாக்குமா அல்லது உலகின் சர்வாதீன மென்பொருள் வேலை வாய்ப்புக்களை கொடுக்குமா என்ற Hobson's choce இல் முடிவெடுப்பது கடினம்தான். திரு உமாசங்கரின் பேட்டியை நோக்கும்போது இது ஒருவேளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஏதெனும் சங்கேதமோ என்ற சந்தேகம் நம் அரசியல் வரலாற்றால் எழுந்தாலும் இந்த முடிவு நிலைக்கும் என்று எண்ணி தமிழக அரசை பாராட்டுவோம்.

கேரள அரசு பள்ளிகளில் லினக்ஸ் கொணர்ந்ததைப் பற்றி சக பதிவர் கே.சுதாகர்(ஸ்ரீமங்கை)யின் பதிவுகள் இங்கே: சுட்டி 1, சுட்டி2, சுட்டி3