புத்தாண்டு வாழ்த்துகள் !!

வரையற்ற காலச் சக்கரத்தில் நாமாக பிரித்துக் கொண்ட கால இடைவெளியில் ஆண்டொன்று கழிந்தது.புது வருடம் கனவுகளை நனவாக்கும், கவலைகளை கனவாக்கும் என்று நம்பிக்கை கொள்கிறோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை என கடந்தகால நினைவுகளை/ நிகழ்வுகளை புறந்தள்ளி வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம். நாளை உதயமாகும் ஆங்கிலப் புத்தாண்டில் வருங்காலம் வசந்தகாலமாக அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!

உடனேயே தமிழ் புத்தாண்டு (இம்முறை நிசமாவே புத்தாண்டுதான் !!) வருகிறது. ஆங்கில ஆண்டு 2009 உடன் திருவள்ளுவர் ஆண்டு 2040க்கும் எனது வாழ்த்துகள் உரித்தாகுக !

புத்துணர்ச்சியை வளர்ப்பதுடன் நடந்தவற்றை அசை போடவும் இந்நிகழ்வு இடம் கொடுக்கிறது. 2008ம் வருடம் அனைவரது வாழ்வையும் பாதித்த பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு,தீவிரவாத வன்முறைகள், வேலை இழப்புகள், ஈழத்தில் இனப்படுகொலை என மிகவும் மோசமான ஒரு ஆண்டாகவே நமது நினைவில் நிற்கும். விழுந்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு அரசுகள் எத்தனை துணைநின்றாலும் சரிகின்ற பொருளாதாரம் ஒரு புதிராகவே விளங்குகிறது. நமது விளையாட்டு வீரர்களின் (விஸ்வநாதன் ஆனந்த், பிந்த்ரா மற்றும் கிரிக்கெட்) வெற்றிகளும் நிலவுப்பயண சாதனையும் பெரிமிதமளிக்கின்றன.

கடந்த வருடம் முழுமையும் பதிவுலக பக்கமே வர இயலவில்லை. தமிழ்மணம் மிகவும் மாறி மேம்பட்டுள்ளது. நட்சத்திரங்களைத் தவிர மகுடமும் சூட்டி மகிழ்கிறார்கள். பிளாக்கரிலும் புதிதாக ‘பின்தொடர்பவர்கள்’ தோன்றியிருக்கிறார்கள் . எதுவுமே எழுதாதபோதும் சத்தியா, இளவஞ்சி என்னை பின்தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகள். இடுகைகளே இடாதபோதும் இந்தாண்டின் சிறந்த இடுகைகளை எமக்கு பரிந்துரைக்கவும் என்று மடல் அனுப்பி எனது துயிலைக் கலைத்தவர்கள் தமிழ்மணத்தார் தான்.ஒன்றிலிருந்து விடுபட்டால் அந்த ஈடுபாட்டை மீட்டுக்கொள்வது புதிதாக அந்த முயற்சியில் ஈடுபடுவதை விட கடினமாக இருக்கிறது. எல்லாம் கடந்த மோனநிலையோ ?

தமிழ்மணத்தை ஒரு சுற்று வந்தால் காட்சிகளும் பதிவர்களும் மாறியிருப்பினும் கருத்துகளும் விவாதங்களும் மாறாது பேசியவையே மீண்டும் பேசப்படுவதாக தெரிகிறது. புண் இருப்பதால் அரித்துக் கொள்கிறோமா அல்லது அரித்துக் கொள்வதால் புண் ஏற்படுகிறதா எனத் தெரியவில்லை.

கடந்த ஆண்டு எனது சொந்த வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பணியிடம் மாறியிருக்கிறேன். முப்பதாண்டுகள் பணியாற்றிய துறையிலிருந்து விலகி முற்றிலும் புதிய துறையில் காலடி எடுத்து வைத்துள்ளேன். மாணவனின் உற்சாகத்தை மீட்டெடுத்திருக்கிறேன்.தை பிறந்தால் வழி பிறக்குமென, 2040 திருப்புமுனை ஆண்டாக விளங்க வேண்டும் என்று இறைவனை வேண்டி, புத்தாண்டைத் தொடங்குகிறேன்.

அனைவருக்கும் உடல்வளம்,உளவளம் அமைந்த, மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த, சீரும் செல்வமும் பெருகிய 2009/2040 அமைய புத்தாண்டு வாழ்த்துகள் !! பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக !

இணையத்தில் கூட்டு படிப்பு தவறா ?

வீட்டுக் கணக்கு கொடுப்பது பெற்றோர்களுக்குத் தான் என்பது எழுதப்படாத விதி. கல்லூரிமாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சிவினாக்களுக்கு கூகிளை நாடுவதும் பட்ட இறுதி அறிக்கைகளை இணையத்திலிருந்து 'எடுத்தாள்வதும்' இயல்பாக இருக்கிறது.

இந்நிலையில் வீட்டுப்பயிற்சிகளுக்கு கொடுக்கப்பட்ட வினாக்களுக்கான தீர்வுகளை பதிவுசெய்யும் வேதியலுக்கான Facebook கூட்டுப்படிப்பு குழுமம் ஒன்றை நடத்த உதவியதற்காக கிரிஸ் அவெனிர் என்ற முதலாண்டு மாணவன் மீது கனடாவின் ரயர்சன் பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.கல்லுரி ஒழுங்கீனத்திற்காக ஒரு எண்ணிக்கையும் பத்து மதிப்பெண்கள் பெறுமானமுள்ள வினாக்களுக்கு குறிப்புகள் 146 மாணவர்கள் பரிமாறிக்கொண்டதாக அவர்மீது 146 எண்ணிக்கைகளுமாக 147 குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. பொறியியல் துறையின் விசாரணையின் முடிவில் அவர் வெளியேற்றப்படவும் கூடும்.

இது மாணவர் குமுகாயத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு ஒருசில நண்பர்கள் கூட்டாக வினா தேடுவதை விட மாறானது என்று குழம்புகிறார்கள்.

இதுபற்றிய விவாதம் சிலாஷ்டாட் தளத்தில் சுவையாக நடைபெறுகிறது. உங்கள் கருத்தென்ன ?

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக !

பொங்கல் என்று நாம் கொண்டாடும் அறுவடைத்திருநாள் நாடு முழுவதும் பல்வேறு பெயர்களால் வழங்கப் படுகிறது. கதிரவன் தென் திசையிலிருந்து வடதிசை திரும்புகின்ற இந்நாளை சூரியனை வரவேற்பதற்கும் நன்றி தெரிவிக்கவும் நம்நாட்டு மக்கள் கொண்டாடுகிறார்கள். பூமி சூரியனை வலம்வரும்பாதையில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்நாளை புதிய வருடத்திற்கான துவக்கநாளாக கொள்வதும் விஞ்ஞானதிற்கு ஏற்புடையதே. சூரியனின் செங்குத்துக் கதிர்கள் மகரரேகையில் இன்று விழும். இனி அக்கதிர்கள் மெதுவாக வடதிசை நகரும். இதனையே பண்டைய காலத்தில் சூரியனின் தேர் திசை திரும்புவதாக உருவகித்தனர். (இந்நாள் திசம்பர் 23 அன்று வரும் shortest day யாகும்.பண்டைகாலத்தில் இது தை மாத முதல்நாள் இருந்திருக்கலாம் என்று விவரித்த ராம.கி யின் பதிவை தேடினேன், சுட்டி கொடுக்க; அகப்படவில்லை )

இந்தியா முழுவதும் சிறப்பான நாளாக இவ்விழா கருதப்படுகிறது. வங்காளத்தில் கங்கை கடலில் கலக்கும் கங்காசாகர் என்னுமிடத்தில் பல இலக்கம் மக்கள் இன்று தம் மூதாதையருக்கு தொழுகை நடத்தி குளிப்பார்கள்.அலகாபாத்தில் கங்கையின் பிரயாக் எனப்படும் முக்கூட்டு துறையிலும் சூரிய கடவுளை வழிபட்டு பெரும் கூட்டமான மக்கள் மூழ்கி எழுவது வழக்கமாகும்.

பஞ்சாப் மக்கள் இந்நாளை லோரி எனக் கொண்டாடுகிறார்கள். நாம் படங்களில் காணும் பாங்க்ரா வகை நடனங்கள் ஆடி நல்ல அறுவடை கொடுத்த சூரியனுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

குஜராத்தில் இது பட்டங்கள் விடும் விழாவாகும். பல வெளிநாடுகளிலிருந்தும் பட்டங்கள் விட பல குழுக்கள் பங்கு கொள்கிறார்கள். சூரியக் கடவுளையே எட்டி விடும் ஒரு குறிப்பாக இந்த பட்டம் விடுகின்ற விழா அமைந்துள்ளது. மகாராட்டிரத்தில் எள்ளினால் செய்த இலட்டுகள் தில்குல் என்று கொண்டாடப்படும் இந்தவிழாவின் குறியீடாகும். எள் சூரியனிடமிருந்து மிகுந்த எரிசக்தியை உள்வாங்குகிறது. குளிர்காலத்தில் வரும் இந்நாளில் தேவையான உடல்வெப்பத்தை ஏற்படுத்துகிறது. நமது அண்டைமாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் மகர சங்க்ராந்தி என்று கொண்டாடப் படுகிறது. ஆந்திராவில் கன்னிப்பெண்கள் தங்களுக்கு சரியான வாழ்க்கைதுணைஅமையவும் திருமணமானவர் தங்கள் கணவர்களின் நலத்திற்காகவும் கடவுளை வேண்டுகிறார்கள்.

கேரளாவில் பரவலாக கொண்டாடப்படாவிடினும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடும் சபரிமலையில் ஐயப்பன் மகரஜோதியாக காட்சியளிப்பது இந்த நாளிலேயாகும்.

புதுப்பானையில் புதுநெல்லின் அரிசியில் பொங்கியபொங்கலோடு கூவுவோம்,பொங்கலோ பொங்கல் !!
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் !!

பொங்லோ பொங்ல்!!