ரட்சாபந்தன் கயிற்றில் ரட்சை உண்டா ?

நாளை வட இந்தியர்கள் இரட்சாபந்தன் பண்டிகை கொண்டாடுகிறார்கள். ஆவணிமாத முழுநிலவில் சகோதரிகள் தங்களைக் காப்பாற்றும் சகோதரர்களின் 'இரட்சைக்காக' காப்புக் கயிறு கட்டுவதே இப்பண்டிகையின் சிறப்பாகும். சகோதர்களும் சளைக்காமல் பதில் பரிசுகள் தருவதும் வழக்கமே. வணிகமயமான உலகில் இது போல ஒரு வாய்ப்பை நழுவ விடுவார்களா ? வண்ணமயமான காப்புக்கயிறுகள் பலவித உருவங்களுடன் ரூ.20 இலிருந்து ரூ.450 வரை விற்பனையாகின்றன. இவற்றின் பின் இருக்கும் அபாயத்தை பயனர்கள் முழுவதும் அறிவார்களா என
இந்த DNA செய்தி - Beware of these rakhis - Daily News & Analysis கேட்கிறது.

பரம்பரை இராக்கி சாதாரண கயிற்றில் மணி கோர்த்தது. ஆனால் தற்போதைய ராக்கியில் அழகான பொம்மை உருவங்கள், கார்ட்டூன் வடிவங்கள்,் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 'பிராண்ட்' பெற்ற பொம்மைகளே ஈயம் கலந்து நச்சுத்தன்மை பெற்றிருப்பதாக அறிக்கை வரும்போது வருமிடம் தெரியாத இவற்றின் தரம் பற்றி ஏதும் தெரியாது. முக்கியமாக குழந்தைகளைக் கவரும் வண்ணங்களில் வரும் இவற்றில் உள்ள ஈயம கலந்த வண்ணம்் அவர்கள் உட்கொள்வதானால் அவர்களது மூளை வளர்ச்சியை அது பாதிக்கும் என அது எச்சரிக்கிறது.

நமது தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் என்ன செய்கின்றன ? கோலாவின் நச்சுத்தனமையை வெளிக்கொணர்ந்த ஆய்வுநிலையங்கள் எங்கே போயின ?

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மறுபாதி நீதி எங்கே ?

நம் குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டாலே நாம் கண்டிக்கும் போது இருவரையும் சேர்ந்து கடிந்துகொள்வதோ தண்டனை வழங்குவதோ செய்வோம். மும்பையின் 1992 திசம்பர்/ 2003 ஜனவரி இனக் கலவரங்கள் குஜராத்தின் 2002 இனக்கலவரங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. பாபர் மசூதியை 'வெற்றி' கொண்ட மதர்ப்பில் இந்துத்வா மற்றும் மராட்டிய தலைவர்களுடன் உயர்பதவியிலிருந்த காவல் அதிகாரிகளும் இணைந்து நிகழ்த்திய இனப் படுகொலைகள் பின்னால் வந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மறந்து போயின. இந்த குண்டுவெடிப்பிற்கு பின்னால் இருந்த தீவிரவாதிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. நீதியரசர் கோடே அவர்கள் மிகப் பொறுமையாக அனைத்து ஆவணங்களையும் சாட்சிகளையும் ஆராய்ந்து மிகச் சரியான தண்டனை வழங்கியிருக்கிறார். குண்டு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தது. தாமதமான நீதி விசாரணையால் சில குற்றமற்றவர்களும் 13 வருட சிறைதண்டனை அனுபவித்திருந்தாலும் சட்டத்தின் மேன்மை நிலைபெற்றது.

அதேபோல் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுகும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது சரியான அரசியல் செய்கையாகும். ஓய்வுபெற்ற நீதியரசர் கிருஷ்ணா அவர்கள் மிகத் திறமையாக பரிசீலித்து இனக்கலவரங்களின் பின்னணியில் இருந்த பெருந்தலைகளை அடையாளம் காட்டியுள்ளார். அந்த ஆணைய அறிக்கை வழி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்தக் கலவரங்களில் கொடூர கொலைகள் செய்த காவல்துறையினர் பதவிஉயர்வு பெற்று வளைய வருவது நீதி பரிபாலனத்திற்கு பெரும் இழுக்காகும். அராஜகக் கும்பல்களுக்கு தலைமையேற்றவர்கள் அரசியல் தலைவர்களாக வலம் வருவதும் வெட்கக் கேடு. காரணமாக இருந்தவர்களையும் காரியமாற்றியவர்களையும் சரியாக தண்டிக்காமல் போனால் சட்டத்தின்படி அரசோச்சும் நாடு என்பது ஏட்டளவிலேயே இருக்கும்.

நீதியின் மறுபக்கமும் வழங்கப் படுமா ?மும்பையின் களங்கம் நீக்கப் படுமா?