ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்

வலைப்பதிவதே பதினைந்து நிமிட புகழுக்குத் தான் என்ற சுஜாதாவின் கூற்றை மெய்ப்பிப்பது போல் அவ்வப்போது பதிவர்களின் தற்பெருமைக்கு வித்திட தொடர்வினை விளையாட்டுக்கள் வந்துகொண்டிருக்கின்றன. முதலில் நான்கு பிறகு ஆறு பிடித்தவைகளைப் பட்டியலிட்டோம். இப்போது நாம் எப்படி மாறுபட்டவர்கள் என்று ஆத்மசோதனை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். சக பதிவர்களின் சத்திய சோதனைகளை சு(ச)கித்துக் கொண்டிருக்கும்போது என்னையும் இந்த வட்டத்திற்கு இழுத்துவிட்ட(து)வர் அம்மணியின் மனசாட்சி.
வழிவகுத்தவருக்கும் வாய்ப்பளித்தவருக்கும் நன்றி.

Weird என்ற ஆங்கிலப் பதத்திற்கு மாறுபட்டது என்று பொருள் எடுத்துக் கொள்கிறேன். என்னிலிருந்து மற்றவர்களே மாறுபட்டவர்களாக எனக்குத் தெரிவதும் weird தானோ ?

1.அழகை ஆராதிப்பவன்: இயற்கையின் அழகை அதன்போக்கில் இரசிப்பதை மிகவும் விரும்புபவன். மலர்களை செடியிலேயே காண விரும்புபவன். மலைகள் குடையப் படுவதும் நதிகள் தடுக்கப் படுவதும் மனதை நோகச் செய்யும். மும்பை புனெ விரைவுப் பாதையில் சல்லென்று போவது பிடிக்கும் என்றாலும் இயற்கையை வதம் செய்ததுபோல மனம் வலிக்கும். விட்டால்உணவு(சமைத்த உணவு), உடை, வீடு இல்லாமல் வனாந்தரங்களில் மற்ற விலங்குகள் போல திரியவேண்டும் என்றொரு கனவு. Casteaway போல தனிதீவில் விட்டால் எதை எடுத்துக் கொண்டு போவீர்கள் என்று என்னைக் கேட்டால் ஒன்றுமில்லை எனச் சொல்லியிருப்பேன். நமக்கு நிகழ்ந்திருக்கும் மரபணு மாற்றங்களால் 'பழைய' காலத்திற்கு போக முடியுமா என தர்க்கம் பார்க்கவில்லை.

2.ஒழுங்கு மற்றும் aesthetics: பள்ளியிலிருந்து பல்கலைவரை கேள்வித்தாளினை மடிக்காமல், அதில் எதுவும் கிறுக்காமல் எடுத்துவருவேன். பரிசுப் பொட்டலங்களைக் கூட அலுங்காமல் நசுங்காமல் பிரித்தெடுப்பேன். எடுத்ததை எடுத்த விடத்தில் வைப்பது இயல்போடு இயைந்தது. மற்றவர்கள் கலைத்தால் மனத்தகைவு ஏற்படும். செய்ய வேண்டியவையை பட்டியலிட்டு நிறைவேற்றுவது - எனது குறைந்த ஞாபகத்திறனை வைத்துக் கொண்டு குப்பை கொட்டுவது இந்த ஒழுங்குமுறையால் தான்.

3. கலாய்த்தல் ( வருத்தப் படாத பாணி) நிறைந்த தமிழ்மணத்தில் சற்று விலகியிருப்பவன். கலாய்ப்பதும் மிக மென்மையான முறையிலேயே சாத்தியப் படுபவன். மற்றவர்கள் கலாய்க்கப் படுவது பார்க்க பிடிக்கும். இருப்பினும் அந்த quick wit வரப் பெறவில்லை :(

4.அதற்காக சீரியஸ் டைப்பும் கிடையாது. படிப்பதில் நுனிப்புல் மேய்பவன் தான் (அம்மணி பதிவு மட்டுமின்னு இல்லீங்கோ). புத்தகங்களை அட்டையிலிருந்து அட்டை படிப்பவன் கிடையாது. ஆழ்ந்த சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொள்கிற பொறுமை கிடையாது. நகைச்சுவை புத்தகங்களும் திரைப்படங்களுமே பிடித்தமானவை. தமிழ்மண பதிவர்களின் ஆழமான கருத்துக்களையும் ஆய்வுகளையும் கண்டு பிரமிப்பவன்.

5.தனிமையை விரும்புவது கிறுக்குத் தனமா எனத் தெரியவில்லை. நிறைய பதிவர்கள் கூறியிருப்பதால் இது பதிவர்களுக்கான அடையாளமா ? இராமநாதனைப் போல எனக்கும் மிகக் குறைந்த நண்பர்களே. அதிகம் பேசாததினால் அழுத்தக்காரன், தலைக் கனம் பிடித்தவன் என்பவர்கள் உண்டு. ஆயினும் பொழுதுபோக்கோ இன்பச் சுற்றுலாவோ குடும்பத்தினர் இல்லாமல் சென்றதில்லை; இரசிப்பதுமில்லை.

கிடைத்த நேரத்தில் தோன்றிய கிறுக்குத்தனங்களை சொல்லிவிட்டேன். இது மட்டுமே முழுமையானது அல்ல என்பது பக்கத்தில் தங்கமணி இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.

இனி அடுத்தவங்களை மாட்டிவிடவேண்டும். இத்தனை நேரம் அனைவருக்கும் அழைப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். கூப்பிட்டவர்களையே மறுபடியும் கூப்பிடுவதை விட இதுவரை அழைக்கப் படாதவர்கள் நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததாகக் கொண்டு தொடரவும்.

அபூர்வ ராகங்கள் ?

இன்று வெளியாகியுள்ள அமிதாப் பச்சனின் புதிய படம் 'நிசப்த்'(சப்தமில்லாமல்) இங்கு சர்ச்சைக்குள்ளாகி சப்தங்களை கிளப்பி விட்டுள்ளது. அறுபது வயது குடும்பத்தலைவருக்கும் (அமிதாப்) பதினெட்டு வயது பெண்ணின் தோழிக்கும் (ஜியா கான்) ஏற்படும் வயதைத் தாண்டிய காதலை விவரிக்கிறது படம். அழகான தேயிலைத் தோட்டத்தில் அன்பான மனைவியுடன் ( ரேவதி) வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும்போது தன் மகளுடன் விடுமுறைக்கு வரும் தோழி ஜியாவிடம் நட்பாக ஆரம்பித்த உறவு காதலாக மலர்கிறது. தமிழ் இரசிகர்கள் பாலச்சந்தரின் ஆபூர்வ இராகங்களிலேயே இத்தகைய வயது மீறிய காதல்களை அங்கீகரித்திருந்தாலும் இங்கு இது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் கதையில் மைத்துனர் (நாசர்) அறிவுரையில் கடைசியில் ஜியாவை அவள் தோழனுடன் சேர்த்து அனுப்பி தான் சோகத்தில் ஆழ்வதாக முடிகிறது. இராம் கோபால் வர்மா மற்றுமொரு வழக்கத்திற்கு மாறான படத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்த சர்ச்சையின் உச்சகட்டமாக அறிமுக இயக்குநர் ஆர்.பாலகிருஷ்ணனின் 'சீனி கும்' படமும்் இந்த கருவின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அதிலும் அமிதாப் தான் நடிக்கிறார். நிசப்த்தில் போடோகிராபர், இதில் போனிடைல் சிகை (a la ஹரிஹரன்) அலங்காரத்துடன் சமையற்காரன். தனது 34 வயது எஜமானியுடன் (டாபு) காதல். ஒரே கதை கொண்ட இரு திரைப்படங்கள் எப்படி அமிதாப் ஒத்துக் கொண்டார் ? தவிர RGV தன் பேட்டியில்்அமிதாப் அமிதாப் தன் படமொன்றின் கதை வயதான ஆணிற்கும் பருவப் பெண்ணிற்கும் உள்ள உறவை ஒட்டியது என்றதே தனது இந்த கதைக்கருக்கான வித்து என்று கூறியிருப்பது அமிதாப்பின் பணிநேர்மை (professionalism) பற்றி கேள்வி எழுப்புகிறது.


அமிதாப்பைப் பொறுத்தவரை வரலாறு மீண்டும் எழுதப் படுகிறது. இதற்கு முன்னால் 'டூ ஃபான்' மற்றும் 'ஜாதுகர்' என்ற இருபடங்கள் இரண்டிலும் அமிதாப் மந்திரவாதியாக நடித்து அடுத்தடுத்து வந்து தோல்வியடைந்தது. அதேபோல் இந்த இருபடங்களும் தோல்வியைத் தழுவுமா ? அதிலும் ஆர்.பாலகிருஷ்ணன் அறிமுக இயக்குநர் என்பதால் கிடைக்கும் முதல் அடியைத் தாங்க முடியுமா ?

முடிவை வெள்ளித்திரையில் காண்க ?

நன்றி: பி.பி.சி, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ்