பர்சானியா


குஜராத்தில் 2002இல் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள அமெரிக்கவாழ் இயக்குனர் ராகுல் தோலாக்கியாவின் ஆங்கிலப் படம் 'பர்சானியா' திரையிடுவது அங்கு இந்துத்வா கட்சிகளின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளது. ஒரு பார்சி குடும்பம் கலவரங்களின் போது மாட்டிக்கொண்டு தங்கள் குழந்தையை தவறவிடுவதும் அதன் தாக்கங்களையும் ஒரு கதையாக வடித்துள்ளனர். நிர்மலாவின் படவிமரிசனம் இங்கே.

நேற்று இந்தப் படத்தின் அவர்களுக்கான தனி திரையிடலை பார்க்க பல்லரங்கு அதிபர்கள் தவிர்த்துள்ளனர். மதக்கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ள இந்தப் படம் சிறுபான்மையரிடம் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு மீண்டும் வன்முறை வெடிக்கும் என்று குஜராத் பல்லரங்கு (Multiplex) அதிபர்கள் சங்கத் தலைவர் மனுபாய் படேல் தெரிவித்துள்ளார். பஜரங் தளத்தின் மிரட்டலுக்குப் பயந்தே அரங்கு நிர்வாகிகள் திரையிட மறுக்கிறார்கள்.போலீஸ் பாதுகாப்பு தியேட்டருக்குவெளியே தானே, உள்ளே கலவரம் நிகழ்ந்து தங்கள் உடமைகள் உடைப்பட்டால் யார் பாதுகாப்பு என்று அரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வந்து முகாமிட்டுள்ள இயக்குனர், சிறு தியேட்டர்களிலாவது திரையிட இயலுமா என முயன்று கொண்டிருக்கிறார்.சில மாதங்கள் முன் அமீர்கானின் பானா(Fanaa) படமும் அவரது நர்மதா அணை குடிபெயர் மக்களுக்கு ஆதரவளித்ததிற்காக 'பொதுமக்களால்' தடை செய்யப் பட்டது.

ஓவியர் ஹுசேனின் ஓவியங்களை ஓவியங்களாகக் காண இயலாமற்போனோம். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ் திரைப்படங்களும் சின்னத்திரை ஒளிபரப்புகளும் கர்நாடகாவில் 'மக்களால்' தடை செய்யப் பட்டுள்ளன. தமிழகத்தில் திரைப்படங்களின் பெயரிலிருந்து கருத்துவரை 'மக்களால்'வலியுறுத்தப் படுகின்றன.

இதெல்லாம் பார்க்கும் போது நமது அரசியல் சட்டத்தில் 'பேச்சு சுதந்திரம்' என்பது பேச்சளவிலேயே இருப்பது புலனாகிறது. மனவளர்ச்சியடையாத ஒரு சமுகாயத்தில் சட்டங்கள் மட்டுமே உயரிய விழுமங்களைக் கொண்டுள்ளன. தவறான பாதையில் செல்லும் தங்கள் சமுகாயத்தை சரியாக வழி நடத்த வாக்குவங்கி அரசியலில் ஒரு தலைவர்களும் இல்லாமற் போனதும் நமது துரதிருட்டம். மெதுவே காட்டு அரசாண்மைக்கு நகர்ந்து செல்கிறோமோ ?

1 மறுமொழிகள்:

நான் கள்ளன் கூறுகிறார்

>>மெதுவே காட்டு அரசாண்மைக்கு நகர்ந்து செல்கிறோமோ ?<<

இப்ப மட்டும் எங்க இருக்கோம்னு கொஞ்சம் சொல்லுங்கண்ணா.

பதிவுக்கு நன்றிங்கண்ணா.