Showing posts with label குமுகாயம். Show all posts
Showing posts with label குமுகாயம். Show all posts

நீதிதேவதையின் கண்கள் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறதா?

While she goes by many names, the most popular are Lady Justice, Scales of Justice, and Blind Justice. The statue dates it origins from ancient Roman times as the lady represented is Themis, the goddess of justice and law. Well known for her clear sightedness, she typically holds a sword in one hand and scales in the other. The scales that she holds represent the impartiality with which justice is served and the sword signifies the power that is held by those making the decision. During the 16th century, artists started showing the lady blindfolded to show that justice is not subject to influence. From this, the statue earned the name Blind Justice.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று கண்ட ஒரு ஒற்றுநிகழ்வு மிகவும் கலக்கத்தை உண்டுபண்ணுவதாக உள்ளது. தில்லியின் கார்மோதல் வழக்கு பற்றியதைத்தான் குறிப்பிடுகிறேன். இத்தைகைய ஒற்று நிகழ்ச்சிகளின் தார்மீக, சட்டரீதியான சரி தவறுகளை விவாதிக்க வரவில்லை. அடிப்படையில் சட்டம் நீதி ஒழுங்காக நீதிமன்றங்களில் வழங்கப் படுகிறதா என்ற அடிப்படை நம்பிக்கையையே தகர்ப்பதாக அந்நிகழ்ச்சியில் கண்டவை அமைந்தன.

1999ஆம் வருடம் தில்லியில் முன்னாள் கடற்படைத் தலைவர் நந்தா அவர்களின் மகன் தன் விலையுயர்ந்த BMW காரை மோதி சாகடித்த வழக்கில் அரசுத்துறை வழக்கறிஞரும் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் சேர்ந்து கொண்டு சாட்சியை விலைக்கு வாங்கி குற்றவியல் நீதியையே கேலிக்குறியதாக்கிவிட்டதாக அந்த தொலைக்காட்சி காண்பித்தது. அந்த ஒற்று நிகழ்ச்சி உண்மையானதா பொய்யாக சோடிக்கப்பட்டதா என கூறமுடியாவிடினும் அந்த தொலைக்காட்சியின் பிரபலத்தை வைத்து அவ்வாறு அவர்கள் செய்யமாட்டார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. வழக்கறிஞர்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி வழக்குகளை திசைதிருப்புவார்கள் என்ற பேச்சையும் மீறி அவர்கள் ஊழல்வரை செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையை பொய்ப்பித்தார்கள் இவர்கள்.

இதற்கும் மேலாக காட்சியில் பங்கேற்ற மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் மத்திய அமைச்சருமான கபில் சிபல் தன் கருத்தைக் கூறும்போது இது எப்போதும் நடப்பதுதானே, யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது போல் சொன்னது நம் நீதித்துறை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று எண்ண வைக்கிறது. திரைப்படங்களில் காணும் ஊழலும் இருதரப்பு வக்கீல்களின் கூட்டும் கற்பனைக்காக என்றிருந்தது பொய், நிழல் நிஜமாகிறது என்ற உணர்வு மனதில் வலியைத் தந்தது. பணமும் பதவிக்கும் எதிரே சாமான்யனின் வழக்கு செல்லுபடியாகாது என்பது எத்தனை துரதிருஷ்டமானது ? ஜனநாயகத்தினை பொய்யாக்குவது ?

பெருமையும் கௌரவமும் வாய்ந்த இந்த தொழிலின் பால் மக்களுக்கிருந்த நம்பிக்கையை, ஆக்ராவில் நடந்த வழக்கறிஞர்களின் செயல்பாடுகளும் இந்த நிகழ்ச்சிகளும் குலைத்துவருகிறது. பார் கௌன்சிலும் அவர்களது மற்ற கழகங்களும் தாங்களே தங்கள் நன்னடத்தையை மேம்படுத்தும் வழி காணவேண்டும்.

இன்று உலகெங்கும் புகையிலை மறுப்பு தினம்

உலகளவில் இறப்பிற்கு இரண்டாம் மிகப்பெரிய காரணமாக புகையிலை பயன்படுத்துவது அமைந்துள்ளது. புகைபிடிப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களினாலேயே இறக்கின்றனர். தவிர இளஞ்சிறார்கள் தங்கள் வீடுகளிலேயே புகைப்பவர்களினால் மாசுபட்ட காற்றை சுவாசித்து பாதிக்கப் படுகின்றனர்.உலக தொழிலாளர் நிறுவனமும் (ILO) 200,00க்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றவர்கள் விடும் புகையினால் இறப்பதாக கூறுகிறது.

இதனால் இந்த வருட புகையிலை மறுப்பு தினத்தில் 100% புகையில்லா சூழல் அமைப்பதே பெண்டிர், சிறார் மற்றும் வேலையிடத்தில் பிறரை இந்தத் தீமையிலிருந்து காப்பதாக அமையும் என்று கவனம் செலுத்துகிறார்கள். பொது இடங்களில் நல்ல காற்றோட்டம் ஏற்படுத்துவதோ இல்லை வடிகட்டுவதோ மட்டும் விரும்பத்தக்க அளவிற்கு புகையை கொண்டுவரமுடியாது என்கின்றனர் உடல்நல நிபுணர்கள்.

1987இல் உலக சுகாதார மன்றம் ஏப்ரல்7, 1988ஐ உலக புகைக்காத நாளாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றீயது. பின்னர் 88இல் மீண்டும் மே31 தேதியை புகையிலை மறுப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் பாவிக்க தீர்மானித்தது. இன்றைய தினம் பொதுமக்களின் கவனத்திற்கு புகையிலை உபயோகிப்பதன் ஆபத்துக்களையும் அதைத்தவிர்ப்பதால் மீளும் நோய்களைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறோம். மாசில்லா காற்றை சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை, அது புகைபிடிக்கும் சிறு பான்மையினரால் பறிக்கப்படுவது வருந்தத்தக்கது.

புகை பிடிப்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கெடுதல். இன்றே விலக்குவீர்,வாழ்வீர் பல்லாண்டு !!

இங்கு காதலிப்பது குற்றம்

அண்மையில் மும்பை காவல்துறை நன்னடத்தைக் காவலர்களாக வலம் வருகிறார்கள். சென்ற வாரம் பாந்திரா கடற்கரை, தானெ உப்வான் ஏரி மற்றும் புதுமும்பை பகுதிகளில் 'ரெய்ட்' நடத்தி இளஞ்சோடிகளை கைது செய்துள்ளனர். அவர்களின் குற்றம் அருகருகே அமர்ந்து இயற்கையை இரசித்ததுதான். ஆளுக்கு ரூ.1200/- அபராதமும் விதித்தனர். பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துமுகமாக கைகளைப் பிணைத்துக் கொண்டும் கட்டிஅணைத்தும் இருந்திருக்கிறார்கள். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என காதலர்களும் பெற்றோர்களும் எதிர்ப்புக் குரல் தெரிவித்திருக்கிறார்கள்.

மும்பை ஒரு தூங்காத நகரம். அமைதியாக தூங்கவும் இடம் இல்லாத நகரம். சிறிய அடுக்ககங்களில் தனிமையும் அமைதியும் கிடைக்காத சூழல். இந்நிலையில் மணமான ஜோடிகளே இயற்கையிடங்களை நாடும் தேவை எழுகின்ற நகரம். மேற்கத்திய நாகரீகத்தினை மால்களும் திரைப்படங்களும் பரப்புகின்ற தாக்கத்தினூடே இயற்கையான மும்பையின் பரந்த மனப்பான்மை மக்களிடையே காவலர்கள் தங்கள் எல்லைகளை மீறுகிறார்கள் என்ற எண்ணத்தை எழுப்பி வருகிறது. அடிக்கடி நிகழும் தீவிரவாத செயல்களைத் தடுத்து நிறுத்த முடியாத காவல்துறையினர் இளஞ்சோடிகளிடம் தங்கள் வீரத்தைக் காண்பிப்பதாக பத்திரிகைகளில் கடிதம் எழுதுகிறார்கள்.

இந்த விவாதத்தின் இருபக்கங்களிலும் உண்மையில்லாமல் இல்லை. காவலர்களுக்கென்று இல்லாவிடினும் செல்பேசி ஆபாசப்படங்கள் வலம்வரும் இந்நாட்களில் பொது இடங்களில் இளஞ்சோடிகள் மெய்மறந்திருப்பது அவர்களது தனிவாழ்விற்கு கேடானதே. கிழக்கும் மேற்கும் இல்லாத இரண்டுங்கெட்டான் கலாசாரத்தில் இது குழப்பத்தையே விளைவிக்கும். அதேசமயம் இரும்புமனம் படைத்த குற்றவாளிகளுடன் பழகிய காவலர்கள் கரும்புவில்லால் அடிபட்டவர்களை முரட்டுத்தனமாக நடத்துவதும் விரும்பத் தக்கதல்ல. சற்றே எல்லை மீறுபவர்களையும் எச்சரித்து கண்ணியமாக கலைத்திருக்கலாம்.

மும்பையை ஷாங்கை ஆக்குவதாக அரசியலார் முழங்குகிறார்கள்;அதற்குமுன் பாரிஸ் ஆகிவிடும் போலிருக்கிறது.

தொடர்புள்ள சுட்டி: மும்பை இணை காவல் ஆணையரின் நேர்முகம்

நொய்டா கொலைகள்


கடந்த சில நாட்களாக தில்லியின் சுற்றுப்புர நகரான நொய்டா (NOIDA)வின் புறத்தே நிதாரி கிராமத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ள உடற்சிதிலங்கள் நம்மிடையே திகழும் வக்கிர உள்ளங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது. கொலையின் கோரங்கள் தெரியத் தெரிய மனம் பதறுகிறது. பச்சிளம் சிறாரை வன்புணர்ந்து கொலை செய்து பங்களாவின் பக்கத்தில் ஓடும் சாக்கடையில் வீசி எறிந்ததாக தொழிலதிபரான மொஹிந்தர் சிங்கும் அவர் வேலையாள் சுரிந்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைகளின் பின்னணி குறித்து பல கருத்துக்கள் யூக வடிவிலே வலம் வருகின்றன. சில மனித உறுப்புக்களை விற்பதற்காகவென்றும் சில பயங்கரமான மத சடங்கிற்காகவென்றும் வேறு சில உயிரற்ற சடலங்களுடன் கொள்ளும் பாலியல் இச்சை (necrophilia)களுக்காக வென்றும் பலவாறு செய்திகள் வருகின்றன. எதுவாக இருப்பினும் மிகுந்த மன விகாரமடைந்த மனிதனின் செயல்கள் இவை என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

ஆனால் இந்த விகாரம் குற்றம் புரிந்தவர்களுடன் நிற்கிறதா என நம் சமுதாயம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கொலையுண்டவர்களின் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்று முறையிட்டும், குற்றத்தைப் பதிவு செய்யாமல் அவர்களை ஏளனமாகப் பார்த்த காவலர்களின் மனம் கல்லாயிற்றா ? இது ஏதோ வடக்கில் சிறு கிராமத்தில் நடந்த ஒரு விலக்கு என்று நம்மில் யாரேனும் கூற முடியுமா? நாளும் எல்லா இடங்களிலும் நம் காவலரின் அலட்சியமும் ஆர்வமின்மையும் காண்பதுதானே ?

சரி, காவலர்கள் தான் தங்கள் பணியில் அலட்சியமாக இருந்தார்கள் என்றால் உள்ளாட்சி துப்புறவு தொழிலாளர்கள் அத்தனை மனிதகழிவுகள் கோணிப்பைகளில் அந்த வீட்டினருகே சாக்கடையில் போடப்படுவதை எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தனர் ? ஏதோ தவறு அருகாமையில் நடக்கிறது என்று காவலரை உஷார்படுத்தியிருக்கலாமே ?

இதெல்லாம் விட்டாலும், அந்த வீட்டின் அக்கம்பக்கத்துக்காரர்களும் தங்கள் சுற்றுவட்டாரத்தில் நடப்பதை காணாமல் தங்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்த கிராமத்திலேயே இந்த நிலை என்றால் அடுத்தவர் யாரென்றே அறியாது வாழும் சென்னை போன்ற பெருநகரங்களில் சொல்லவே வேண்டாம்.

இதற்கெல்லாம் சிகரமாக பாதிப்படைந்த பெற்றோரும் மற்றவர்களும் தங்கள் கோபத்தை நேரடியாக மொஹிந்தர் வீட்டின் மீது கல்லெறிந்து நீதி பரிபாலனத்தை தங்கள் கைகளில் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் சட்டம் ஒழுங்கு, நீதி மீது தங்களுக்கிருக்கும் நம்பிக்கையின்மையையும் நமது காட்டுமிராண்டித் தனத்தையும் பறை சாற்றியிருக்கிறார்கள்.

குற்றவிசாரணையும் நீதிவழங்கலும் துரிதப் படல் வேண்டும்; தவறிழைத்த அலுவலர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்; மேலாக குடிமக்கள் இயந்திரதனத்தில் சிக்கி நம் பொறுப்புக்களை மறக்கிறோமா எனவும் சிந்திக்க வேண்டும்.