மும்பை வாழ்க!
அலுவலகப் பணிகளை செவ்வனே நிறைவேற்றி வீட்டின் பணிகளை எதிர்நோக்கி விரையும் செக்ரடரிகள்; பச்சிளம்பாலகனின் பிறந்தநாளைக் கொண்டாட மதியஉணவு இடைவேளையில் வாங்கிய பொம்மையுடன் மகிழ்ச்சியான இரவை எதிர்நோக்கும் குமாஸ்தாக்கள்; கல்லூரியின் தேர்வுப்பட்டியலில் பெயரைக் கண்ட மகிழ்ச்சியை பகிர விரையும் மாணவர்கள்; நாளும் சிறுசிறு பொருட்களை விற்று வயிறு வளர்க்கும் சிறார்கள் .. நேற்று மாலை 6:24லிருந்து 6:35க்குள் சிதறியது அவர்கள் உடல்களா, இல்லை கனவுகளா ? பெனாத்தலார் கேட்கிறார் இதுதான் வீரமா?
இல்லை, இன்று பின்னலைப் பின்னால் இழுத்து பக்கத்தில் இருப்பவனை அறையச் செய்யும் சூழ்ச்சியை இனம் கண்ட முகம் இல்லா நடுத்தட்டு மக்களின் உறுதியான எதிர்கொள்ளல் அன்றோ வீரம் ?சாரி சாரியாக காரிகையர் அதே மின்வண்டியில் பயணித்து வன்முறையால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என்று உலகுக்குக் காட்டுவதன்றோ வீரம் ? பிரிவினை தூண்டுபவரை புறம்தள்ளி துயரத்தில் பங்கேற்போம்,இணைந்திருந்து எதிரியை எதிர்கொள்வோம் எனும் சாமான்யனின் வீரத்தைப் போற்றுவோம். வாழ்க மும்பைகார்!!
நேற்று வன்முறையாளர்களின் வெறியாட்டதிற்கு பலியான அப்பாவி மக்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர்களின் உயிர்தியாகத்திற்கும் அடிபடவர்களின் துயரத்திற்கும் நாம் என்றும் தலைவணங்குகின்றோம். ஆனால் இது ஒற்றுமைக்கான நேரம், சகோதர சண்டைக்கல்ல. அரசு இனியாவது தன் கடமையை செவ்வனே செய்யுமா என மக்கள் கவனித்து வருகிறார்கள். உண்மையான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தக்க தண்டனை கொடுப்பதே உயிரிழந்தவர்களுக்கு அரசு செலுத்தும் அஞ்சலி; ஈடுபணம் கொடுப்பதோடல்ல.



