பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக !

பொங்கல் என்று நாம் கொண்டாடும் அறுவடைத்திருநாள் நாடு முழுவதும் பல்வேறு பெயர்களால் வழங்கப் படுகிறது. கதிரவன் தென் திசையிலிருந்து வடதிசை திரும்புகின்ற இந்நாளை சூரியனை வரவேற்பதற்கும் நன்றி தெரிவிக்கவும் நம்நாட்டு மக்கள் கொண்டாடுகிறார்கள். பூமி சூரியனை வலம்வரும்பாதையில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்நாளை புதிய வருடத்திற்கான துவக்கநாளாக கொள்வதும் விஞ்ஞானதிற்கு ஏற்புடையதே. சூரியனின் செங்குத்துக் கதிர்கள் மகரரேகையில் இன்று விழும். இனி அக்கதிர்கள் மெதுவாக வடதிசை நகரும். இதனையே பண்டைய காலத்தில் சூரியனின் தேர் திசை திரும்புவதாக உருவகித்தனர். (இந்நாள் திசம்பர் 23 அன்று வரும் shortest day யாகும்.பண்டைகாலத்தில் இது தை மாத முதல்நாள் இருந்திருக்கலாம் என்று விவரித்த ராம.கி யின் பதிவை தேடினேன், சுட்டி கொடுக்க; அகப்படவில்லை )

இந்தியா முழுவதும் சிறப்பான நாளாக இவ்விழா கருதப்படுகிறது. வங்காளத்தில் கங்கை கடலில் கலக்கும் கங்காசாகர் என்னுமிடத்தில் பல இலக்கம் மக்கள் இன்று தம் மூதாதையருக்கு தொழுகை நடத்தி குளிப்பார்கள்.அலகாபாத்தில் கங்கையின் பிரயாக் எனப்படும் முக்கூட்டு துறையிலும் சூரிய கடவுளை வழிபட்டு பெரும் கூட்டமான மக்கள் மூழ்கி எழுவது வழக்கமாகும்.

பஞ்சாப் மக்கள் இந்நாளை லோரி எனக் கொண்டாடுகிறார்கள். நாம் படங்களில் காணும் பாங்க்ரா வகை நடனங்கள் ஆடி நல்ல அறுவடை கொடுத்த சூரியனுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

குஜராத்தில் இது பட்டங்கள் விடும் விழாவாகும். பல வெளிநாடுகளிலிருந்தும் பட்டங்கள் விட பல குழுக்கள் பங்கு கொள்கிறார்கள். சூரியக் கடவுளையே எட்டி விடும் ஒரு குறிப்பாக இந்த பட்டம் விடுகின்ற விழா அமைந்துள்ளது. மகாராட்டிரத்தில் எள்ளினால் செய்த இலட்டுகள் தில்குல் என்று கொண்டாடப்படும் இந்தவிழாவின் குறியீடாகும். எள் சூரியனிடமிருந்து மிகுந்த எரிசக்தியை உள்வாங்குகிறது. குளிர்காலத்தில் வரும் இந்நாளில் தேவையான உடல்வெப்பத்தை ஏற்படுத்துகிறது. நமது அண்டைமாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் மகர சங்க்ராந்தி என்று கொண்டாடப் படுகிறது. ஆந்திராவில் கன்னிப்பெண்கள் தங்களுக்கு சரியான வாழ்க்கைதுணைஅமையவும் திருமணமானவர் தங்கள் கணவர்களின் நலத்திற்காகவும் கடவுளை வேண்டுகிறார்கள்.

கேரளாவில் பரவலாக கொண்டாடப்படாவிடினும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடும் சபரிமலையில் ஐயப்பன் மகரஜோதியாக காட்சியளிப்பது இந்த நாளிலேயாகும்.

புதுப்பானையில் புதுநெல்லின் அரிசியில் பொங்கியபொங்கலோடு கூவுவோம்,பொங்கலோ பொங்கல் !!
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் !!

பொங்லோ பொங்ல்!!

ரட்சாபந்தன் கயிற்றில் ரட்சை உண்டா ?

நாளை வட இந்தியர்கள் இரட்சாபந்தன் பண்டிகை கொண்டாடுகிறார்கள். ஆவணிமாத முழுநிலவில் சகோதரிகள் தங்களைக் காப்பாற்றும் சகோதரர்களின் 'இரட்சைக்காக' காப்புக் கயிறு கட்டுவதே இப்பண்டிகையின் சிறப்பாகும். சகோதர்களும் சளைக்காமல் பதில் பரிசுகள் தருவதும் வழக்கமே. வணிகமயமான உலகில் இது போல ஒரு வாய்ப்பை நழுவ விடுவார்களா ? வண்ணமயமான காப்புக்கயிறுகள் பலவித உருவங்களுடன் ரூ.20 இலிருந்து ரூ.450 வரை விற்பனையாகின்றன. இவற்றின் பின் இருக்கும் அபாயத்தை பயனர்கள் முழுவதும் அறிவார்களா என
இந்த DNA செய்தி - Beware of these rakhis - Daily News & Analysis கேட்கிறது.

பரம்பரை இராக்கி சாதாரண கயிற்றில் மணி கோர்த்தது. ஆனால் தற்போதைய ராக்கியில் அழகான பொம்மை உருவங்கள், கார்ட்டூன் வடிவங்கள்,் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 'பிராண்ட்' பெற்ற பொம்மைகளே ஈயம் கலந்து நச்சுத்தன்மை பெற்றிருப்பதாக அறிக்கை வரும்போது வருமிடம் தெரியாத இவற்றின் தரம் பற்றி ஏதும் தெரியாது. முக்கியமாக குழந்தைகளைக் கவரும் வண்ணங்களில் வரும் இவற்றில் உள்ள ஈயம கலந்த வண்ணம்் அவர்கள் உட்கொள்வதானால் அவர்களது மூளை வளர்ச்சியை அது பாதிக்கும் என அது எச்சரிக்கிறது.

நமது தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் என்ன செய்கின்றன ? கோலாவின் நச்சுத்தனமையை வெளிக்கொணர்ந்த ஆய்வுநிலையங்கள் எங்கே போயின ?

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மறுபாதி நீதி எங்கே ?

நம் குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டாலே நாம் கண்டிக்கும் போது இருவரையும் சேர்ந்து கடிந்துகொள்வதோ தண்டனை வழங்குவதோ செய்வோம். மும்பையின் 1992 திசம்பர்/ 2003 ஜனவரி இனக் கலவரங்கள் குஜராத்தின் 2002 இனக்கலவரங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. பாபர் மசூதியை 'வெற்றி' கொண்ட மதர்ப்பில் இந்துத்வா மற்றும் மராட்டிய தலைவர்களுடன் உயர்பதவியிலிருந்த காவல் அதிகாரிகளும் இணைந்து நிகழ்த்திய இனப் படுகொலைகள் பின்னால் வந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மறந்து போயின. இந்த குண்டுவெடிப்பிற்கு பின்னால் இருந்த தீவிரவாதிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. நீதியரசர் கோடே அவர்கள் மிகப் பொறுமையாக அனைத்து ஆவணங்களையும் சாட்சிகளையும் ஆராய்ந்து மிகச் சரியான தண்டனை வழங்கியிருக்கிறார். குண்டு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தது. தாமதமான நீதி விசாரணையால் சில குற்றமற்றவர்களும் 13 வருட சிறைதண்டனை அனுபவித்திருந்தாலும் சட்டத்தின் மேன்மை நிலைபெற்றது.

அதேபோல் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுகும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது சரியான அரசியல் செய்கையாகும். ஓய்வுபெற்ற நீதியரசர் கிருஷ்ணா அவர்கள் மிகத் திறமையாக பரிசீலித்து இனக்கலவரங்களின் பின்னணியில் இருந்த பெருந்தலைகளை அடையாளம் காட்டியுள்ளார். அந்த ஆணைய அறிக்கை வழி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்தக் கலவரங்களில் கொடூர கொலைகள் செய்த காவல்துறையினர் பதவிஉயர்வு பெற்று வளைய வருவது நீதி பரிபாலனத்திற்கு பெரும் இழுக்காகும். அராஜகக் கும்பல்களுக்கு தலைமையேற்றவர்கள் அரசியல் தலைவர்களாக வலம் வருவதும் வெட்கக் கேடு. காரணமாக இருந்தவர்களையும் காரியமாற்றியவர்களையும் சரியாக தண்டிக்காமல் போனால் சட்டத்தின்படி அரசோச்சும் நாடு என்பது ஏட்டளவிலேயே இருக்கும்.

நீதியின் மறுபக்கமும் வழங்கப் படுமா ?மும்பையின் களங்கம் நீக்கப் படுமா?