லஹே ரஹோ லாலுபாய் !!

கடந்த திங்களன்று இந்திய இரயில்வேயின் மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. லாலுபிரசாத் யாதவ் அவர்கள் அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தில் தமது துறையின் வளர்ச்சியையும் இலாபத்தை நோக்கி திசைதிருப்பியதைக் குறித்தும் சிறப்புரை ஆற்றியுள்ளார். ஒரு நிறுவனம் நீண்ட நாட்களாக பணக்கஷ்டத்தில் இருப்பதிலிருந்து எவ்வாறு மீட்பது என்பது பற்றியான உதாரணபாட (casestudy) வரிசையில் இது அமைந்திருந்தது. மூன்று மணி நேரம் நிகழ்த்திய இவ்வுரையில் அவர் தாம் எவ்வாறு இலக்குகளை நிணயித்துக் கொண்டார் மற்றும் அவற்றை அடைய வழிமுறைகளை எவ்வாறு திட்டமிட்டார் என்று விளக்கினார். ஒரு தேர்ந்த பேராசிரியர் போல உரையை ஒருமுகமாக நிகழ்த்தாது வினா-விடை வழியே அனைவரும் பங்கு கொள்ளும் விதமாக நடத்தினார். அரங்கத்தில் நடந்ததை வெளியுலகத்திற்கு வெளியிட கழக விதிகள் இடம் கொடுக்காவிடினும் ஐ.ஐ.எம் மாணவர்களின் வலைப்பதிவுகளில் அவரது நகைச்சுவையுடன் கூடிய சொற்பொழிவு திறனும் மேலாண்மைத் திறனும் பெரிதும் போற்றப் படுகின்றன.

திரு லாலு அவர்களைப் போன்று இந்திய அரசியலில் கேலி செய்யப்பட்டவர் வெகு குறைவு. அவரது நடையையும் உடையையும் கண்டு மெத்தப் படித்தவர்கள் ஏளனப் பார்வை வீசியதுண்டு. இன்றுகூட இரயில்வேயின் மாற்றத்திற்கு அதிகாரிகளே காரணம், முந்தைய அமைச்சர் நிதிஷ்குமார் எடுத்த முடிவுகளின் பலன்களை அறுவடை செய்தவர் என குறை கூறுவோர் உண்டு. பீஹாரை சீரழித்தவர் இரயில்வேயை எவ்வாறு சீரமைத்தார் என்று கேள்வி கேட்பவரும் உண்டு. ஆனால் அதிகாரிகள்தான் இம்மாற்றத்திற்கு காரணம் என்றாலும் லாலுவின் யோசனைகளும் யுக்திகளும் அவர்களை ஆட்டுவிக்க காரணமாயிருந்தது. அவரே கூறுகிறார்: "நான் வருமானத்தை அதிகரிக்க புதுவித ஆலோசனைகள் வழங்கினேன், 1.45 மிலியன் இரயில்வே தோழர்கள் அதனை நிறைவேற்றினர். என் எண்ணமெல்லாம் பயணிகளுக்கும் பொருள்போக்குவரத்திற்கும் கட்டணத்தைக் கூட்டாமல் இருக்கவேண்டும் என்பதுதான்".

இலாலுவின் முந்தைய ஆட்டம் சரியில்லாதிருக்கலாம். அரசியல் கொள்கைகளில் மாற்றுக்கருத்துக் கொண்டிருக்கலாம். செலவழிக்கத் தயங்காது ஆனால் வரவைப் பற்றி கவலைப் படாத ஒவ்வொரு அமைச்சரும் அவரவர் துறையை தன்னிறைவு பெற்று விளங்கச் செய்ய லாலுவின் முன்னுதாரணம் இன்றைய முக்கியத் தேவையாகும்.அவ்வகையில் அவரது சாதனையை பாராட்டுவோம், அவர்பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துவோம்!

நவம்பர் 26இல் இதே கழகத்தில் நடக்கவிருக்கும் Confluence-2006 விழாவில் பங்கேற்கவரும் இவரது Bete Noire நிதிஷ்குமார் உரையைக் கேட்க ஆவல் அதிகமாயுள்ளது.

பி.கு: தலைப்பு இந்தியில் உள்ளதிற்கு மொழிப்பற்றாளர்கள் மன்னிக்கவும்.


வெள்ளை மாளிகையில் நம் குயில்!!

வருடக் கடைசி வந்து கொண்டிருக்கிறது. நமக்காகவோ நமது வாடிக்கையாளர்களுக்காகவோ நாட்குறிப்பு புத்தகங்கள் வாங்க எந்த புத்தகநிலயத்திற்கு சென்றாலும் நம்மைக் கவருவது நைட்டிங்கேல் நாட்குறிப்பு புத்தகங்கள் (டயரி) தான். சிவகாசியில் தயாரிக்கப்படும் நைட்டிங்கேல் எழுதுபொருட்கள் இன்று உலகெங்கும் விற்கப் படுகின்றன.அதன் விற்பனை ரூ.200 கோடியை தாண்டியுள்ளது.

"எங்கள் எழுதுபொருட்கள் ஐக்கிய அமெரிக்க குடியரசின் வெள்ளை மாளிகைக்கும் விற்கப்படுகின்றன" எனப் பெருமைப் படும் இந்நிறுவனத்தை (ஸ்ரீநிவாஸ் ஃபைன் ஆர்ட்ஸ் (பி) லிமிடேட்) திரு ஆர். சொக்கலிங்கம் அவர்கள் 1964இல் துணிமணிகளுக்கான லேபல் அச்சடிக்க ஆரம்பித்தார். சிலவருடங்களிலேயே தமது மகன் திரு.இராஜேஷை இங்கிலாந்திற்கு அனுப்பி நவீன அச்சகமுறைகளில் பயிலச் செய்தார். தவிர ஜெர்மனியிலிருந்து 1.5கோடி பெருமான அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்து தீப்பெட்டி லேபல்களையும் பட்டாசு லேபல்களையும் தயாரித்து வந்த சிவகாசியில் புரட்சி செய்தார். அவருடைய முன்னோக்கிய பார்வை இன்று பலனைத் தந்திருக்கிறது. மற்ற outsourcing போல, உலக வியாபாரங்களுக்கு அச்சடிக்கும் நிறுவனமாக விளங்குகிறது.

இந்த செய்தியை யாஹூ செய்தியில் கண்டவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இத்தகைய சாதனை படைப்போரே தமிழ்நாட்டை உலக பொருளாதாரத்தில் முன்னேடுத்துச் செல்பவர். அவர்தம் எண்ணிக்கை வளர்க!!

தலைவணங்குதும் கலாசாலையே!!

சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது வருட கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். மிகவும் தொன்மை வாய்ந்ததும் பாரம்பர்யமிக்கதுமான இப்பல்கலைக் கழகம் அவருக்கு மட்டுமன்றி எனக்கும் கல்வி யளித்த நிறுவனமாகும். இன்றைய பொறியியல் பலகலைக்கழகங்கள் வருமுன்பு அனைத்து கல்லுரிகளும் (நான் படித்த பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி உட்பட) சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சியிலே அமைந்திருந்தது. முனைவர் ஏ.இலக்ஷ்மணசாமி முதலியார் அவர்கள் கையொப்பமிட்ட பட்ட சான்றிதழ் பெற பேராவல் கொண்டிருந்தேன். (ஆனால் நான் படப் படிப்பு முடித்த சமயத்தில் திரு. நெ.து.சுந்தரவடிவேலு அப்பதவியை அலங்கரித்தார்). ஒவ்வொரு பதவிக்கால முடிவிலும் வேறோரு துணைவேந்தர் நியமிக்கப் படும் இக்கால கட்டத்தில் அவர் 27 வருடங்கள் தொடர்ந்து அப்பதவியை வகித்து வந்தது ஒரு சிறப்பம்சமாகும். ஆற்காட்டு சகோதரர்கள் என அழைக்கப் பட்ட இரட்டையரில் மூத்தவரான ஏ. இராமசாமி முதலியார் திருவிதாங்குர்/கேரள பல்கலைக்கழக துணை வேந்தராக பணிபுரிந்ததும் ஜஸ்டிஸ் கட்சியின் கட்சிப்பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்ததும் இதர விதயங்கள்.

இப்பல்கலையின் நூற்றாண்டு விழா மண்டபத்திலேதான் எனது அரசுப்பணிக்கான UPSC தேர்வுகளை மெரினா காற்றை அனுபவித்தவாறு எழுதியநாட்கள் நினைவுக்கு வருகின்றன. 1857இல் தோற்றுவிக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் அது மட்டுமே தென்னிந்தியா முழுமைக்கும் இருந்த ஒரே பல்கலைக் கழகமாக நாம் சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தது. இதன் முன்னாள் மாணாக்கர் பட்டியலில் முன்னாள் குடியரசு தலைவர்கள் டாக்டர் S.இராதாகிருஷ்ணன், V.V. கிரி, சஞ்சீவ ரெட்டி, R.வெங்கட்ராமன், K.R. நாராயணன் ஆகியோரும் நோபல்பரிசு பெற்ற C.V. இராமன் மற்றும் S. சந்திரசேகர் ஆகியோரும் அடங்குவர்.

இன்றைய விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் ஆராய்ச்சிகளின் தரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.எந்த ஒரு பல்கலைக் கழகமும் அங்கு நடத்தப் பெறும் ஆராய்ச்சிகளின் தரத்தாலேயே அறியப் படும் என்றார். சென்னை,மும்பை மற்றும் கொல்கொத்தா பல்கலைகளின் இணையபல்கலைக் கழக வலைவாயிலை திறந்து வைத்தார்.இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தரமான கல்வியைப் பெறமுடியும் என குறிப்பிட்டார். 150 வருடங்களைக் குறிக்க 150 புத்தகங்கள் வெளியிடும் முகமாக தொடக்கநாளன்று 16 புத்தகங்களை வெளியிட்டார். மிகுதி புத்தகங்கள் வருட முழுவதுமான கொண்டாட்டங்களின் அங்கமாக வரும் நாட்களில் வெளிவரும்.

மத்திய அரசிலிருந்து கல்வி அமைச்சர் அர்ஜுன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொள்ள மாநில முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார். மத்திய கல்வி அமைச்சர் இராஜிவ்காந்தி பெயரில் சமகால ஆய்வுகளுக்கான பிரிவு(Chair) ஏற்படுத்தப் படுமென்றும் மத்திய நிதி அமைச்சர் நவீன nanotechnologyக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் மையம் அமைக்கப் படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் திராவிட இயக்க கல்விக்கான மையம் அமைக்கப் படுமென்றும் அறிவித்தனர்.இந்நாளை நினைவுறும் வண்ணம் தபால்தலையும் முதல்நாள் உறையும் வெளியிடப்பட்டன.