சோம்நாத் சாட்டர்ஜி - குடியரசுத்தலைவர் ?
தற்போதைய குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் பணிக்காலம் ஜூன் 2007 இல் முடிவடைகிறது. இவருக்கு அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து ஆதரவு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் தலைமை டாக்டர் கரண்சிங்கின் பெயரையும் பிஜேபி துணை குடியரசுத் தலைவர் திரு.பைரோன்சிங் ஷெகாவத் பெயரையும் முன் வைத்துள்ளன. ஆனால் கு.த தொகுதியில் இருவருக்குமே உறுதியாக வெற்றி வாய்ப்பிற்கான வாக்குகள் எண்ணிக்கை இல்லாததை உணர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக மக்களவை சபாநாயகர் திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பெயரை அரசியல் கட்சிகளிடம் தூது விட்டுக் கொண்டிருக்கிறது. திரு எச்சூரி இதுபற்றி பிஜேபி தலைவர்களை கலந்தாலோசித்திருப்பதாக தெரிகிறது.திரு. பிரகாஷ் கராட் சமாஜ்வாடி,தெலுகுதேசம்,NCP, RLD கட்சிகளுடனும் அவர் மனைவி பிருந்தா கராட் BSPயின் மாயாவதி, அதிமுக பொதுசெயலாளர் செல்வி ஜெயலலிதா ஆகியோருடன் பேசவிருப்பதாகத் தெரிகிறது.
நாட்டு நடப்பையும் குடியரசு தலைவர் தொகுதியின் எண்ணிக்கைகளையும் கணக்கில் கொண்டால் ஒரு பொதுவுடைமை கட்சி வேட்பாளர் அடுத்த ஜனாதிபதியாக வர நல்ல வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. அடுத்த மத்திய தேர்தலில் மூன்றாம் அணி அமையுமானால் மார்க்ஸிஸ்ட் ஜனாதிபதியின் தயவில் அவர்கள் கூட்டணி ஆட்சிக்கு தலைமையேற்கவும் இயலும். இன்றுபோல் பின்னாலிருந்து ஆட்டி வைக்க வேண்டியதில்லை.
திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பத்து முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஜார்கண்ட் தீர்ப்பின்போது உச்சநீதிமன்றத்துடன் முரண்பட்டு குடியரசுதலைவரின் சுட்டுதலுக்கு ( Presidential reference) வேண்டியவர். அவர் பணியாற்றும் சாந்திநிகேதன் ஸ்ரீநிகேதன் வளர்ச்சி ஆணையத்தின் மூலம் ஊதியம் (Office of Profit) பெறுவதாக குற்றம் சாட்டப் பட்டவர். இவரது தந்தை நிர்மல் சாட்டர்ஜி பிஜேபியின் முன்னோடியான அகில் பாரதீய இந்து மகாசபையின் தலைவராக இருந்ததும் குறிப்பிட தகுந்தது.



