இரங்கல்


கோண்டு (TMS)
மறைவு :30 ஜுன்2005

கனவுகள் கண்டோம் கல்லூரியில்
கவலைகள் மறந்தோம் கூட்டாக;
கோவில்கள் இங்கிங்கே என்றேதான்
வழி சொல்லி காண்பித்தாய் மும்பையெல்லாம்.

ஆதரவற்றோருக்கு துணையாக
அடுத்தவர் தோல்விக்கு தோளாக
வெற்றிக்கு வித்திடும் ஊக்கமாக
வாழ்வெல்லாம் வாழ்ந்திட்ட எம்மான் நீ !

இரங்கல் எழுதிடும் நாள் வந்ததென்ன,
இனி நீ யின்றி நான் செய்வதென்ன,
வருகிறேன் என சொல்ல மறந்தாய் நீ
போகிறேன் என்பதோ நம் நட்பு!

காலனும் பிரிக்காத இணை யென்றே
காலமெலாம் இருப்பதுவும் கனவாச்சே!
காத்திருப்பாய் மேலெங்கோ சென்றவிடத்தில்
நான் வரும் வேளைவரை வழி சொல்ல!

இன்று எனது அருமை நண்பன் கோண்டு என அழைக்கப்படுகின்ற T M சுப்ரமணியனின் முதலாமாண்டு நினைவு நாள். ஐ.ஐ.டியில் இணைந்து கொச்சியிலும் மும்பையிலும் ஒருசேர பணிபுரிந்து வாழ்வில் பின்னிப் பிணைந்தவர் திடீரென மாரடைப்பால் சென்றவருடம் இதேநாள் இறைவனடி எய்தினார். அவரது ஆன்மா சாந்தியடையவும் குடும்பத்தினரின் துக்கத்தை ஆற்றுமுகமாகவும் அவரை நினைவு கூர்ந்து இந்த இடுகையை அர்ப்பணிக்கிறேன்.


Strawberry தேசம்

விடுமுறை முடிந்து பள்ளி செல்லும்போது "விடுமுறையை கழித்ததெப்படி " என்பதே முதல் கட்டுரைப் பயிற்சியாகவிருக்கும். நான் சென்ற இன்பச்செலவு என்று எழுதுகின்ற நேரத்திலே அது என்ன இன்பச் செலவு என கேள்வி கிளம்பும். இன்றைய மாணவர்கள் picnicஐ எவ்வாறு குறிப்பிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் படித்த முதல் பயணக் கட்டுரை திரு. சி.சுப்பிரமணியம் அவர்களின் ஆனந்தவிகடனில் வந்த தொடராகும். அதன் தொடர்ச்சியாக மணியனின் இதயம் பேசுகிறது பயணக் கட்டுரைகள் பல்வேறு நாடுகளின் பன்முகத்தன்மையை அறிமுகப் படுத்தின. சுற்றுலாப் பயணங்களிலும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தின. வருடம் ஒரு இடம் என்று குடும்பத்தினருடன் செல்கின்ற வழக்கமும் வந்தது.

சென்ற வார இறுதியில்,கோள்கள் அதிசயமாக சேர்வதுபோல்,மனைவி,மகள், மகன் சேர்ந்ததைக் கொண்டாடும் வகையில் எல்லோரும் அருகாமையில் அமைந்த மகாபலேஷ்வர் என்ற மலைமகிழ்விடத்திற்கு செல்ல விழைந்தோம். மழைக்காலம் தொடங்கும் இந்நேரம் பயணிப்பதற்கும் அழகை ஆராதிக்கவும் சரியானதில்லை என அண்டைவீட்டாரும் நண்பர்களும் சொன்னாலும், கொட்டுகின்ற மழையை கூடத்திலிருந்து பார்த்தாலும் குடும்பத்தினர் கூடி இருப்போமே என்று எண்ணி பயணப்பட முடிவெடுத்தோம். இருப்பினும் சாலைகள் மோசமாக இருக்குமென வாடகை வண்டியை எடுத்துக் கொண்டோம். புனெ விரைவுத்தடத்தில் அதிவேகத்தில் செலுத்த எண்ணியிருந்த மகனுக்குத் தான் வருத்தம்.

நாங்களிருந்த புதுமும்பையின் புறநகர்ப் பகுதியிலிருந்து புனெயை ஒன்றரைமணி நேரத்தில் கடந்து புனெ-சென்னை புனரமைக்கப்படும் தங்கநாற்கர சாலையில் பயணித்து போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி ஒரு சாலைப்பிரிவில் மலையேறினோம். மதியம் பனிரெண்டு மணிக்கு ஓட்டலில் செக் இன் செய்யும்போது, அப்பாடா, மழை இல்லை என்று சொன்னது காதில் விழுந்தாற்போல சடசடவென்று பலத்த மழை. வந்த சிரமம் ஆற்றிக்கொண்டு மதிய உணவும் முடித்துக் கொண்டு மழை நிற்குமா வெயில் வருமா என காத்துக் கொண்டிருந்தோம். இதற்கிடையே மழையில் கோவில்களை முடித்துவிடலாம் என்ற மக்களின் விருப்பப்படி, கொட்டும் மழையில் பஞ்சகங்கா ஆலயமும் மகாபலேஷ்வர் என்ற சிவன் கோவிலுக்கும் சென்று வந்தோம். பஞ்சகங்கா கோவில் கிருஷ்ணா,வெண்ணா, சாவித்திரி, கோய்னா, காயத்திரி என்ற ஐந்து நதிகள் பிறப்பிடமாக கூறுகிறார்கள். அதேபோல் மகாபலேஷ்வர் இலிங்கமும் தானே சுயம்புவாக உருத்திராட்ச அமைப்பில் தோன்றியதாக சொல்கிறார்கள். இரண்டும் புராதன கோவில்கள்.என்ன ஆச்சரியம், வெளியில் வந்தால் மழையும் நின்றிருந்தது. உடனே அங்கு காண வேண்டிய பாயின்ட்களை(!) ஆய்வு செய்தோம். அங்கு ஒவ்வொரு காட்சியிடங்களையும் ஏதாவது ஐரோப்பிய பெயரிட்டு வில்சன் பாயின்ட்,கேட்ஸ் பாயின்ட் என்று சொல்கிறார்கள்.மதனகாமராஜனின் கம் டு த பாயின்ட் நினைவிற்கு வந்தது. பாயின்ட் பை பாயின்ட்டாக பார்த்துவிட்டு விடுதிக்கு மனநிறைவோடு திரும்பினோம். மலைமுகட்டிலிருந்து பசுமையான மலைப்பிரதேசங்களை பார்ப்பது இரம்மியமாக இருப்பதோடு மனதிற்கு அமைதியும் கிடைக்கிறது. காரை நிறுத்திவிட்டு ஒவ்வொரு இடத்திற்கும் நல்ல நடை வேறு, உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி கொடுத்தது.

மறுநாள் காலையில் அங்கிருந்து 25 கி.மீ தூரத்தில் இருந்த வீர சிவாஜியின் பிரதாப்கட் கோட்டைக்குச் சென்றோம். ஒரு குன்றின் உச்சியில் அமைக்கப் பட்டிருந்த அந்தக் கோட்டைக்கு மேலே அதன் வாயில் வரை செல்ல மலைப்பாதை இருக்கிறது. கோட்டைக்குள் சிவாஜி வழிபட்ட மா பவானி கோவில் உள்ளது. அதிகம் பேர் வரும் சுற்றுலாத் தளமாயினும் விவரப் பலகைகள் எதுவும் காணவில்லை. வழிகாட்டிகளின் தொந்திரவு அதிகமாயிருந்தது. அதிகாரபூர்வ கட்டணமாக ரூ80/- தீர்மானித்திருந்தார்கள். எங்களுக்கு விருப்பமில்லாவிடினும் ஒரு வயதானவர் மேல் பரிதாபப் பட்டு நியமித்துக் கொண்டோம். (படத்தில் பழங்கால கருவிகளுடன் இருப்பவர்.) மனிதர், ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் வரலாற்றைப் பிழிந்து விட்டார். தங்கள் மண்ணின் பெருமையை எல்லாம் பொருமித் தள்ளி விட்டார். அங்கு ஔரங்கசீப்பின் தளபதியாக சமாதானத்திற்கு வந்து தன்னைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஆறரை அடி அஃப்சல்கானை ஐந்தரை அடி சிவாஜி எப்படி புலிநகங்களைக் கொண்டு கிழித்தார் (literally) என்பதை நாடகமாகவே நடத்திக் காட்டினார். எனக்கு கள்ளபார்ட் :) இங்கும் ஒரு பாயின்ட் உள்ளது, பனிஷ்மென்ட் பாயின்ட். அங்கு எதிரிகளை கோணிப்பையில் இட்டு மலைமுகட்டிலிருந்து தள்ளிவிடுவார்களாம். மற்றபடி அங்கும் இயற்கையழகை முழுமையாக இரசித்துவிட்டு விடுதி திரும்பினோம்.

மதிய உணவிற்குப் பிறகு அங்கிருந்த வெண்ணா ஏரியை பார்த்துவிட்டு, அங்கிருந்த ஸ்ட்ராபெர்ரி பண்ணையை நோக்கம் விட்டோம். அப்போதைய (fresh) ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன் கிரீம் கலந்து மகனும் மகளும் கலக்க நான் நாவல்பழங்களை இரத்தத்தின் இனிப்பைக் குறைக்க சுவைத்தேன். வீட்டிற்கு ஜாம்,ஜெல்லி, ஜூஸ் என ஸ்ட்ராபெர்ரி, லிச்சி, கோகம் (நம்ம ப்ளம்ஸ்)பழரசங்களை வாங்கிக் கொண்டோம். அங்கிருந்து பஞ்சகனி என்ற ஊரின் பாயின்ட்களையும் பார்த்தவாறு ஊர் திரும்பலானோம்.

திரும்பும் வழியில் புனெ- சதாரா NH4 சாலையில் கெத்காவலெ என்ற சிற்றூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் பற்றி கேள்விப்பட்டு சென்றோம். இங்கெல்லாம் வெங்கிஸ் சிக்கன் என பதப்படுத்தப்பட்ட கோழியை விற்கும் வெங்கடேஸ்வரா ஹாட்சரீஸின் அதிபர் டாக்டர் பி.வி.ராவின் கனவாக திருமலா-திருப்பதியின் நகலாக இக்கோவில் கட்டப் பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து பூசாரிகளும், இலட்டு பிடிப்போரும் மாலை தொடுப்போரும் பணியமர்த்தப் பட்டுள்ளனர். ஏராளமான அலுவலர் கோவிலை தூய்மையாக வைத்திருக்கவும் வரும் பக்தர்களை சீரமைப்பதிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். எங்கேயோ இருந்தாலும் பாலாஜி என்றாலே கூட்டமும் வரிசையும் தான். தரிசனம் முடிந்ததும் சூடான பூந்தி கொடுத்தார்கள். அதனுடன் கடந்த இருநாட்களின் காட்சிகளையும் அசை போட்டவாறே புனெ-மும்பை விரைவுப் பாதையை பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

'ஆறு'வது சினம்!


யாழிசைசெல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு நண்பர் சுகா அழைத்திருக்கிறார்். தமிழ்மணத்தின் அண்மைக்கால பதிவர்களுக்கு இது தங்கள் விருப்ப வெறுப்புகளை பதிய நல்ல வாய்ப்பு. ஆனால் இதன் முந்தைய பதிப்பான நவ்வாலு விளையாட்டில் பங்கேற்றவர்களுக்கு இது ஒரு மீள்நினைவே என்பதால் புதியவர்களின் ஆறு பதிவுகளைக் காணவே விருப்பம். என்னுடைய நாலு பதிவு இங்கே. அதில் விடுபட்டவை சிலவற்றை மட்டும் பதிகிறேன்.

அ. அறிமுகமான ஞாபகம் கொள்ளும் தமிழ்க் கவிகள்:
1. வள்ளுவன்
2. கம்பன்
2. சமயக்குரவர் நால்வர்
3. அருணகிரி
4. வள்ளலார்
5. அபிராமி பட்டர்
6. பாரதி

ஆ.திரைப்பட கவிஞர்கள்
1. கண்ணதாசன்
2. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
3. உடுமலை நாராயணகவி
4. வாலி
5. வைரமுத்து
6. தாமரை

இ.மறக்கமுடியாத நூல்கள்
1. பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்
2. துப்பறியும் சாம்பு (Comics)
3. தேவனின் நாவல்கள்
4. கென்னடியின் கதை - மயன்
5. சுஜாதா தொடர்கள்
6. வாஷிங்டனில் திருமனம் - சாவி

ஈ. பிடித்த உணவு - தேவையா ?
1. இட்லி
2. தோசை
3. சன்னா படூரா
4. ஆலு தம்
5. மகாராஷ்ட்ராவின் போகா (அவல் உப்புமா)
6. கேரள கரிமீன் fish fry

உ.போகவிரும்பும் இடங்கள்
1. அந்தமான் தீவுகள்
2. காஷ்மீர்
3. அருணாச்சல்பிரதேசம்
4. ஆஸ்திரேலியா, நியூசி
5. தென்னாப்பிரிக்கா
6. வான்வெளி (Outer Space)

ஊ. வலையில் அடிக்கடி போகுமிடம்..
1. கூகுள்
2. யாகூ,ஜிமெயில் மின்னஞ்சல் சேவைகள்
3. தமிழ்மணம்
4. தேன்கூடு
5. /.
6. விக்கிபீடியா

எ. பொழுது போக்கு..
1. தொலைகாட்சி பார்ப்பது..
2. குடும்பத்தினருடன் சிற்றுலா (picnic) செல்வது
3. திரைப்படம் செல்வது
4. மால்(Mall)களை நோட்டம் விடுவது
5. வீட்டை சீரமைப்பது ( டோண்டுவின் ஒழிப்பது)
6. வலை மேய்வது

ஏ. அடிக்கடி போகும் வலைப் பதிவுகள்
1. பத்ரி
2. துளசி
3. டி.பி.ஆர் என்னுலகம்
4. ராமச்சந்திரன்உஷா
5. பெனாத்தலார்
6. ஜி.இராகவன்/குமரன்

ஐ. மேலும் சில வலைப் பதிவுகள்:
1.இட்லி-வடை
2. பொன்ஸ்
3.சிவமுருகன்
4. இளவஞ்சி
5. ராசா
6. $elvan


நான் அழைக்க விரும்பும் ஆறு பேர்:
1. சிவமுருகன்
2. மலைநாடான்
3. வெளிகண்டநாதர்
4. நிலா
5. துபாய்ராஜா
6. ஜெயராமன்