Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts
Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts

இலசந்த விக்ரமதுங்கேயின் கடைசி கடிதம்

இலங்கை இராஜபக்சே அரசின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்து தனது உயிரை பணயம் வைத்த இலசந்த விக்ரமதுங்காவின் படுகொலையை ஒட்டி பிரித்தானிய இதழாளர் தனது பதிவில் எழுதியதை இன்று வந்த மின்னஞ்சலில் சுட்டி கிடைக்கப் பெற்று படிக்கும் வாய்ப்பு கிட்டியது. தாம் கொல்லப்பட விருப்பதை முன்னரே அறிந்திருந்த விக்ரமதுங்கா தனது இறப்பின் பின்னர் வெளியிட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அதனை உள்ளடக்கிய அப்பதிவில் இலங்கை அரசின் ஆணவ மற்றும் அடக்குமுறை அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
தமது பதவிகளுக்காக குரல் கொடுக்கத் தயங்கும் தமிழக தலைவர்களை விட,சந்தர்ப்பவாத தமிழக இதழாளர்களை விட, தனது உயிரையே விலைகொடுத்து தனது இன அரசாயினும் இனபேரழிவிற்கு எதிராக எழுதிய இலசந்தே நினைவில் கொள்ளப்பட வேண்டியவராகத் தெரிகிறார்.
அந்த சுட்டியை பகிர்வதின் மூலம் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

இங்கு காதலிப்பது குற்றம்

அண்மையில் மும்பை காவல்துறை நன்னடத்தைக் காவலர்களாக வலம் வருகிறார்கள். சென்ற வாரம் பாந்திரா கடற்கரை, தானெ உப்வான் ஏரி மற்றும் புதுமும்பை பகுதிகளில் 'ரெய்ட்' நடத்தி இளஞ்சோடிகளை கைது செய்துள்ளனர். அவர்களின் குற்றம் அருகருகே அமர்ந்து இயற்கையை இரசித்ததுதான். ஆளுக்கு ரூ.1200/- அபராதமும் விதித்தனர். பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துமுகமாக கைகளைப் பிணைத்துக் கொண்டும் கட்டிஅணைத்தும் இருந்திருக்கிறார்கள். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என காதலர்களும் பெற்றோர்களும் எதிர்ப்புக் குரல் தெரிவித்திருக்கிறார்கள்.

மும்பை ஒரு தூங்காத நகரம். அமைதியாக தூங்கவும் இடம் இல்லாத நகரம். சிறிய அடுக்ககங்களில் தனிமையும் அமைதியும் கிடைக்காத சூழல். இந்நிலையில் மணமான ஜோடிகளே இயற்கையிடங்களை நாடும் தேவை எழுகின்ற நகரம். மேற்கத்திய நாகரீகத்தினை மால்களும் திரைப்படங்களும் பரப்புகின்ற தாக்கத்தினூடே இயற்கையான மும்பையின் பரந்த மனப்பான்மை மக்களிடையே காவலர்கள் தங்கள் எல்லைகளை மீறுகிறார்கள் என்ற எண்ணத்தை எழுப்பி வருகிறது. அடிக்கடி நிகழும் தீவிரவாத செயல்களைத் தடுத்து நிறுத்த முடியாத காவல்துறையினர் இளஞ்சோடிகளிடம் தங்கள் வீரத்தைக் காண்பிப்பதாக பத்திரிகைகளில் கடிதம் எழுதுகிறார்கள்.

இந்த விவாதத்தின் இருபக்கங்களிலும் உண்மையில்லாமல் இல்லை. காவலர்களுக்கென்று இல்லாவிடினும் செல்பேசி ஆபாசப்படங்கள் வலம்வரும் இந்நாட்களில் பொது இடங்களில் இளஞ்சோடிகள் மெய்மறந்திருப்பது அவர்களது தனிவாழ்விற்கு கேடானதே. கிழக்கும் மேற்கும் இல்லாத இரண்டுங்கெட்டான் கலாசாரத்தில் இது குழப்பத்தையே விளைவிக்கும். அதேசமயம் இரும்புமனம் படைத்த குற்றவாளிகளுடன் பழகிய காவலர்கள் கரும்புவில்லால் அடிபட்டவர்களை முரட்டுத்தனமாக நடத்துவதும் விரும்பத் தக்கதல்ல. சற்றே எல்லை மீறுபவர்களையும் எச்சரித்து கண்ணியமாக கலைத்திருக்கலாம்.

மும்பையை ஷாங்கை ஆக்குவதாக அரசியலார் முழங்குகிறார்கள்;அதற்குமுன் பாரிஸ் ஆகிவிடும் போலிருக்கிறது.

தொடர்புள்ள சுட்டி: மும்பை இணை காவல் ஆணையரின் நேர்முகம்

காலிலே கல்வண்ணம் கண்டார் !

கால் கொலுசிலிருந்து மாணிக்க கற்கள் சிதறுவதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். காலிலிருந்தே கற்கள் சிதறினால்...சிடி சுஹானா சாடோன் என்கிற மலேசிய இளம்பெண்ணின் காலடியிலிருந்து தோல் பிளவுபட்டு கற்கள் வெளிப்படுகின்றனவாம். மலேசியாவின் தி நியூஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் இந்த 23 வயது பெண்ணின் காலில் விளைந்த கற்களைப் படம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இரப்பர் இறக்கும் தொழிலாளியான அவரது அன்னை காமிரியா, விளம்பரத்திற்காக இல்லை,பெண்ணின் நோயும் வலியும் தீர யாராவது தீர்வு சொல்வார்களோ என்றே ஊடகங்களை நாடியுள்ளதாகக் கூறியுள்ளார். இருப்பினும் TV3 நிகழ்ச்சியில் வந்தபிறகு சிடி ஓரிரவில் ஒரு சூப்பர்ஸ்டாராகி உள்ளார்.

தனது பேட்டியில் சிடி சாதாரணமாக நாலைந்து கற்கள் வருவதாக கூறினாலும் கடந்த சிலநாட்களாக இரு கோலிகுண்டு அளவு கற்களே வெளிவந்துள்ளன.கற்கள் வெளிவருமுன் குமட்டலும் பல்வலியும் ஏற்படுவதாக கூறுகிறார். பிரசவ வலிபோல், அந்த சமயம் கற்கள் வெளிவந்தால் போதும் என்பது போல் வலிப்பதாகவும் கூறுகிறார். அவர் தூக்கத்தில் இருக்கும் போதும் கற்கள் வெளிப்படுவதாகவும், பெரிய கற்களாக இருந்தால் நோண்டி எடுக்கவேண்டியிருப்பதாகவும் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

மருத்துவர்களின் எக்ஸ்ரே சோதனைகள் எந்த ஒரு அசாதரண நிலையையும் காட்டவில்லை.கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இந்த வியாதி(?) இருப்பதாகத் தெரிகிறது.

விக்கிபீடியாபடி முத்துக்கள் உருவாவது எப்படி:

"முத்து இருவாயில் (bivalve) மெல்லுடலி (mollusc) உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக்குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அத்துணிக்கைகளின் மீது பூசப்படுகின்றது. இச் செயற்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதி வாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. இவ்வாறு சுரக்கப் படுகின்ற பதார்த்தம் அரகோனைட் அல்லது கல்சைட் போன்ற படிக வடிவிலுள்ள கல்சியம் காபனேற்றையும், கொன்சியோலின் எனப்படும் ஒரு வகைப் பசை போன்ற கரிம வேதிப்பொருள் ஒன்றையும் கொண்ட கலவையாகும். நேக்கர் (nacre) அல்லது முத்தின் தாய் (mother-of-pearl) என அழைக்கப்படும் இப்பொருள் பல படைகளாக வெளித் துணிக்கை மீது பூசப்படுகின்றது."

ஒருவேளை இவர் உடலுக்குள் இத்தைகைய உயிரினம் ஏதாவதொன்று பாரசைட்டாக ஊடுறுவியுள்ளதோ ?

இவர் தமிழகம் வந்தால் காலடியில் கற்கள் எழுகின்றனவோ இல்லையோ 'பக்தர்கள்' விழுவது நிச்சயம்.

நொய்டா கொலைகள்


கடந்த சில நாட்களாக தில்லியின் சுற்றுப்புர நகரான நொய்டா (NOIDA)வின் புறத்தே நிதாரி கிராமத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ள உடற்சிதிலங்கள் நம்மிடையே திகழும் வக்கிர உள்ளங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது. கொலையின் கோரங்கள் தெரியத் தெரிய மனம் பதறுகிறது. பச்சிளம் சிறாரை வன்புணர்ந்து கொலை செய்து பங்களாவின் பக்கத்தில் ஓடும் சாக்கடையில் வீசி எறிந்ததாக தொழிலதிபரான மொஹிந்தர் சிங்கும் அவர் வேலையாள் சுரிந்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைகளின் பின்னணி குறித்து பல கருத்துக்கள் யூக வடிவிலே வலம் வருகின்றன. சில மனித உறுப்புக்களை விற்பதற்காகவென்றும் சில பயங்கரமான மத சடங்கிற்காகவென்றும் வேறு சில உயிரற்ற சடலங்களுடன் கொள்ளும் பாலியல் இச்சை (necrophilia)களுக்காக வென்றும் பலவாறு செய்திகள் வருகின்றன. எதுவாக இருப்பினும் மிகுந்த மன விகாரமடைந்த மனிதனின் செயல்கள் இவை என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

ஆனால் இந்த விகாரம் குற்றம் புரிந்தவர்களுடன் நிற்கிறதா என நம் சமுதாயம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கொலையுண்டவர்களின் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்று முறையிட்டும், குற்றத்தைப் பதிவு செய்யாமல் அவர்களை ஏளனமாகப் பார்த்த காவலர்களின் மனம் கல்லாயிற்றா ? இது ஏதோ வடக்கில் சிறு கிராமத்தில் நடந்த ஒரு விலக்கு என்று நம்மில் யாரேனும் கூற முடியுமா? நாளும் எல்லா இடங்களிலும் நம் காவலரின் அலட்சியமும் ஆர்வமின்மையும் காண்பதுதானே ?

சரி, காவலர்கள் தான் தங்கள் பணியில் அலட்சியமாக இருந்தார்கள் என்றால் உள்ளாட்சி துப்புறவு தொழிலாளர்கள் அத்தனை மனிதகழிவுகள் கோணிப்பைகளில் அந்த வீட்டினருகே சாக்கடையில் போடப்படுவதை எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தனர் ? ஏதோ தவறு அருகாமையில் நடக்கிறது என்று காவலரை உஷார்படுத்தியிருக்கலாமே ?

இதெல்லாம் விட்டாலும், அந்த வீட்டின் அக்கம்பக்கத்துக்காரர்களும் தங்கள் சுற்றுவட்டாரத்தில் நடப்பதை காணாமல் தங்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்த கிராமத்திலேயே இந்த நிலை என்றால் அடுத்தவர் யாரென்றே அறியாது வாழும் சென்னை போன்ற பெருநகரங்களில் சொல்லவே வேண்டாம்.

இதற்கெல்லாம் சிகரமாக பாதிப்படைந்த பெற்றோரும் மற்றவர்களும் தங்கள் கோபத்தை நேரடியாக மொஹிந்தர் வீட்டின் மீது கல்லெறிந்து நீதி பரிபாலனத்தை தங்கள் கைகளில் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் சட்டம் ஒழுங்கு, நீதி மீது தங்களுக்கிருக்கும் நம்பிக்கையின்மையையும் நமது காட்டுமிராண்டித் தனத்தையும் பறை சாற்றியிருக்கிறார்கள்.

குற்றவிசாரணையும் நீதிவழங்கலும் துரிதப் படல் வேண்டும்; தவறிழைத்த அலுவலர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்; மேலாக குடிமக்கள் இயந்திரதனத்தில் சிக்கி நம் பொறுப்புக்களை மறக்கிறோமா எனவும் சிந்திக்க வேண்டும்.

டாலர் கடவுள்கள்

சென்னை அண்ணாசாலையிலுள்ள பூம்புகார் அங்காடிக்குச் சென்று மூன்றுதளங்களில் வைக்கப்பட்டுள்ள கலைநயம் மிக்க கைவினைப் பொருட்களையும் கடவுள் பொம்மைகளையும் கண்டு இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களில் ஒன்றாகும். மற்றவர்கள் புத்தகக் கடைகளிலும் பொருட்காட்சிகளிலும் செலவிடுவதைப் போன்று எனக்கு இத்தகைய கைவினைப் பொருட்களை பார்வையிடுவதிலும் சேர்ப்பதிலும் (வீட்டுஅதிபர் அனுமதிக்கும் எல்லைவரை) ஆர்வமுண்டு. நமது கடவுளர் சிலைகளை வெவ்வேறு நிலைகளிலும் பாவங்களிலும் அழகாக வடிவமைத்து நமக்கு பக்தி பரவசப்படுத்துவர். மண்பொம்மைகளின் கனம் குறித்தும் உடையும் தன்மை குறித்தும் வீட்டினர் குறை சொன்னாலும் அதனை அழகாக வார்த்து வண்ணம் பூசிய பரிச்சியமில்லாத அந்தக் குயவனாரிடம் மனம் பறிகொடுப்பேன்.

நவராத்திரி பண்டிகை சக்தியைப் போற்றவும் கல்விக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வதற்காகிலும் இந்தப் பொம்மைக் கலைஞர்களின் கைவண்ணத்தை வெளிக் கொணரும் ஒரு பண்டிகையாகும். கொலு வைப்பதே கடினமாகிவரும் இந்நாட்களிலும் வாயிலறை காட்சிப்பெட்டியில் வைத்திட சிறிய பளிங்கு, டெர்ரகோட்டா பொம்மைகள் விரும்பப் படுகின்றன. சென்றவிடங்களின் நினைவாக வாங்கிய சிறு பொம்மைகளும் இந்த இடத்திற்கு போட்டிப் போடுகின்றன.இவற்றினால் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து இந்தக் குடிசைத் தொழிலாளர்கள் நலிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சீனாவிலிருந்து மலிவு விலையில் நம் கடவுள் சிலைகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது மும்பையில் சீன பொம்மைகள் தான் அதிகம் விற்கப் பட்டன. இன்று கண்ட இச்செய்தி இன்னும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அமெரிக்காவின் பரிசுப்பொருட்கள் விற்கும் லெனக்ஸ் நிறுவனம் அதிக அளவில் இயந்திரங்கள் மூலம் நம் பொம்மைகள் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. சிம்மி சோப்ரா என்ற இந்திய அமெரிக்கரின் அறிவுறுத்தலின்படி, மிக்கி மௌஸும் டொனால்ட் டக்கும் தயாரித்து வந்தவர்கள் கணபதி, துர்கா, இலக்குமி பொம்மைகளை தயாரிக்கப் போவதாக திட்டமிட்டுள்ளனர். ஆறுமாத சோதனைகளுக்குப் பிறகு முதல் கட்டமாக 15-அங்குலஉயரமும் 12அங்குல அகலமும், 24-காரட் தங்கப் பூச்சும் கொண்ட ஆயிரம் விநாயகர் சிலைகளை $2000க்கு வெளிக் கொணர்ந்துள்ளனர். விற்பனை வேகமெடுக்கும் போது சந்தையில் குவியப் போகும் இந்தப் பொம்மைகள் நம் கைவினை தொழிலாளர்களின் வாழ்விற்கு கேள்விக்குறி எழுப்பப் போகின்றன.

இன்று நெசவாளர்களின் அவலநிலைபோல நாளை இத்தொழிலாளர்களும் அரசு மானியத்தை எதிர்நோக்கி வாழவேண்டியதாயிருக்கும்.

சாந்திக்கு சபாஷ் !

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் டிச.ஒன்றிலிருந்து கத்தாரின் தலைநகரான தோஹாவில் நடைபெற்று வருகின்றன. தடகளப் போட்டிகளைப் பிரதானமாகக் கொண்டிருந்த இந்தப் போட்டியில் டென்னிஸ் அறிமுகமான பின்னர் தடகள போட்டிகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. இருப்பினும் நம் இந்திய தடகள வீரர்கள் மனம் தளராமல் தஙகள் திறமைகளை சத்தமில்லாமல் வெளிப்படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சனியன்று தமிழ்நாட்டின் சாந்தி சௌந்தரராஜன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 நிமி.3.16 வினாடிகளில் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்கிறார். அதனை பாராட்டி முதல்வர் அவர்களும் பணமுடிப்பு அறிவித்திருக்கிறார். அவருக்கு நம் பாராட்டுக்கள்!!

அவரது பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். உடன் மூன்று சகோதரிகளும் ஒரு தம்பியும் கொண்ட தங்கள் குடும்ப பாரத்தைத் தாங்க முடியாமல் தன் பந்தய ஓட்டத்தையே நிறுத்தவும் எண்ணியிருந்தார் என அறியும்போது மனம் பதைக்கிறது. புதுக்கோட்டையை அடுத்த காத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சாந்திக்கு செயின் ட் ஜோசஃப் பொறியியற்கல்லூரி தான் அவரது ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்கும் முயற்சிகளுக்கு துணைநின்றிருக்கிறது. இதற்கு முன் ஆசிய தடகள போட்டிகளில் வெள்ளி வென்றிருந்தாலும் இங்கு நடந்த மாநிலங்களுக்கிடையேயான போட்டிகளில் சரிவர ஓடவில்லை. இதனால் ஏசியாட் குழுவில் இடம் பிடிப்பதும் கேள்விக் குறியாக இருந்தது. இருப்பினும் அவரது தன்னம்பிக்கையும் விடாத உழைப்பும் அவரது கனவை மெய்ப்பட வைத்திருக்கிறது.தன் முதல் சுற்றில் மெதுவாக ஓடியதே தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போயிற்று என்ற ஆதங்கமும் அவரது பேட்டியில் வெளிப்பட்டது. தங்கத்தை மாரியம் யூசுஃப் ஜமால் என்ற பாஹ்ரைன் பெண் வென்றார்.

சாந்தியின் சாதனைக்கு கைதட்டி பரிசு பெற்றபின் மானியங்கள் வழங்கும் அரசும் இந்திய தடகள கழகமும் இத்தகையோர் பணமுடையால் பங்கு பெறாமலே போயிருக்கக் கூடிய சாத்தியங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். திறமையுள்ளவர்களை இளம்வயதிலேயே இனம் கண்டு அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதே சிறந்த விளையாட்டு வீரர்களை வெளிக்கொணரும் வழியாகும்.

ஊடக வெளிச்சத்திற்காகவே நடவடிக்கைகள் மேற்கொண்டால் அடுத்த சாந்திகள் குடும்ப பாரத்தில் மேலே வரமுடியாமற் போகலாம்.

படப்பிடிப்பில் படபடப்பு!!

ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ப்ராட் பிட்டும் அவர் மனைவியும் நடிகையுமான அஞ்சலினா ஜோலியும் இந்தியாவில் தங்கள் படப்பிடிப்பிற்காக வந்திருக்கிறார்கள். கடத்திக் கொல்லப்பட்ட வால்ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் டானியல் பேர்ல் மனைவியாக ஜோலி நடிக்க பிட்ட் தயாரிக்கும் 'A Mighty Heart' படத்திற்காக புனேயில் தங்கி படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இராஜஸ்தானிலும் சில காட்சிகள் எடுக்கப் பட்டன. இவர்களைக் காண திரண்டிருந்த மக்களிடம் இவர்களின் தனி பாதுகாவலர்கள் நடந்து கொள்ளும் விதம் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

கடந்த வியாழனன்று மும்பையில் அஞ்சுமான்-ஏ-இஸ்லாம் பள்ளியில் நடந்த படப்பிடிப்பில் மீண்டும் தகராறு நிகழ்ந்திருக்கிறது. பள்ளி விட்டதும் தங்கள் குழைந்தைகளுக்காக காத்திருந்த பெற்றோருக்கும் இந்த மெய்காப்பாளர்களுக்கும் இடையே வாய்ச்சண்டை முற்றியிருக்கிறது.தங்களை அடித்துக் காயப்படுத்தியதாகவும் 'Bloody Indians' என இன அவமதிப்பு செய்ததாகவும் மும்பைகாவல் துறையில் வழக்குப் பதிந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று காவலாளிகளுக்கும் ஜாமீனில் விடுதலை அளித்து அடுத்த ஒருவாரத்திற்கு தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட பணிக்கப் பட்டுள்ளனர். இந்தப் பள்ளியில் படப் பிடிப்பு நடத்த காவல்துறை அனுமதியும் பெறவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே பிராட் பிட் மும்பை போலிஸ் கமிஷனர் திரு ராயை சந்தித்து நடந்த நிகழ்வுகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

பாகிஸ்தானிற்கு அருகாமையில் இருப்பதால் புனேயை தேர்ந்தெடுத்துள்ள இந்தக் குழுவினருக்கு அல் கொய்தாவின் மிரட்டல் இருப்பதால் "Y" ரக பாதுகாப்புக் கொடுக்க பட்டுள்ளது. ஆனால் இந்திய சட்டதிட்டங்களுக்கு இவர்கள் எந்த மதிப்பும் கொடுப்பதாகத் தெரியவில்லை. இதேபோல நமது கமல், இரஜினியின் பாதுகாவலர்கள் அவர்கள் நாட்டில் நடந்து கொண்டால் இந்த அளவு சகிப்புத் தன்மை காண்பிப்பார்களா ? இந்த படப்பிடிப்பை அனுமதிப்பதன் மூலம் அல்கொய்தாவின் கவனத்தையும் வீணாக கவர்கிறோம்.

இதனிடையே இன்றைய தினசரியில் திருப்பதி ஸ்ரீனிவாச கல்யாணம் இங்கு பாந்த்ராகுர்லா மைதானத்தில் டிச.3,4 இல் நடைபெறவுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதற்காக திருப்பதி திருமலையில் இருந்து உறசவ மூர்த்திகள் கொண்டுவரப் படுவதாகத் தெரிகிறது. இவை எல்லாம் புதிய நடைமுறைகள். உற்சவ மூர்த்திகளை ஊரை விட்டு ஊர் எடுத்துப் போவதெல்லாம் சரியா எனத் தெரியவில்லை. இது சமயத்தை வணிகமயமாக்கலின் தாக்கமே. முன்பெல்லாம் கோவில் வாசலில் பிச்சைக்காரர்கள் நமது சமய உணர்வுகளை, தர்ம சிந்தனையை exploit செய்வார்கள்; இப்போது மத தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தவிர பல்லாயிரக் கணக்கானவர்கள் திறந்த வெளியில் கூடுவது, அதுவும் பாபர்மசூதி நினைவுநாளுக்குச் சமீபம், எந்த அளவு பாதுகாப்பானது என்றுத் தெரியவில்லை.

குடியும் 'குடி'த்தனமும்

நேற்று அதிகாலை இங்கு நடந்த கார் விபத்து தொடரும் இரவுவிருந்து குடித்தனத்தின் உச்சகட்டமாக நிகழ்ந்துள்ளது. மும்பையின் இரவு விருந்துகள், திரைப்பட ஆரம்ப விழாவாகட்டும் அல்லது வியாபார வெற்றிவிழாவாகட்டும், மேல்தட்டு வர்க்கத்தின் குறியீடாக, அகங்கார வெளியீடாக நள்ளிரவையும் தாண்டி மதுவின் மயக்கத்தில் மாதுவின் அண்மையில் குடித்து கும்மாளம் போடுவது தினசரிகளின் மூன்றாம் பக்கத்தில் இடம் பெறுவதுவரை தனித்துவமானவை. சமீபத்தில் மது பண்டர்கர் இதனை இந்த விருந்துகளுக்கும் பத்திரிகையாளர் /பிரபலங்கள் /அதிகாரிகள் இவர்களிடையேயும் உள்ள பிணைப்புக்களை விவரித்து அங்கதமாக Page 3 என்ற படத்தையும் வெளியிட்டிருந்தார். வாழ்வின் முக்கியத்துவத்தை கற்பிக்காத கல்விசூழலில், உழைத்துப் பெறாத பணம் அபரிதமான இளைஞர்களின் போக்கு நாளுக்கு நாள் கவலை அளிக்கும் முகமாக உள்ளது.

சமீபத்தில் இத்தகைய விருந்துணவிற்குப் பிறகு நடந்துள்ள விபத்துக்கள்:
செப்டம்பர் 28, 2002:
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் பாந்திரா பேகரி வெளியே உறங்கிக் கொண்டிருந்த நபர் மீது கார் ஏற்றிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கிறது

ஆகஸ்ட் 14, 2005:
மகேந்திர கடாவ் என்ற தொழிலதிபரின் (கடாவ் சேலைகள் பெண்மணிகளுக்குத் தெரிந்திருக்கும்) மகன் மணிஷ் காவலர் ஜிதேந்திரா ரோகடே மேல் இடித்துக் காயப்படுத்திய வழக்கில் பின்னர் விடுவிக்கப் பட்டார்.

பெப்ரவரி 4, 2006:
ஸ்டான்சார்ட்(StanChart) தெற்கு ஆசியாவின் முக்கிய தலைமை அதிகாரியான நீல் சாட்டர்ஜீ ஒரு காவலாளி மேல் ஏற்றியதாகத் தொடரப் பட்டுள்ள வழக்கு.

ஜூலை 27, 2006:
அசாமா சுதிர் மடா என்ற 33 வயது NRI மனோதத்துவ வைத்தியர் மாஹிம் அருகே இருவர் மீது கார் ஏற்றியது.
நவம்பர் 12,2006:
மும்பையின் புறநகரான பாந்த்ராவில் கடற்கரையோர கார்டர் ரோட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் மேல் 18இலிருந்து 21 வயது வரையான ஆறு இளைஞர்கள், ஒருவர் பெண், டொயொடொ கொரொல்லா காரை ஏற்றி ஆறுபேர் மரணம், ஒன்பது பேர் காயம்.
காரிலிருந்த அறுவருமே குடித்திருந்ததாக சோதனைகள் தெரிவிக்கின்றன.இத்தனை பேர் இறந்திருந்தும் அந்த இளைஞர்கள் வருத்தமடையாது இதை ஒரு சாதாரண விபத்தாகக் கருதியது இங்குள்ளோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மனிதநேயமே இல்லாமல் இந்த தலைமுறை வளர்வதை சமூகவியலாளர்கள் நம்மைப் பீடித்துள்ள வியாதியின் வெளிப்பாடாகக் காண்கிறார்கள்.

குடித்து ஓட்டுபவர்களுக்கெதிரான சட்டங்களும் வலுவில்லாததாக இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தக் குற்றம் புரிந்தவர் பிணைப்பணத்தைக் கட்டிவிட்டு வெளியில் வரமுடிவதும் தண்டனையும் கடுமையாக இல்லாதிருத்தலும் அவர்களால் சுட்டிக் காட்டப் படுகின்றனர். வளர்ந்த பொருளாதார நாடுகளில் குடித்து வண்டியோட்டுவது ஓட்டுநர் உரிம இரத்து வரை செல்வதால் ஒரு குழுவில் ஒருவராவது வண்டியோட்ட குடிக்காமல் இருப்பதும் சுட்டப் படுகிறது. மும்பைக் காரர்களின் சில எதிர்வினைகள் இங்கே:

குடி குடியைக் கெடுக்கும். வாகன ஓட்டியின் 'குடி'த்தனம் குடும்பங்களை கெடுக்கிறது.நம் உயிர்களுக்கு அவ்வளவுதான் மதிப்பா ? சட்டம் பயில்வோரும் சட்டம் இயற்றுவோரும் சிந்திக்க வேண்டும்.

இந்துவில் இந்தியன்!

நிலவில் அமெரிக்க அஸ்ட்ரோநாட் அல்ட்ரின்
நிலவின் நிலத்தில் நடந்து வருவோம் என்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ).நவம்பர் 7 அன்று பெங்களுருவில் நடந்த விஞ்ஞானிகள் கூட்டத்தில் இஸ்ரோ தன் பயணதிட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி 2014 இல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பவும் 2020 இல் நிலவில் நடக்கவும் திட்டமிட்டிருக்கிறது. வெளிநாட்டு உதவி எதுவும் பெறாமல் இந்திய நுட்பத்திறனைக் கொண்டே இச்சாதனை நிகழ்த்தவுள்ளதாகத் தெரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் அரசியல் வழக்கப்படி அமெரிக்க அஸ்ட்ரோநாட்டிற்கும் உருசிய காஸ்மோநாட்டிற்கும் இணையான வடமொழி பெயரிடலுக்கு சொற்களைத் தேடிவருகிறது.

2007இல் ஆரம்பிக்கவிருக்கும் இந்த சோதனைகள் நாட்டின் அனைத்து ஆராய்ச்சி கேந்திரங்களையும் பல்கலைக்கழகங்களையும் முழுவதுமாக இணைத்துக் கொள்ளும். முதற்கட்டமாக விண்ணோடத்தை(Capsule) வான்வெளியில் PSLV ராக்கெட் மூலம் செலுத்தி ஒருவாரம் உலகைச் சுற்றியபின் வங்காள விரிகுடாவில் பத்திரமாக திரும்ப விழவைக்ககூடிய திறனை சோதிப்பதாகும். இதைத் தொடர்ந்து ஒருவாரம் வரை சுற்றக்கூடிய சோதனைகள் நிகழ்த்தி முடிவில் GSLV ராக்கெட் மூலம் மூன்று டன் எடையுள்ள விண்ணோடத்தில் இரு மனிதர்களை பயணிகளாகக் கொண்டு 400 கி.மீ உயரத்தில் உலகை சுற்றும் சோதனைகள் ஆரம்பமாகும். அடுத்தடுத்து இவ்வகை சோதனைகளின் இறுதி கட்டமாக சந்திர விஜயம் அமையும்.

இதன் முன்னேற்பாடாக விண்ணோட வடிவமைப்பு திட்டங்களை வெளியிட்டு, தயாரித்து,சோதிப்பதுடன் விண்வெளிமாந்தருக்கு (அஸ்ட்ரொநாட்டிற்கு தமிழ் தயார்!) பயிற்சி அளிக்க சூன்ய புவிஈர்ப்பு விசையுடனான அறை கட்டுவதும் நடக்க வேண்டும். இதற்கு குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் ஆதரவு இருப்பதாக இஸ்ரோ இயக்குனர் திரு மாதவன் நாயர் கூறினார். மனிதரை விண்ணிற்கு அனுப்ப பதினாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் கோடிவரை செலவாகும் என மதிப்பிட்டுள்ளனர்.நிலவுப் பயணம் இதற்கு மேல் பன்மடங்கு ஆகும்.

ஏழைகள் நாட்டில் பட்டினிச்சாவுகள் ஒருபுறம் அரங்கேறிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செலவு (சிலேடை வேண்டியதே) தேவையா என்ற கேள்வி எழாமல் இல்லை. இதனால் நமது நுட்பத்திறனும் செயற்திறனும் அதிகரிப்பதோடு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நடந்தது போல சார்பு தொழிற்கூடங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நமது தன்னம்பிக்கையும் பெருமையும் பெருகும். ஒருநாடு ஒலிம்பிக்கிற்கு விளையாட்டுக் கட்டமைப்புக்கள் அமைப்பதில் செலவழிக்கும் பணம் போல இது நேரடியாக வறுமை ஒழிப்பிற்கு பயன்படாவிடினும் மறைமுகமாக அதிக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் என இந்த திட்டத்தைப் பரிந்துரைப்போர் கூறுகின்றனர். யாருக்கு நன்மையோ அரசியல்வாதிகளுக்கும் இடைத் தரகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

ஜெத்மலானிக்கு ஜே!

திரு இராம் ஜெத்மலானி ஒரு பரபரப்பான உச்சநீதிமன்ற வழக்கறிஞர். பல பிரபல வழக்குகளில் வெகுஜன எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக வழக்காடியவர். நேற்று ஐபிஎன் தொலைக்காட்சியில் சாகரிகா கோஸின் அவரது நேர்முகம் மறக்கமுடியாதது. அவர்கள் சுட்டி இங்கே.பேட்டியாளரின் கேள்விகளால் தடுமாறாமல் தனது நிலை பற்றிய அவரது சற்றே காட்டமான ஆனால் ஆணித்தரமான பதில்கள் ஊடகங்களின் நீதித்துறை அத்துமீறல்களை கிழித்தெறிந்தது. ஜெஸ்ஸிகா லால் கொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனு சர்மா சார்பாக நீங்கள் வழக்காடுவதை பொதுமக்கள் விரும்புவதில்லை, உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் இவ்வழக்கை எடுத்துக் கொள்வதில் விருப்பமில்லை என்ற சாகரிகாவின் குறுக்கிடல்களுக்கு உனக்கு ஒன்றும் தெரியாது, என் மனசாட்சி பற்றி நீ நினைக்க வேண்டியதில்லை என்று பொரிந்து தள்ளியது தனிநபர் நாகரீகத்தை மீறியதாக இருப்பினும் அவர் சொற்களின் பின்னால் இருந்த உண்மைகள் அவற்றின் சூட்டைத் தணித்தன. சில நினைவில் நின்ற சொற்றொடர்களின் தமிழாக்கங்கள்:
"குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், நீதிமன்றத்தில், மக்கள் மன்றங்களிலோ ஊடகங்கள் மூலமாகவோ அல்ல."
"உங்களுக்கு சட்டம் தெரியாது. உன்னுடன் விவாதிக்க மாட்டேன். நீதிமன்றத்தில் தான் விவாதிப்பேன்"
"நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் விமரிசியுங்கள், எனது தொழில்தர்மத்தை எனது மனசாட்சிப்படி செய்வேன்"
"நான் எந்த வழக்குகளை எடுத்துக் கொள்ளவேண்டும், கூடாது என்பதை முடிவெடுக்கும் உரிமை பத்திரிகைகளுக்கோ பொதுமக்களுக்கோ இல்லை, என் உரிமை அது"

மனுசர்மா குற்றவாளியோ இல்லையோ ஜெத்மலானி அந்த வழக்கை எடுத்துக் கொள்வது பற்றி விமரிசிப்பதும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்பே ஒருவரைக் குற்றவாளியாக சித்தரிப்பதும் பத்திரிகை/ஊடக தர்மத்திற்கு சிறிதும் பொருந்தாதது. IBN/CNN பொறுத்தவரை இந்த நேர்முகத்தை உள்ளது உள்ளபடியே சென்சார் செய்யாமல் காட்டியது பெருமைக்குறியது.இருப்பினும் நிகழ்ச்சியை "Devil's advocate" என்று தலைப்பு வழங்கியது மூலம் அவர்கள் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் தேடிக் கொண்டனர்.

நிச்சயமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அரசுத்துறையையும் நீதித்துறையையும் உணர்ச்சிகரமான சூழலில் அவசர முடிவெடுக்க வைக்கும் ஊடக வன்முறைக்கு ஒரு கடிவாளம் தேவை.

குழந்தையும் தெய்வமும் !


நேபாளத்தின் உச்சநீதிமன்றம் அங்கு காலம் காலமாக பழக்கத்தில் இருக்கும் குமாரி பூஜா மரபை சிறுமியரின் உரிமைகளை மீறுகிறதா என நேபாள அரசை ஆராய்ந்து அறிக்கை வெளியிடச் சொல்லியிருக்கிறது.

நேபாளத்தில் 3-5 வயது பௌத்த சிறுமியை மதசடங்குகள் மூலம் "வாழும் தெய்வமா'க தேர்ந்தெடுத்து இந்துக்களும் பௌத்தர்களும் டலேஜு (Taleju) என்ற சக்தி வடிவாக 'குமாரி' என்று வழிபடுகிறார்கள்.அந்த சிறுமி தனது குடும்பத்தை விட்டு விலகி குமாரி கர் எனப்படும் பதினாறாம் நூற்றாண்டு மாளிகையில் வசிக்க வேண்டும். தசரா சமயத்தில் மன்னர் முதல் அனைவரும் வணங்கி அளிக்கும் பூசையை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரை வணங்கினால் பணமும் அதிகாரமும் நல்வாழ்வும் கிடைக்குமென்று மக்கள் நம்புகிறார்கள். வயது வந்தபிறகு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொள்ளலாம். பள்ளி செல்ல முடியாவிடினும் நல்ல கல்வி புகட்டப் படுவதாகவும் சிறுமியை நன்கு கவனித்துக் கொள்வதாகவும் மதவாதிகள் சொல்கிறார்கள்.

இருப்பினும் ஒரு சின்னஞ்சிறு சிறுமியை தன் வயது வாழ்வை வாழவிடாமல், சக தோழர்களுடன் விளையாட விடாமல் மதத்தின் பெயரால் இது என்ன கொடுமை ? குழந்தை குழந்தையாக இருந்தாலே தெய்வம், அவர்களை தெய்வமாக்கி தெய்வீகத்தைக் குலைக்காதீர்கள் !

சோம்நாத் சாட்டர்ஜி - குடியரசுத்தலைவர் ?

தற்போதைய குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் பணிக்காலம் ஜூன் 2007 இல் முடிவடைகிறது. இவருக்கு அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து ஆதரவு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் தலைமை டாக்டர் கரண்சிங்கின் பெயரையும் பிஜேபி துணை குடியரசுத் தலைவர் திரு.பைரோன்சிங் ஷெகாவத் பெயரையும் முன் வைத்துள்ளன. ஆனால் கு.த தொகுதியில் இருவருக்குமே உறுதியாக வெற்றி வாய்ப்பிற்கான வாக்குகள் எண்ணிக்கை இல்லாததை உணர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக மக்களவை சபாநாயகர் திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பெயரை அரசியல் கட்சிகளிடம் தூது விட்டுக் கொண்டிருக்கிறது. திரு எச்சூரி இதுபற்றி பிஜேபி தலைவர்களை கலந்தாலோசித்திருப்பதாக தெரிகிறது.திரு. பிரகாஷ் கராட் சமாஜ்வாடி,தெலுகுதேசம்,NCP, RLD கட்சிகளுடனும் அவர் மனைவி பிருந்தா கராட் BSPயின் மாயாவதி, அதிமுக பொதுசெயலாளர் செல்வி ஜெயலலிதா ஆகியோருடன் பேசவிருப்பதாகத் தெரிகிறது.

நாட்டு நடப்பையும் குடியரசு தலைவர் தொகுதியின் எண்ணிக்கைகளையும் கணக்கில் கொண்டால் ஒரு பொதுவுடைமை கட்சி வேட்பாளர் அடுத்த ஜனாதிபதியாக வர நல்ல வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. அடுத்த மத்திய தேர்தலில் மூன்றாம் அணி அமையுமானால் மார்க்ஸிஸ்ட் ஜனாதிபதியின் தயவில் அவர்கள் கூட்டணி ஆட்சிக்கு தலைமையேற்கவும் இயலும். இன்றுபோல் பின்னாலிருந்து ஆட்டி வைக்க வேண்டியதில்லை.

திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பத்து முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஜார்கண்ட் தீர்ப்பின்போது உச்சநீதிமன்றத்துடன் முரண்பட்டு குடியரசுதலைவரின் சுட்டுதலுக்கு ( Presidential reference) வேண்டியவர். அவர் பணியாற்றும் சாந்திநிகேதன் ஸ்ரீநிகேதன் வளர்ச்சி ஆணையத்தின் மூலம் ஊதியம் (Office of Profit) பெறுவதாக குற்றம் சாட்டப் பட்டவர். இவரது தந்தை நிர்மல் சாட்டர்ஜி பிஜேபியின் முன்னோடியான அகில் பாரதீய இந்து மகாசபையின் தலைவராக இருந்ததும் குறிப்பிட தகுந்தது.

சயனைட் - அந்த கடைசிநாட்கள்

இராஜிவ்காந்தி படுகொலையில் குற்றவாளிகளான ஒற்றைக்கண் சிவராசு மற்றும் சுபா பெங்களூரில் கழித்த நாட்களையும் கடைசியில் அவர்களது பரிதாப முடிவினையும் அடிப்படையாகக் கொண்டு சென்னை திரைப்படக்கல்லூரி முன்னாள் மாணவரும் கன்னட இயக்குனருமான திரு AMR ரமேஷ் 'சயனைட்' என்னும் கன்னடப் படத்தை வெளியிட்டிருக்கிறார். இங்கு நடக்கும் ஆசிய திரைப்பட விழாவில் இந்தியப் பகுதியில் இடம் பெற்றுள்ள இந்தப் படம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மராத்தி நடிகர் இரவி காலே சிவராசனாகவும், நடிகை மாளவிகா சுபாவாகவும், நடிகை தாரா மிருதுளாவாகவும் கன்னட நடிகர் ரகு இரங்கநாத்தாகவும் அசல் பாத்திரங்களை உருவிலும் நடையிலும் ஒட்டி நடித்திருப்பதாக புகழுரைகள் சொல்கின்றன. பாடல்களே இல்லாத 115 நிமிட படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.

இங்கு பேட்டியளித்த இயக்குனர் ரமேஷ் இதனை இந்தியில் அமிதாப்பை வைத்து எடுக்க திடமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் "The film is not about Rajiv Gandhi, but about Sivarasan and Shubha who are on the run after the assassination to escape the police dragnet. It is an attempt on my part to authentically capture the human drama that ensues in the last 20 days in the lives of the LTTE assassins" என்று சொல்கிறார்.

யாரையும் குறைசொல்லாது, கொலையாளிகளின் கடைசி மன அழுத்தங்களை சித்தரிப்பதாக அவர் கூறுவதை படத்தைப் பார்த்த நமது கர்நாடக பதிவர்கள் சரியா என பதியவேண்டும். குறைந்தது பின்னூட்டத்திலாவது தெரிவிக்கலாம்.

கூகிள் மீது வழக்கு

மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வில் கூகிளின் சமூக வலையகமான 'ஆர்குட்' (Orkut) மீது உள்ளூர் வழக்கறிஞர் யுகாந்த் இந்தியா மீது வெறுப்பை பரப்புவதாக ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் மாண்புமிகு ஏ.பி. தேஷ்பாண்டே மற்றும் ஆர்.எம். போர்டே, மகாராஷ்ட்ர அரசை கூகிளுக்கு நோடீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. இந்திய மூவர்ணக் கொடியை எரிக்கும் படத்துடன் இந்திய எதிர்ப்பு வாசகங்களை கொண்ட "We hate India" சமூககுழு உருவாக்கப் பட்டிருப்பதாக வழக்குமனு கூறுகிறது. அந்த மனுவில் தகவல் நுட்ப சட்டம் -2005ன் கீழ் ஒரு "controller" நியமிக்கப் பட்டு இத்தகைய குழுக்களை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
நன்றி:DNA News
மேலதிக தகவல்களுக்கு பார்க்க: ஆங்கிலப்பதிவு 1, ஆங்கிலப்பதிவு 2

சசியை தோற்கடித்த சந்திரன்!


ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம செயலர் பதிவிக்கான போட்டியிலிருந்து திரு சசி தரூர் விலகிக் கொண்டிருக்கிறார். இது பற்றிய எனது முந்தைய பதிவு. அப்போதே அவரது வெற்றி பற்றி ஐயம் இருந்தது. இன்று அவை துரதிருஷ்டவசமாக உண்மையாயின.

சசி தரூரின் போட்டி விலகலுக்கான பேச்சு :

மூன்று முன்வாக்கெடுப்புகளிலும் முண்ணனியில் இருக்கும் தென்கொரியாவின் பன் கி மூன் (Ban Ki Moon) அக்.9 அன்று formalஆக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.இப்போது கூட புதிய முகம் ஒன்று போட்டியிட தேர்தல்விதிகள் வாய்ப்பளிக்கின்றன. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 14 பேர் ஆதரவும் ஒருவர் வாக்களிக்காமலும் பன் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். நமது தரூருக்கு 10 பேராதரவு கிடைத்து ஒரு வெடொஎதிர்ப்பு உட்பட மூவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் தரூரைத் தவிர தாய் துணை பிரதம மந்திரி, ஜோர்டானின் ஐநா தூதுவர், லாட்வியாவின் அதிபர்,ஆப்கனின் முன்னாள் நிதி அமைச்சர் ஆகியோரும் தோல்வி கண்டனர்.

திங்களன்று எட்டாவது ஐ.நா பொதுசெயலராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள திரு.பன் விவசாயக் குடும்பத்தில் 1944இல் பிறந்தவர்.பன்னாட்டு உறவுகளில் பல்கலைக் கழகத்தில் முதன்மை மாணவராக திகழ்ந்தவர், தென் கொரியாவின் வெளியுறவுத் துறையின் பல பொறுப்புகளை வகித்தவர். தென்கொரியாவின் ஐநா தூதுவராக 2001இல் இருந்தவர். ஆங்கிலம் தவிர பிரென்ச், ஜெர்மன் மற்றும் ஜபானிய மொழிகளில் பரிச்சயம் கொண்டவர்.

இலண்டன் டைம்ஸ் பத்திரிகை அவர் பதவி பெற தென்கொரியா ஏராளமான பண உதவிகளை ஆப்பிரிக்க ஏழைநாடுகளுக்கு உறுதி அளித்து 'தூண்டுவதா'க கூறியுள்ளது. அமெரிக்கா தனது 'வெடொ' அதிகாரத்தினால் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை விட இது உலகிற்கு நன்மையானதே. தான்ஜானிய மக்களின் பசிப்பிணி நீங்கினால் அவர் பதவி ஏற்பதற்கு முன்பே ஐநாவின் பணி துவங்கி விட்டதாகத் தானே பொருள் ;) இத்தகைய செயல்களால் இனி கோஃபி அன்னன் தான் எழைநாட்டிலிருந்து பணியாற்றிய கடைசி ஐநா பொது செயலராக இருப்பார் எனத் தோன்றுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இத்தோல்வி நமது வெளியுறவு கொள்கைகளுக்கு கிடைத்த ஒரு ஏமாற்றமே. அணிசேரா நாடுகளின் தலைமையாக இருந்து பல நாடுகளின் உற்றநண்பனாக இருந்த நிலையை நழுவ விட்டு 'அரசனை' நம்பி புருசனை கைவிட்டோமோ என சிந்திக்க வேண்டிய சமயமிது.

போலி(யோ) மருந்து ?

இந்தியாவின் போலியோ ஒழிப்பு திட்டத்தின் தோல்விகளை பத்ரி தன் பதிவில்ஆராய்ந்திருந்தார். சமூக அவநம்பிக்கையினால் உ.பி யில் எவ்வாறு தோல்வி அடைந்தது என்று குறிப்பிட்டிருந்தார். நாடு முழுவதும் உற்சாகமாக மக்கள் கலந்து கொண்ட போலியோ சொட்டுமருந்து திட்டத்தினால் மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒழிக்கப் பட்டிருக்க உபியும் பிஹாரும் மட்டும் விதிவிலக்காக இருப்பதும் அங்கிருப்பவர்கள் பிற மாநிலங்களில் குடியேறுவதால் முழுவதும் ஒழிக்கப் பட்ட மாநிலங்களிலும் போலியோ தலைதூக்குவதும் கவலை அளிக்கிறது.

இந்நிலையில் மும்பையில் முழுவதுமாக ஒழிக்கப்பட்டது என்று இறுமாந்திருந்த சமயத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒன்பது வயது சிறுமி ஒருவர் பாதிக்கப் பட்டிருப்பது பொதுநல ஊழியர்களுக்கு கவலை உண்டாக்கியுள்ளது. அதிலும் பாதிக்கப்பட்ட நஸ்லி ஷேக்கிற்கு பரிந்துரைக்கப்பட்ட 12 முறை தடுப்புமருந்து கொடுக்கப் பட்டும் பாதிக்கப் பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

போலியோ தடுப்பு மருந்து தன் ஆற்றலை இழந்து விட்டதா ? அல்லது
நஸ்லிக்கு சரியான முறையில் கொடுக்கப்படவில்லையெனில் திட்டத்தின் இயங்குமுறை சரியில்லையா ?அல்லது கொலைபாதக அலட்சியமா ? கொடுக்கப்பட்ட இலக்குகளை அடையும் வெறியில் நிகழ்ந்த கவனமின்மையா ? கடைசியாக நமது திரைப்படங்களில் காண்பிப்பது போல போலி மருந்தா?

அப்பெண் உபி சென்றுவந்த பின்னரே நோய் தொற்றியது; அவர்கள் வசிக்கும் சூழல் சுகாதாரமற்றது என்பன இரண்டாம் பட்சம்தான். தடுப்பு மருந்து கொடுக்கப் பட்ட பெண்ணிற்கு எவ்வாறு போலியோ வந்தது என்பதற்கான ஆதார காரணங்களைக் கண்டறிய வேண்டும். இதன் நடுவில் நஸ்லிக்கு போலியோ இல்லை Accute Flaccid Paralysis என்ற நோய் என திசை திருப்பும் ஒரு செய்தி. அப்படியென்றால் இதனை சரியாக கண்டறிய Diagnostic சோதனை கருவிகளும் முறைகளும் சரியாக இல்லாததும் கவலைக்குறியதுதான்.

இதனால் முழுமையாக ஒழிக்கப்பட்டது என்று எந்த ஒரு மாநிலமும் மெத்தனமாக இருக்கக் கூடாது என்பது நிச்சயமாகிறது. தவிர சொட்டுமருந்து திட்டத்தின் இயங்குமுறையையும் efficacyஐயும் சோதனை செய்து கொள்ளுதல் அவசியமாகும். மலத்தில் உருவாகி நீரினால் பரவும் இக்கிருமியை தடுக்க பொது சுகாதாரத்தை வலுப்படுத்துவதும் அவசியம். சொட்டுமருந்து மட்டும் போதாது, சுத்தமும் சுகாதாரமும் சுகம்தரும் என்ற செய்தியை பரப்புவதிலும் அரசு இயந்திரங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். சமூகங்களை குறை காண்பதை விட அரசு இயந்திரங்களின் அணுகுமுறையை பரிசீலித்து போலியோவை இந்தியாவிலிருந்தே ஒழிப்போம். நம் தமிழகத்து அமைச்சர் அன்புமணி காலத்தில் இது நடந்தால் அவருக்கும் நமக்கும் பெருமை.

லஹே ரஹோ லாலுபாய் !!

கடந்த திங்களன்று இந்திய இரயில்வேயின் மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. லாலுபிரசாத் யாதவ் அவர்கள் அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தில் தமது துறையின் வளர்ச்சியையும் இலாபத்தை நோக்கி திசைதிருப்பியதைக் குறித்தும் சிறப்புரை ஆற்றியுள்ளார். ஒரு நிறுவனம் நீண்ட நாட்களாக பணக்கஷ்டத்தில் இருப்பதிலிருந்து எவ்வாறு மீட்பது என்பது பற்றியான உதாரணபாட (casestudy) வரிசையில் இது அமைந்திருந்தது. மூன்று மணி நேரம் நிகழ்த்திய இவ்வுரையில் அவர் தாம் எவ்வாறு இலக்குகளை நிணயித்துக் கொண்டார் மற்றும் அவற்றை அடைய வழிமுறைகளை எவ்வாறு திட்டமிட்டார் என்று விளக்கினார். ஒரு தேர்ந்த பேராசிரியர் போல உரையை ஒருமுகமாக நிகழ்த்தாது வினா-விடை வழியே அனைவரும் பங்கு கொள்ளும் விதமாக நடத்தினார். அரங்கத்தில் நடந்ததை வெளியுலகத்திற்கு வெளியிட கழக விதிகள் இடம் கொடுக்காவிடினும் ஐ.ஐ.எம் மாணவர்களின் வலைப்பதிவுகளில் அவரது நகைச்சுவையுடன் கூடிய சொற்பொழிவு திறனும் மேலாண்மைத் திறனும் பெரிதும் போற்றப் படுகின்றன.

திரு லாலு அவர்களைப் போன்று இந்திய அரசியலில் கேலி செய்யப்பட்டவர் வெகு குறைவு. அவரது நடையையும் உடையையும் கண்டு மெத்தப் படித்தவர்கள் ஏளனப் பார்வை வீசியதுண்டு. இன்றுகூட இரயில்வேயின் மாற்றத்திற்கு அதிகாரிகளே காரணம், முந்தைய அமைச்சர் நிதிஷ்குமார் எடுத்த முடிவுகளின் பலன்களை அறுவடை செய்தவர் என குறை கூறுவோர் உண்டு. பீஹாரை சீரழித்தவர் இரயில்வேயை எவ்வாறு சீரமைத்தார் என்று கேள்வி கேட்பவரும் உண்டு. ஆனால் அதிகாரிகள்தான் இம்மாற்றத்திற்கு காரணம் என்றாலும் லாலுவின் யோசனைகளும் யுக்திகளும் அவர்களை ஆட்டுவிக்க காரணமாயிருந்தது. அவரே கூறுகிறார்: "நான் வருமானத்தை அதிகரிக்க புதுவித ஆலோசனைகள் வழங்கினேன், 1.45 மிலியன் இரயில்வே தோழர்கள் அதனை நிறைவேற்றினர். என் எண்ணமெல்லாம் பயணிகளுக்கும் பொருள்போக்குவரத்திற்கும் கட்டணத்தைக் கூட்டாமல் இருக்கவேண்டும் என்பதுதான்".

இலாலுவின் முந்தைய ஆட்டம் சரியில்லாதிருக்கலாம். அரசியல் கொள்கைகளில் மாற்றுக்கருத்துக் கொண்டிருக்கலாம். செலவழிக்கத் தயங்காது ஆனால் வரவைப் பற்றி கவலைப் படாத ஒவ்வொரு அமைச்சரும் அவரவர் துறையை தன்னிறைவு பெற்று விளங்கச் செய்ய லாலுவின் முன்னுதாரணம் இன்றைய முக்கியத் தேவையாகும்.அவ்வகையில் அவரது சாதனையை பாராட்டுவோம், அவர்பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துவோம்!

நவம்பர் 26இல் இதே கழகத்தில் நடக்கவிருக்கும் Confluence-2006 விழாவில் பங்கேற்கவரும் இவரது Bete Noire நிதிஷ்குமார் உரையைக் கேட்க ஆவல் அதிகமாயுள்ளது.

பி.கு: தலைப்பு இந்தியில் உள்ளதிற்கு மொழிப்பற்றாளர்கள் மன்னிக்கவும்.


வெள்ளை மாளிகையில் நம் குயில்!!

வருடக் கடைசி வந்து கொண்டிருக்கிறது. நமக்காகவோ நமது வாடிக்கையாளர்களுக்காகவோ நாட்குறிப்பு புத்தகங்கள் வாங்க எந்த புத்தகநிலயத்திற்கு சென்றாலும் நம்மைக் கவருவது நைட்டிங்கேல் நாட்குறிப்பு புத்தகங்கள் (டயரி) தான். சிவகாசியில் தயாரிக்கப்படும் நைட்டிங்கேல் எழுதுபொருட்கள் இன்று உலகெங்கும் விற்கப் படுகின்றன.அதன் விற்பனை ரூ.200 கோடியை தாண்டியுள்ளது.

"எங்கள் எழுதுபொருட்கள் ஐக்கிய அமெரிக்க குடியரசின் வெள்ளை மாளிகைக்கும் விற்கப்படுகின்றன" எனப் பெருமைப் படும் இந்நிறுவனத்தை (ஸ்ரீநிவாஸ் ஃபைன் ஆர்ட்ஸ் (பி) லிமிடேட்) திரு ஆர். சொக்கலிங்கம் அவர்கள் 1964இல் துணிமணிகளுக்கான லேபல் அச்சடிக்க ஆரம்பித்தார். சிலவருடங்களிலேயே தமது மகன் திரு.இராஜேஷை இங்கிலாந்திற்கு அனுப்பி நவீன அச்சகமுறைகளில் பயிலச் செய்தார். தவிர ஜெர்மனியிலிருந்து 1.5கோடி பெருமான அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்து தீப்பெட்டி லேபல்களையும் பட்டாசு லேபல்களையும் தயாரித்து வந்த சிவகாசியில் புரட்சி செய்தார். அவருடைய முன்னோக்கிய பார்வை இன்று பலனைத் தந்திருக்கிறது. மற்ற outsourcing போல, உலக வியாபாரங்களுக்கு அச்சடிக்கும் நிறுவனமாக விளங்குகிறது.

இந்த செய்தியை யாஹூ செய்தியில் கண்டவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இத்தகைய சாதனை படைப்போரே தமிழ்நாட்டை உலக பொருளாதாரத்தில் முன்னேடுத்துச் செல்பவர். அவர்தம் எண்ணிக்கை வளர்க!!

தலைவணங்குதும் கலாசாலையே!!

சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது வருட கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். மிகவும் தொன்மை வாய்ந்ததும் பாரம்பர்யமிக்கதுமான இப்பல்கலைக் கழகம் அவருக்கு மட்டுமன்றி எனக்கும் கல்வி யளித்த நிறுவனமாகும். இன்றைய பொறியியல் பலகலைக்கழகங்கள் வருமுன்பு அனைத்து கல்லுரிகளும் (நான் படித்த பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி உட்பட) சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சியிலே அமைந்திருந்தது. முனைவர் ஏ.இலக்ஷ்மணசாமி முதலியார் அவர்கள் கையொப்பமிட்ட பட்ட சான்றிதழ் பெற பேராவல் கொண்டிருந்தேன். (ஆனால் நான் படப் படிப்பு முடித்த சமயத்தில் திரு. நெ.து.சுந்தரவடிவேலு அப்பதவியை அலங்கரித்தார்). ஒவ்வொரு பதவிக்கால முடிவிலும் வேறோரு துணைவேந்தர் நியமிக்கப் படும் இக்கால கட்டத்தில் அவர் 27 வருடங்கள் தொடர்ந்து அப்பதவியை வகித்து வந்தது ஒரு சிறப்பம்சமாகும். ஆற்காட்டு சகோதரர்கள் என அழைக்கப் பட்ட இரட்டையரில் மூத்தவரான ஏ. இராமசாமி முதலியார் திருவிதாங்குர்/கேரள பல்கலைக்கழக துணை வேந்தராக பணிபுரிந்ததும் ஜஸ்டிஸ் கட்சியின் கட்சிப்பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்ததும் இதர விதயங்கள்.

இப்பல்கலையின் நூற்றாண்டு விழா மண்டபத்திலேதான் எனது அரசுப்பணிக்கான UPSC தேர்வுகளை மெரினா காற்றை அனுபவித்தவாறு எழுதியநாட்கள் நினைவுக்கு வருகின்றன. 1857இல் தோற்றுவிக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் அது மட்டுமே தென்னிந்தியா முழுமைக்கும் இருந்த ஒரே பல்கலைக் கழகமாக நாம் சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தது. இதன் முன்னாள் மாணாக்கர் பட்டியலில் முன்னாள் குடியரசு தலைவர்கள் டாக்டர் S.இராதாகிருஷ்ணன், V.V. கிரி, சஞ்சீவ ரெட்டி, R.வெங்கட்ராமன், K.R. நாராயணன் ஆகியோரும் நோபல்பரிசு பெற்ற C.V. இராமன் மற்றும் S. சந்திரசேகர் ஆகியோரும் அடங்குவர்.

இன்றைய விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் ஆராய்ச்சிகளின் தரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.எந்த ஒரு பல்கலைக் கழகமும் அங்கு நடத்தப் பெறும் ஆராய்ச்சிகளின் தரத்தாலேயே அறியப் படும் என்றார். சென்னை,மும்பை மற்றும் கொல்கொத்தா பல்கலைகளின் இணையபல்கலைக் கழக வலைவாயிலை திறந்து வைத்தார்.இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தரமான கல்வியைப் பெறமுடியும் என குறிப்பிட்டார். 150 வருடங்களைக் குறிக்க 150 புத்தகங்கள் வெளியிடும் முகமாக தொடக்கநாளன்று 16 புத்தகங்களை வெளியிட்டார். மிகுதி புத்தகங்கள் வருட முழுவதுமான கொண்டாட்டங்களின் அங்கமாக வரும் நாட்களில் வெளிவரும்.

மத்திய அரசிலிருந்து கல்வி அமைச்சர் அர்ஜுன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொள்ள மாநில முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார். மத்திய கல்வி அமைச்சர் இராஜிவ்காந்தி பெயரில் சமகால ஆய்வுகளுக்கான பிரிவு(Chair) ஏற்படுத்தப் படுமென்றும் மத்திய நிதி அமைச்சர் நவீன nanotechnologyக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் மையம் அமைக்கப் படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் திராவிட இயக்க கல்விக்கான மையம் அமைக்கப் படுமென்றும் அறிவித்தனர்.இந்நாளை நினைவுறும் வண்ணம் தபால்தலையும் முதல்நாள் உறையும் வெளியிடப்பட்டன.

மதுரையில் லார்ரி பேஜ் !

சென்ற ஞாயிறன்று கூகிள் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான 33 வயது லார்ரி பேஜ் ( Larry Page) கோவில்நகரான மதுரைக்கு அங்குள்ள பிரபல கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். உலக அளவில் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் இந்த மருத்துவமனையைப் பற்றி மேலாண்மைவியல் குரு எனக் கருதப்படுகின்ற சி.கே.பிரகலாத்தின் கட்டுரையால் கவரப்பட்டு வந்த பேஜ் அங்குள்ள assemblyline approachஇனால் ஒவ்வொருவருடமும் 2.75 இலக்ஷம் கண் அறுவை சிகிட்சைகள் நடைபெறுவதை கேட்டு ஆச்சரியமடைந்தார். ரூ.700க்கு நடத்தப்படும் காடராக்ட் அறுவைகள் மிகக் குறைந்த செலவாகும். இத்தனை குறைந்த செலவில் சிகிட்சைகள் செய்தும் பொருளாதார அளவில் தன்னிறைவு பெற்றிருக்கும் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் அதிக மேலாண்மை பல்கலைகளில் பாடமாக படிக்கப் படுகின்றன.

பாண்டிச்சேரி அரவிந்தரின் நினைவில் 1976இல் டாக்டர். வெங்கடசாமியினால் மதுரையில் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்று தேனி, கோவை, திருநெல்வேலி மற்றும் பாண்டிச்சேரியில் கிளைகளை நிறுவி விழியற்றோருக்கு வழிகாட்டி வருகிறது.தவிர கண் சம்பந்தமான ஆராய்ச்சிகள், உலகளாவிய பயிற்சித்திட்டங்கள், கண்ணிற்கு வேண்டிய கண்ணாடிகள் தயாரித்தல் என இத்துறையில் முத்திரை பதித்து வருகிறது.

தனது தனி விமானத்தில் வந்த லாரி பேஜ் கூகிளின் சேவைகளை முழுவதும் அரவிந்தின் சமூகசேவைகளுக்கு அர்ப்பணித்தார். தனது பொறியாளர்கள் அரவிந்தின் வலைத்தளத்தை மேம்படுத்துவதிலும் உதவுவார்கள் என்றும் விளம்பரங்கள் இலவசமாக கூகிள்தளங்களில் வழங்கப் படும் என்றும் ஆதரவு தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸ் வந்ததிற்கு எதிர்மாறாக இருக்கிறது கூகிள் நிறுவனரின் தமிழக விஜயம் !
நன்றி: DNA Money