காலிலே கல்வண்ணம் கண்டார் !

கால் கொலுசிலிருந்து மாணிக்க கற்கள் சிதறுவதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். காலிலிருந்தே கற்கள் சிதறினால்...சிடி சுஹானா சாடோன் என்கிற மலேசிய இளம்பெண்ணின் காலடியிலிருந்து தோல் பிளவுபட்டு கற்கள் வெளிப்படுகின்றனவாம். மலேசியாவின் தி நியூஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் இந்த 23 வயது பெண்ணின் காலில் விளைந்த கற்களைப் படம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இரப்பர் இறக்கும் தொழிலாளியான அவரது அன்னை காமிரியா, விளம்பரத்திற்காக இல்லை,பெண்ணின் நோயும் வலியும் தீர யாராவது தீர்வு சொல்வார்களோ என்றே ஊடகங்களை நாடியுள்ளதாகக் கூறியுள்ளார். இருப்பினும் TV3 நிகழ்ச்சியில் வந்தபிறகு சிடி ஓரிரவில் ஒரு சூப்பர்ஸ்டாராகி உள்ளார்.

தனது பேட்டியில் சிடி சாதாரணமாக நாலைந்து கற்கள் வருவதாக கூறினாலும் கடந்த சிலநாட்களாக இரு கோலிகுண்டு அளவு கற்களே வெளிவந்துள்ளன.கற்கள் வெளிவருமுன் குமட்டலும் பல்வலியும் ஏற்படுவதாக கூறுகிறார். பிரசவ வலிபோல், அந்த சமயம் கற்கள் வெளிவந்தால் போதும் என்பது போல் வலிப்பதாகவும் கூறுகிறார். அவர் தூக்கத்தில் இருக்கும் போதும் கற்கள் வெளிப்படுவதாகவும், பெரிய கற்களாக இருந்தால் நோண்டி எடுக்கவேண்டியிருப்பதாகவும் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

மருத்துவர்களின் எக்ஸ்ரே சோதனைகள் எந்த ஒரு அசாதரண நிலையையும் காட்டவில்லை.கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இந்த வியாதி(?) இருப்பதாகத் தெரிகிறது.

விக்கிபீடியாபடி முத்துக்கள் உருவாவது எப்படி:

"முத்து இருவாயில் (bivalve) மெல்லுடலி (mollusc) உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக்குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அத்துணிக்கைகளின் மீது பூசப்படுகின்றது. இச் செயற்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதி வாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. இவ்வாறு சுரக்கப் படுகின்ற பதார்த்தம் அரகோனைட் அல்லது கல்சைட் போன்ற படிக வடிவிலுள்ள கல்சியம் காபனேற்றையும், கொன்சியோலின் எனப்படும் ஒரு வகைப் பசை போன்ற கரிம வேதிப்பொருள் ஒன்றையும் கொண்ட கலவையாகும். நேக்கர் (nacre) அல்லது முத்தின் தாய் (mother-of-pearl) என அழைக்கப்படும் இப்பொருள் பல படைகளாக வெளித் துணிக்கை மீது பூசப்படுகின்றது."

ஒருவேளை இவர் உடலுக்குள் இத்தைகைய உயிரினம் ஏதாவதொன்று பாரசைட்டாக ஊடுறுவியுள்ளதோ ?

இவர் தமிழகம் வந்தால் காலடியில் கற்கள் எழுகின்றனவோ இல்லையோ 'பக்தர்கள்' விழுவது நிச்சயம்.

0 மறுமொழிகள்: