திங்கள், ஜனவரி 15, 2007

ஐஸ்-அபிஷேக் நிச்சயதார்த்தம்!

வருகிறது, வருகிறது என்று எதிர்பார்த்திருந்த அந்த செய்தி கடைசியில் வந்தே விட்டது. நேற்று, ஞாயிறு இரவு, அமிதாப் பச்சனின் இல்லத்தில், நெருங்கிய உறவினர், நண்பர்கள் முன்னிலையில் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயின் விரலில் மோதிரம் அணிந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். பாலிவுட்டின் 'கிசுகிசு'க்களில் பேசப்பட்ட அவர்கள் காதலை் கனடாவில் நடந்த குரு பட சிறப்பு வெளியீட்டின்போது அபிஷேக் ராயிடம் 'அந்த' கேள்வியை கேட்டு நிச்சயித்துக் கொண்டதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. கனடாவிலிருந்து ஊர் திரும்பிய சிலமணி நேரத்திலேயே இந்தியாவின் பிராஞ்சிலினா ஜோடியாக அறியப்படும் காதலர்களின் திருமணத்தை நிச்சயம் செய்து அமிதாப் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தார். ஐஸ்வர்யா ராயின் செயலரும் இதனை ஊர்ஜிதப் படுத்தியுள்ளார். மணநாள் இன்னும் அறிவிக்கப் படவில்லை. ஐஸ்வர்யாவை விட இரண்டு வயது இளைய அபிஷேக் பிப்.5 அன்று 31 வயதைக் கொண்டாடுகிறார்.

ஐஸ்வர்யா ராயின் செவ்வாய் தோஷத்திற்காக மதுரை, வாரணாசி கோயில்களில் அவரும் அமிதாப் குடும்பத்தினரும் விசேட பூசனைகள் மேற்கொண்டார்கள். புஷ்கரில் உள்ள ஒரே பிரம்மாவின் கோவிலுக்கும் அமிதாப் குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அந்த சமயத்தில் அஜ்மீர் தர்காவிற்கும் சென்று வேண்டினர். இது போதாது என்று வரும் நாட்களில் குருவாயூருக்கு அவர்கள் குடும்பத்தினருடன் செல்லவிருக்கிறார். அங்கு அமிதாப் கோவிலுக்கு யானை வழங்கி பிரார்தனை செலுத்தவிருப்பதாக கேரள செய்திகள் கூறுகின்றன.மனம் விரும்பிய மணவாளனை கைபிடிக்க இப்பொழுதே மாமனார் மெச்சிய மருமகளாக நடந்து கொள்கிறார்.

சல்மான்கான், விவேக் ஓபிராயுடன் இணைந்து பேசப்பட்டவர் ராய். இதுபோல கரிஷ்மா வுடன் நிச்சயதார்த்தம் நிகழ்ந்து மனமுறிவு கொண்டவர் அபிஷேக். இந்த உறவாவது இருவருக்கும் இனிதே அமைய நமது வாழ்த்துக்கள் !!