இன்று உலகெங்கும் புகையிலை மறுப்பு தினம்

உலகளவில் இறப்பிற்கு இரண்டாம் மிகப்பெரிய காரணமாக புகையிலை பயன்படுத்துவது அமைந்துள்ளது. புகைபிடிப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களினாலேயே இறக்கின்றனர். தவிர இளஞ்சிறார்கள் தங்கள் வீடுகளிலேயே புகைப்பவர்களினால் மாசுபட்ட காற்றை சுவாசித்து பாதிக்கப் படுகின்றனர்.உலக தொழிலாளர் நிறுவனமும் (ILO) 200,00க்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றவர்கள் விடும் புகையினால் இறப்பதாக கூறுகிறது.

இதனால் இந்த வருட புகையிலை மறுப்பு தினத்தில் 100% புகையில்லா சூழல் அமைப்பதே பெண்டிர், சிறார் மற்றும் வேலையிடத்தில் பிறரை இந்தத் தீமையிலிருந்து காப்பதாக அமையும் என்று கவனம் செலுத்துகிறார்கள். பொது இடங்களில் நல்ல காற்றோட்டம் ஏற்படுத்துவதோ இல்லை வடிகட்டுவதோ மட்டும் விரும்பத்தக்க அளவிற்கு புகையை கொண்டுவரமுடியாது என்கின்றனர் உடல்நல நிபுணர்கள்.

1987இல் உலக சுகாதார மன்றம் ஏப்ரல்7, 1988ஐ உலக புகைக்காத நாளாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றீயது. பின்னர் 88இல் மீண்டும் மே31 தேதியை புகையிலை மறுப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் பாவிக்க தீர்மானித்தது. இன்றைய தினம் பொதுமக்களின் கவனத்திற்கு புகையிலை உபயோகிப்பதன் ஆபத்துக்களையும் அதைத்தவிர்ப்பதால் மீளும் நோய்களைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறோம். மாசில்லா காற்றை சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை, அது புகைபிடிக்கும் சிறு பான்மையினரால் பறிக்கப்படுவது வருந்தத்தக்கது.

புகை பிடிப்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கெடுதல். இன்றே விலக்குவீர்,வாழ்வீர் பல்லாண்டு !!

உலக தொலைதொடர்புநாள் - மே 17

மே 17 - தொலைதொடர்பு பொறியாளர்களுக்கு இது ஒரு முக்கிய நாளாகும். இன்றைய தினம் பன்னாட்டு தொலைதொடர்பு சங்கம் ( International Telecom Union - ITU) அமைக்கப் பட உறுப்பினர் நாடுகள் கையொப்பமிட்ட நாளாகும். இதனை தகவல்நுட்ப சமூக நாளாகவும் கொண்டாடுகிறோம்.

இந்த நாளையொட்டி ITUவின் தலைமை செயலர் ஹமாடுன் டூர் வெளியிட்டுள்ள உரையில் இந்த வருடதினத்தை இளைஞர்களுக்கானதாக பரிந்துரைக்கிறார். வளர்ந்துவரும் தகவல்நுட்ப சமூகத்தில் பெரும்பங்கு வகிப்பதும் அவர்கள்தான், அதிக பயன்பெறுவோரும் அவர்கள்தான். ஆதலினால் உலகின் எல்லா இளைஞர்களுக்கும் சரிசமனாக இந்த வாய்ப்பு கிட்டவைப்பதே தொலைதொடர்பு மற்றும் தகவல்நுட்ப அமைப்புக்களின் தலையாய கடமையாகும். ஒவ்வொருநாட்டின் சிறுவர்களும், முக்கியமாக வசதியற்றவர்களும் விளிம்புநிலையில் இருப்பவர்களும் புதிய தகவல் சமூகத்தில் பங்கு பெறவைப்பது நமது கடமையாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைசெயலர் பான் கி மூனின் செய்தி இது
இந்நாளை ஒட்டி தொலைதொடர்பு மற்றும் தகவல் நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலியவர்களை விருதுவழங்கி கௌரவிப்பது வழக்கம்.

இந்த வருடம் மூன்று பேர்கள் விருது பெறுகிறார்கள்்:
1. டொமினிகன் குடியரசின் அதிபரின் மனைவி மார்கரிட்டா செடெனொ டெ பெர்னாண்டஸ்: சட்ட நிபுணரான இவர் டிஜிட்டல் சொலிடாரிடி பண்ட் (DSF) என்ற அமைப்பில் பங்கு கொண்டு தமது நாட்டின் தகவல்நுட்ப வேற்றுமையைக் களைந்தமைக்காக இந்த விருது வழங்கப் படுகிறது. மிக வறிய இடங்களில் 135 குடியமைப்பு நுட்ப மையங்களை ( Community Technology Centers) நிறுவி ஒவ்வொரு மையமும் அதனை சார்ந்த மக்களுக்கு கணினி அறிவை புகட்டி அவர்களது சமூக,நாகரீக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த மையங்கள் மூலம் பெண்டிரும் சிறுமிகளும் புது நுட்பங்களை கற்று சமூகத்தில் ஒன்றிடவும் பாலிய சமநிலை எய்தவும் அரசு திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.


2. மாஸ்கோ நுண்ணலை ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி முனைவர் மார்க் கிரிவோசீவ்: தொலைக்காட்சி சேவைகளில் நுட்ப மேம்பாட்டிற்காக இவருக்கு விருது வழங்கப் படுகிறது.தொலைக்காட்சி நுட்பமுறைகளின் ஒருங்கிணைப்பிற்கும் புதிய நெறிமுறைகள் உருவாவதற்கும் ITU குழுமங்களில் பங்காற்றி HDTV, digital broadcast standards ஆகியவற்றின் மூலம் கணினி வேற்றுமையை (Digital Divide) நீக்கி வாய்ப்புக்களை உருவாக்க உறுதுணை புரிந்தார்.

3.மொசில்லா கார்ப்பொரேஷன்: உலகின் இணைய தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்குவித்து பங்காற்றியமைக்காக மொசில்லா நிறுவனத்தின் தலைவரும் CEOவுமான மிட்ச்செல் பேகர் மூலமாக அந்நிறுவனத்திற்கு வழங்கப் படுகிறது.மொசில்லா என்பது வழமையான மென்பொருள் நிறுவனம் அல்ல; அது ஒரு உலகளாவிய திறமூல குழுமம்.இதன் மென்பொருட்கள் திறமூலமாகவும் விலையின்றி கிடைப்பதானாலும் தனக்கென வணிகமுத்திரை (trademark) வைத்துக் கொண்டு தன் தரம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. முக்கிய மென்பொருட்கள்: மொசில்லா, பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட். கணினி வேற்றுமையை அகற்ற மொசில்லாவின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது.

தொலைதொடர்பு மற்றும் தகவல் நுட்ப துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இளைஞர்களை இணைத்திட புதிய நுட்பங்களை அவர்களுக்கு எடுத்துச் செல்வோம்.