மாநகராட்சி தேர்தல் !

மும்பை பெருநகர நகராட்சி கழகத்தின் (Brihanmumbai Municipal Corporation - BMC) தேர்தல் நாளை (பிப். 1) நடைபெறவுள்ளது. கடந்த நாற்பது நாட்களாக நடந்துவந்த தேர்தல் முழக்கங்களிலிருந்து இன்று சற்று அமைதி கிடைத்துள்ளது.சிவசேனா-பிஜேபி யிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தேசிய காங்கிரஸ் கட்சியும் (Nationalist Congress Party of Sharad Powar) கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளன. மும்பை தவிர தானே, உல்லாஸ்நகர், புனெ, நாக்பூர், பிம்ப்ரி, சின்ச்வாட், நாசிக், சோலாப்பூர், அகோலா மற்றும் அமராவதி நகராட்சிகளுக்கும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

சிவசேனா-பிஜேபி கூட்டணி வலுவாக தோற்றமளித்தாலும் தாக்கரே குடும்பப்பகையினால் பிளவுபட்டுள்ள சேனாவின் பலம் ஐயத்திற்குறியதே. வெளிவந்து மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற கட்சியை ஆரம்பித்துள்ள ராஜ் தாக்கரே இளம் வேட்பாளர்களை நிறுத்தி களம் காணவிருக்கிறார். சிவசேனையிலிருந்து வெளிவந்து கலக்கிக் கொண்டிருக்கும் ரானேயின் தாக்கம் மும்பையில் எவ்வளவு என்பதும் புரியாத புதிர்.

BMC நடப்பு ஆட்சியின்பால் உள்ள வெறுப்பை பயன்படுத்திக் கொண்டு எளிதாக வெல்லக்கூடிய நிலையை தங்கள் விட்டுக் கொடுக்காத அரசியலால் மாநில ஆளும் கூட்டணி பிரிந்து காங்கிரஸும் என்சிபியும் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இதனால் 227 தொகுதிகளில் ஒருவருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 'தூக்கு' நகராட்சியவை அமையும் வாய்ப்புள்ளது. தென்னகத்திலிருந்து அ.இ.அ.தி.மு.க மூன்று இடங்களில் (திருமதிகள் சுமதி, நாஃபிசா சாயித் மற்றும் மகாலட்சுமி நாய்டு ) போட்டியிடுகின்றது.

நகராட்சி குறைகளைத் தவிர இட ஒதுக்கீடு, கைலாஞ்சி சம்பவங்கள், மண்ணின் மைந்தர்/ வெளிமாநிலத்தவர், வெளிநாட்டு சட்ட அனுமதியில்லாத அகதிகள் (பங்களாதேசிகள்) எனப் பல பிரச்சினைகள் கவனம் பெற்றன.

தில்லி சாலைகளை கண்டு ஞானோதயம் பெற்றதுபோல நடிகை ப்ரீடீ ஜிந்தா மும்பை சாலையின் குண்டும் குழியும் மாற அனைவரும் வாக்களிக்க வேண்டியிருக்கிறார். ஹேமமாலினி "மும்பையின் வாழ்வியல் பிடிக்கவில்லையென்றால் உங்கள் மாநிலங்களுக்கே செல்லுங்கள்" என்று வட இந்தியருக்கு 'அறிவுரை' கூறி பலத்த பிரச்சினையை எழுப்பி பின் பின்வாங்கினார்். பால்தாக்கரே முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சி கருத்துகணிப்பை ஆதாரமாகக் கொண்டு இல்லாத ஒரு பிரச்சினையான மும்பையை மகாராஷ்ட்ரத்திலிருந்து பிரிக்கக் கூடாது என்று முழங்கியவர், தனது இந்துத்வா பாணி பிரசாரத்தில் முகமது அஃப்சலின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் நாளெடுத்துக் கொள்வதை குறிப்பிட்டு, அவரது நீள்முடி கண்ணை மறைப்பதாக திங்களன்று திருவாய் மலர்ந்திருக்கிறார். ஒரு கண்ணியமான தலைவரை் தங்கள் அழுக்கு அரசியலில் இழுத்து சேறு பூசுவது வாடிக்கையாகிவிட்டது.

சூடான அரசியல் வாதங்கள் ஓய்ந்து நாளை வாக்களிப்பு, மறுநாள் முடிவுகள். வாக்குச்சாவடி வன்முறையில் சென்னையை விட பலவருடங்கள் பிந்தி உள்ளதால் அமைதியாக நடைபெறும் என நம்புகிறோம். என்ன, நீண்ட வார இறுதி எடுத்துக்கொண்டு அடுத்துள்ள மகிழ்விடங்களுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் :)

2 மறுமொழிகள்:

நாமக்கல் சிபி கூறுகிறார்

//வாக்குச்சாவடி வன்முறையில் சென்னையை விட பலவருடங்கள் பிந்தி உள்ளதால் அமைதியாக நடைபெறும் என நம்புகிறோம்.//

நல்லது! கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்!

மணியன் கூறுகிறார்

வாங்க சிபி, இன்று தெரியும் நிலமை :)