மாற்று மருத்துவமுறைகள்

சமீப காலமாக மாற்று மருத்துவ முறைகள் (Alternate Medicine) பிரபலமாகி வருகின்றன. நமது பாரம்பரிய இந்தியா வின் ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகள் பல சித்தர்களாலும் பெரியோர்களாலும் பல்லாண்டு சோதனை செய்யப்பட்டு அனுபவத்தால் திருத்தப் பட்டு சீராக்கப் பட்டுள்ளது. இருந்த போதிலும் அவை ஆங்கில மருத்துவமுறைகள் போல தரப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சோதிக்கப்படவில்லை என இந்திய மருத்துவ கழகம் குறை கூறுவதுண்டு. முழுவளாவிய (holistic)மருத்துவமுறை என யோகா, தனிமையை தவிர்த்தல் முதலியவற்றின் இன்றியமையாமையும் உணரப் பட்டுள்ளது. கூட்டுக் குடும்பங்களும் கூட்டுப் பிரார்த்தனைகளும் எத்தனை தூரம் depressionயையும் இருதய தமனி வியாதிகளையும் தவிர்க்க உதவி புரிகின்றன என்று நாளும் கட்டுரைகள் வெளிவருகின்றன.

இந்தவித சூழ்நிலையை வியாபார நோக்கில் பயன்படுத்திக் கொள்ள பலர் கிளம்பியுள்ளனர். ஹிமாலயா மற்றும் டாபர் போன்ற நிறுவனங்கள் தரகட்டுப்பாடுடன் மருந்துகளை தயாரிக்கின்றனர்.ஆங்கில மருத்துவர்களும் இவற்றை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் சில நிறுவனங்கள் வாய்மொழி வழியாக (MLM) வெளிநாட்டு இயற்கை மருந்துகளை (சிவப்பு காளான் போன்றவை) அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.இவற்றின் பயன்களும் பின்விளைவுகளும் அறியாத நிலையில் மக்கள் விற்பவரின் அனுபவத்தை நம்பி வாங்குகிறார்கள். அவர்கள் மோசம் போகிறார்களா என்பதை மருத்துவ கழகம் ஆராய்ந்து எச்சரிக்கை செய்யவேண்டும்.

இதைத் தவிர பழங்கால மருத்துவ முறைகளில் முறையாக பயிற்சி பெறாதவர்களும் ஊடகங்களில் ஆடம்பர விளம்பரங்களால் மக்களை ஈர்த்து ஏமாற்றுகிறார்கள்.

மருத்துவ கட்டுரைகள் மூலம் வணிக நிறுவங்களின் விற்பனையை கட்டுப்படுத்த முடிகிறது. மக்கள் பத்திரிகையில் எது வந்தாலும் அதனை அப்படியே நம்பி விடுகிறார்கள். கெல்லாக்ஸ் வந்த புதிதில் அதன் கவர்ச்சியால் எல்லோரும் கார்ன்/கோதுமை flakesக்கு மாறினார்கள். இரும்புச்சத்து மூளைக்கு எவ்வளவு அவசியம் என்று அவர்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். பிறகு நார்சத்தினை வேண்டி ஓட்ஸிற்கு தாவ கெல்லாக்ஸ் விற்பனை சரிய இப்போது muesli க்கு அவர்கள் மாறி யுள்ளார்கள்.

இப்போது புதிதாக எளிமையான, எல்லாவற்றிற்கும் நிவாரணியாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடியதாக, சில வாய்மொழி வைத்தியங்கள் பரவத் தொடங்கியுள்ளன. முதலில் காலையில் எழுந்தவுடன் ஒரிரு லிட்டர் வெதுவெதுப்பான நீரை ஒரே வாயில் அருந்திவிட்டு மற்ற பணிகளை செய்யவேண்டியது. இதனால் நீரிழிவு,இரத்த அழுத்தம், குடல் அயர்ச்சி என்று எல்லா வியாதிகளும் பறந்தோடிடும் என்பார்கள். ஆனால் இதன் efficacy பற்றி ஒரு புள்ளிவிவரமும் இல்லை. ரொம்பக் கேட்டால் காசா பணமா, தண்ணீர்தானே பலன் இருக்கிறதோ இல்லையோ, ட்ரை பண்ணி பார்ப்பதில் என்ன தப்பு என்பார்கள். இப்படி ஒரே நேரத்தில் 2 லிட்டெர் தண்ணீர் குடிப்பது குடலுக்கு நல்லதா என்று தெரியவில்லை. இது வெற்றி பெறுவதைக் கண்ட சில எண்ணெய் வணிகர்கள் அடுத்ததாக காலையில் பல் விளக்கியபின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் (நல்லெண்ணெய், ஓலிவ் எண்ணெய்) கொப்பளிப்பது என்று ஆரம்பித்துள்ளனர். இதில் ஒரு வணிகர் ஆனந்த விகடன்,மங்கையர் மலர் என்று பல பக்க விளம்பரங்களுடன் இதனை மக்களிடம் கொண்டு செல்கிறார்.இவரின் கூற்றினை விளம்பர கௌன்சிலும் மருத்துவ கழகமும் பரிந்துரைக்கின்றனவா எனத் தெரியவில்லை.


எனவே மாற்று வைத்தியமுறைகளில் சில பயனுள்ள சிகிட்சை முறைகள் இருந்தாலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கின்றன. மக்களை சரியான திசையில் வழி காட்ட USFDA போல ஒரு தரக் கட்டுப்பாடு அமைப்பு அமைய வேண்டும்.அதுவரை அரசின் பொதுநலத்துறை பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் NBFC க்களிடம், ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தும்வரை, மக்கள் ஏமாந்ததைப் போல இங்கும் நடக்கும். பணம் போனால் சம்பாதிக்கலாம்.ஆள் போனால் என்ன செய்வது ?

நமது வலைப்பதிவர்களில் உள்ள மருத்துவர்களின் கருத்து என்ன ?

0 மறுமொழிகள்: